Last Updated : 03 Jun, 2015 12:39 PM

 

Published : 03 Jun 2015 12:39 PM
Last Updated : 03 Jun 2015 12:39 PM

சோடாவில் என்ன இருக்கு?

மீராவுக்கு சோடா என்றால் கொள்ளைப் பிரியம். அவள் தந்தை மீராவுக்கு எத்தனை முறை சோடா வாங்கித் தந்திருக்கிறார் எனக் கணக்கே இல்லை. ஒரு முறை தெருவில் உள்ள கடையில் சோடா வாங்கித் தர சொல்லித் தந்தையிடம் மீரா கேட்டாள். அப்பொழுது, “ எப்போ பார்த்தாலும் சோடா குடிக்கிறீயே, இதப் பத்தி உனக்குத் தெரிஞ்ச அறிவியல் விஷயங்களைச் சொல்லு பார்ப்போம்” என்றார் அவள் அப்பா.

ஆகவே சோடா பற்றிய விவரங்களை அறியும் முயற்சியில் இறங்கினாள் மீரா. தனது வேதியியல் புத்தகம், ஒரு வெள்ளைத் தாள், பேனா ஆகியவற்றுடன் மேஜையில் அமர்ந்தாள். கணினியை ஆன் செய்து சோடா பற்றிய தளத்தைத் திறந்து வைத்துக் கொண்டாள். பின்னர் அறிவியல் விஷயங்களை மீரா எழுதத் தொடங்கினாள்.

ஆங்கிலேய வேதியியல் நிபுணரான ஜோசப் பிரியஸ்ட்லிதான் சோடாவைக் கண்டுபிடித்தார். ஆக்ஸிஜன் மற்றும் ஏனைய பல வாயுக்களைக் கண்டுபிடித்தவரும் இவர்தான்.

சோடா என்பது, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவைத் தண்ணீரில் கரைத்து, ஒரு பாட்டிலில் சீல் வைத்து மூடப்பட்டிருக்கும். கார்பன்-டை-ஆக்சைடிலிருந்து வளிமண்டலக் காற்றழுத்தத்தில் தண்ணீரோடு கலக்கப்பட்டுப் பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும்.

பாட்டிலின் சீலை உடைத்தால் என்ன நிகழ்கிறது என்பதை மீரா ஆராய்ந்தாள்.

பாட்டிலில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு அழுத்தமானது வளிமண்டலத்திலுள்ள அழுத்தத்தோடு கலக்கிறது. பாட்டிலின் வாய்ப் பகுதியில் அழுத்தப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு வாயு விரிவடையும்போது பாட்டிலில் உள்ள சோடா குளிரடைகிறது.

இப்படிக் குளிரடையும் தண்ணீரின் தட்பவெட்ப நிலை மிகவும் குறைந்த அளவில் இருக்கும். காற்றில் உள்ள நீராவியின் அழுத்தத்தினால், பாட்டிலின் வாய்ப் பகுதி பனி படர்ந்தது போல் காட்சியளிக்கும். சோடா பாட்டிலைத் திறந்தவுடன் அதிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயுவானது, குமிழ்களாக வெளியேறுகிறது.

பாட்டிலின் கீழ்ப் பகுதியில் காற்றழுத்தம் குறைவதால், கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகள் நுண் குமிழ் களை உருவாக்குகின்றன. கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகள் ஒன்று சேரும் பொழுது, குமிழ்கள் குறைவான காற்றழுத்தம் உள்ள இடங்களுக்குப் பரவுகின்றன. நுண் குமிழ்கள் பாட்டிலின் உட்பகுதியிலும், பாட்டிலில் உள்ள சிறிய துகள்களிலும் உருவாகின்றன.

பாட்டிலின் சீல் உடைக்கப்பட்டவுடன் பாட்டிலின் வாய்ப் பகுதியில் நுரை உருவாகிறது. சோடா தண்ணீரில் உப்பைக் கரைத்தால், தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளும், கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளும் பிரியும். அவ்வாறு பிரியும் பொழுது சோடா நீரானது உப்பில் உள்ள தாதுப் பொருட்களோடு கலக்கிறது. கார்பன்-டை-ஆக்சைடு வாயு சீக்கிரமாக வெளியேறுகிறது. அதனால்தான் பலரும் சோடாவில் உப்பைக் கலக்கிறார்கள்.

பாட்டிலைத் திறக்காமல், பாட்டிலின் வாய்ப் பகுதியில் விரலை வைத்துக் கொண்டு பாட்டிலை வேகமாக அசைத்தாலோ அல்லது சோடாவை வேகமாக ஒரு டம்ளரில் ஊற்றினாலோ, கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறு வேகமாக வெளியேறும். இதனால் அதிக அளவில் குமிழ்கள் உருவாகின்றன.

தந்தையிடம் சென்று சோடா பற்றி தான் எழுதியதை மீரா காட்டினாள். படித்துப் பார்த்த தந்தைக்கு ஒரே சந்தோஷம். மீரா கேட்காமலேயே பிரிட்ஜில் இருந்த ஒரு சோடா பாட்டிலை எடுத்து அவள் முன்னே நீட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x