Last Updated : 16 Jun, 2015 12:15 PM

 

Published : 16 Jun 2015 12:15 PM
Last Updated : 16 Jun 2015 12:15 PM

கலை, சமூக அறிவியலுக்கு புது ரத்தம்

இந்தியர்களின் பொதுப்புத்தி காரணமாகச் சமூக அறிவியல் படிப்புகளும் கலைப் படிப்புகளும் ஓரங்கட்டப்பட்டுவிட்டன. கல்லூரியில் இடம் பிடிப்பதற்கான ஓட்டம் தொடங்கிவிட்டது. மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், மேல்நாட்டு படிப்பு போன்றவற்றைத் தாண்டி ஏதாவது நல்ல வாய்ப்புகள் இருக்குமா என்று பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றிலும் சமூகவியலிலும் இளங்கலை (பி.ஏ.) முடித்தால் குடிமை பணித் துறையில் ஒருவேளை வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். அதைத் தவிர அவற்றால் வேறு என்ன பலன் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

பனிப்போரின் விளைவு

ஒரு வரலாற்றாய் வாளராக அடிக்கடி என்னிடம் சில கேள்விகள் கேட்கப்படும்: முகலாயர்களின் வீழ்ச்சியைப் பற்றியோ, 1793-ம் ஆண்டு வெள்ளையர்களின் நிரந்தரக் குடியமர்வு பற்றியோ மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படித்துவிட்டு வந்தால் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடும்? என்பார்கள்.

பொருளாதாரம் நீங்கலாக, சமூக அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது மோசமான யோசனைதான் என்று பெரும்பாலானோர் நினைப்பதையே மேற்கண்ட கேள்வி பிரதிபலிக்கிறது. இந்த நிலை மாற ஆரம்பித்திருக்கிறதா?

சமூகவியல் படிப்புகளுக்கும் கலைப் படிப்புகளுக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில்தான். தனது செல்வாக்கை உலகெங்கும் விரிவுபடுத்த விரும்பிய அமெரிக்கா, உலகில் உள்ள மற்ற சமூகங்களின் சிந்தனைப் போக்கையும் அவர்களுக்கு எப்படிப்பட்ட சித்தாந்தங்கள் பிடித்திருக்கின்றன என்பதையும் பற்றி ஆராய்வதற்கு அதிக அளவில் பணத்தை முதலீடு செய்தது. இதற்காக ஃபோர்டு ஃபவுண்டேஷன், ராக்ஃபெல்லர் ஃபவுண்டேஷன் போன்ற அறக்கட்டளைகள் பல கோடிக் கணக்கான டாலர்களைச் செலவிட்டன.

சமூகவியல், கலையியல் துறைகளில் பயிலரங்குகள், மாநாடுகள், கல்வியியல் கருத்தரங்குகள் போன்றவை ஏராளமாக நடத்தப்பட்டன. இந்த முயற்சிகளால் நிறைய புத்தகங்கள், ஆய்வு வெளியீடுகள் போன்றவை வெளியிடப்பட்டன. அது மட்டுமல்லாமல், இன்றும் நம் மீது நீடித்த செல்வாக்கு செலுத்தும் கொள்கைகளும் கோட்பாடுகளும் அந்த முயற்சிகளால் உருவாயின. அறிஞர்கள் பலரும், ஆய்வுக் குழுக்களும், பல்கலைக்கழகங்களும் இந்த ராஜதந்திரச் செயல்திட்டத்தில் சிக்கிக்கொண்டன.

சுவரோடு வீழ்ந்த நிதி

பிற நாடுகளும், பிற சமூகங்களும் அதிகாரம், சித்தாந்தங்கள், அரசியல் போன்றவற்றை எப்படி எதிர்கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் நோக்கத்தில் சமூக அறிவியலும் கலையியலும் முன்னெடுக்கப்பட்டன.

ஜெர்மனியில் பெர்லின் சுவர் வீழ்ந்த பிறகு இதுபோன்ற ஆய்வுகளுக்குச் செலவிடப்படும் நிதி குறைய ஆரம்பித்தது. தேசத்தைக் கட்டமைத்தல், ஜனநாயகம், உலகமயமாதல், பன்மைக் கலாச்சாரம் போன்றவற்றின் பெயரில்கூடக் கல்வியியல் ஆய்வுகள் பழைய செல்வாக்கைச் செலுத்த முடியவில்லை.

வணிகமயக் கல்வி

கலைப் படிப்புகளுக்கான நிதியுதவி 2009-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரும் சரிவுக்குள்ளானது. 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்தம்தான் இதற்குக் காரணம் என்றாலும் 1990-களிலேயே வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்கிறது ‘ரிசர்ச் டிரெண்ட்ஸ்’ என்ற ஆய்விதழ். கல்வியைத் தொடர்ந்து வணிகமயமாக்கியதன் விளைவுதான் இது. பொறியியல் படிப்புகளோடு ஒப்பிடும்போது சமூகவியல் மற்றும் கலையியல் மாணவர்களுக்கு வழங்கும் கல்விக் கடன் பெருமளவுக்குக் குறைந்தது.

இந்தப் படிப்புகளின் பிரகாசம் குன்றிப்போனதற்குக் காரணம் என்ன? ‘தி யூனிவர்சிடி இன் ரூய்ன்ஸ்’ என்ற பிரபலமான புத்தகத்தில் பில் ரீடிங் என்பவர் முக்கியமான காரணம் ஒன்றைச் சொல்கிறார். தேசத்தின் சித்தாந்த உற்பத்தி மையங்களாக இருந்த பல்கலைக்கழகங்கள் தற்போது நுகர்வோர் சார்ந்த கழகங்களாக ஆகிவிட்டன என்கிறார் அவர். தேசத்தின் குடிமகனான பிரஜை-மாணவரை இப்போது நுகர்வோர்-மாணவராக ஆக்கியதன் மூலம் சமூகவியல் படிப்புகளின் வீழ்ச்சி பிரகடனப்படுத்தப்படுகிறது.

குறைப்பும் குரல்களும்

கலையியல் மற்றும் சமூகவியல் படிப்புகளுக்கு எதிராக நிலவும் மனப் பான்மையை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் 2013-ல் வெளியான எல்லா டிலானி என்பவரின் ஆய்வறிக்கை தோலுரித்துக்காட்டுகிறது. 2012-ல் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஆளுநர் கலையியல் மற்றும் சமூகவியல் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கலையியல் ஆய்வுகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த 10.3 கோடி ஆஸ்திரேலிய டாலர்களை 2013-ல் மருத்துவ ஆய்வுகளுக்கு ஒதுக்கி உத்தரவிட்டார். பிரிட்டனிலும் சமூகவியல், கலையியல் படிப்புகளின் கதி இதுதான்.

சமூகவியலும் கலையியலும் பல்வேறு நாடுகளில் புறக்கணிக்கப்பட்டுவரும் சூழலில் அவற்றின் முக்கியத்துவத்தை மீட்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எழுகின்றன. புவிவெப்பமாதல், பருவநிலை மாறுதல் போன்றவற்றுக்கான ஆய்வுகளெல்லாம் ஒருங் கிணைந்த அணுகு முறையை வலியுறுத்துகின்றன.

அதாவது, அறிவியலுடன் சமூக அறிவியலும் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டும் என்றும், உலகெங்கும் வளம் குன்றா வளர்ச்சி, பசுமை மேம்பாடு ஆகியவற்றை இதன் மூலம் பேச வேண்டும் என்றும் அந்த ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

‘ஃப்யூச்சர் எர்த்’ என்பது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சர்வதேச அறிவியல் முயற்சிகளில் ஒன்று. புவிவெப்பமாதல் முதலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் எல்லாத் துறை களையும் ஒருங்கிணைக்கும் ஒரு அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ‘ஃப்யூச்சர் எர்த்’ அமைப்பினர் தெரிவிக்கிறார்கள்.

இயற்கை அறிவியலைப் பின்னின்று செலுத்துவது அரசியல் வழிமுறைகள்தான் என்பது திரும்பத் திரும்ப உணர்த்தப் பட்டிருக்கிறது. நமது எதிர்கால அறிவியலைப் பற்றிப் புரிந்துகொள்வதற்குச் சமூகவியலும் கலையியலும் மிகவும் அத்தியாவசியமானவை.

இந்தியாவில் நடப்பதென்ன?

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக நடைமுறை என்பது இந்தச் சவால்களை யெல்லாம் எதிர்கொள்ளும் விதத்தில் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆய்வுகள், கற்பித்தல் போன்ற எல்லாமும் இங்கே ‘துணை வேந்தர் முறை’யைச் சார்ந்திருக்கின்றன.

முகலாய ஜாகிர்தாரி முறைக்கும் பிரிட்டிஷ் காலனிய அதிகாரவர்க்க முறைக்கும் இடையே நிகழ்ந்த திருமணம்தான் இந்த ‘துணைவேந்தர்’ முறை. நிர்வாக ஏணிப்படியில் மேலே போகப் போக வெளிப்படைத் தன்மையோ, பொறுப்பாகும் நிலையோ, அறிவு மலர்ச்சியோ முற்றிலுமாக வற்றிப்போகிறது.

நமது பல்கலைக்கழகத் தலைமைகளில் பெரும் தலைமுறை மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. புது ரத்தமும் புதுச் சிந்தனை யோட்டமும் பாய்ச்சப்பட வேண்டும். நிர்வாகத்தின் உச்சியில் இருப்பவர்களின் செயல்பாடு களையும் பங்களிப்பு களையும் மதிப்பிடுவதற்கான துல்லியமான அளவுகோல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்துக்கான அறிவுச் செல்வத்தை அளிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள சமூகவியல் மற்றும் கலையியல் படிப்புகள் மிகவும் நவீனமானால் பழையனவெல்லாம் தாமாகவே கழிந்துவிடும்.

-ரோஹன் டிசோஸா,

ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக இருக்கிறார்.

சுருக்கமாகத் தமிழில்: ஆசை © தி இந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x