Last Updated : 23 May, 2015 03:16 PM

 

Published : 23 May 2015 03:16 PM
Last Updated : 23 May 2015 03:16 PM

பெண் நலம் பேணுவோம்!

மாறி வரும் உணவுப் பழக்கம், பணி சுமை, பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கை, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை நோய்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துவிடுகின்றன. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதுதான் என்றாலும் பெண்கள் அதிகம் சந்திக்கும் நோய்களையும், பாதிப்புகளையும், பிரச்சினைகளையும் உலகச் சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இந்தச் சர்வதேசப் பெண்கள் நலச் செயல்பாட்டு நாளில் அவற்றைத் தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கையாக இருப்போம்:

புற்று நோய்

# மார்பகப் புற்று நோயும் கர்ப்பப்பை வாய் புற்று நோயும் பெண்களை அதிகம் தாக்குகின்றன.

# இந்த நோய்களை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் மட்டுமே முழுமையாகக் குணப்படுத்த முடியும். சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி உலகில் ஒவ்வோர் ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பகப் புற்று நோய்களால் தலா 5 லட்சம் பெண்கள் உயிரிழக்கிறார்கள்.

# ஏழை, வளரும் நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. புற்று நோயைக் கண்டறியவும் தடுக்கவும் சிகிச்சை பெறவும் அதிகச் செலவு ஆவது இந்த நாடுகளில் உள்ள பெண்களுக்கு இன்னொரு பிரச்சினை.

#அதேநேரம் கர்ப்பப்பை வாய் புற்று நோயைத் தடுக்க ஹுயுமன் பாபிலோமா வைரஸைத் தடுக்கும் தடுப்பூசி உள்ளது.

மகப்பேறு நலம்

# 15 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களில் மூன்று பேரில் ஒருவர் பாலுறவு, குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

# வளரும் நாடுகளில் பாதுகாப்பற்ற பாலுறவுதான் ஏராளமான பெண்களுக்கு நோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது.

மன நலம்

# கர்ப்பக் காலத்திலும், மகப்பேறு காலத்திலும் பெண்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் தன்மை இப்போது மேம்பட்டுள்ளது. ஆனால், இது பரவலாகவில்லை.

# 2013-ம் ஆண்டில் கர்ப்பக் காலத்திலும் மகப்பேறு காலத்திலும் 3 லட்சம் பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

# குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த மரணங்களைத் தவிர்த்திருக்கலாம்.

ஹெச்.ஐ.வி. பாதிப்பு

# கடந்த 30 ஆண்டுகளாக உயிர்க்கொல்லியாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது எய்ட்ஸ் நோய். இந்த நோயால் இளம் பெண்கள் அதிக அளவில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

# ஏழை, வளரும் நாடுகளில் உள்ள 20 முதல் 59 வயது வரையிலான பெண்களைப் பாதிக்கும் முக்கிய நோயாக எய்ட்ஸ் உள்ளது.

# ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்கள், சமூகப் புறக்கணிப்பு காரணமாக முறையான சிகிச்சை பெற முடியாமல் தவிக்கிறார்கள். காசநோயும் அவர்களைக் கடுமையாக வாட்டுகிறது.

பாலுறவு தொற்று

# பால்வினை நோய்களைத் தடுப்பதும், சிகிச்சை பெறுவதும்கூட முக்கியமாக மாறியுள்ளது. ஆனாலும் வெட்டை, சிபிலிஸ் என்ற தீர்க்க முடியாத பால்வினை நோய்களால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்கு 90 ஆயிரம் சிசுக்களும் உயிரிழக்கின்றன.

வன்முறை

# வாழ்க்கைத் துணைவரால் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் மிகவும் அதிகம். 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் மூன்று பேரில் ஒருவர் இப்படி வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இதை வன்முறை என்று கூறப்பட்டாலும், அது மனநல ரீதியிலான பாதிப்புதான்.

# வெளி ஆண்களால் பாலியல் ரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீண்ட காலமோ அல்லது சில காலமோ பாதிக்கப்படுகிறார்கள்.

மன நலம்

# ஆண்களைவிட பெண்களே மன அழுத்தம், பதற்றம், உடல் சார்ந்த அம்சங்களால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

# பெண்களுக்குப் பொதுவாக ஏற்படக்கூடிய மன அழுத்த பாதிப்பு அவர்களைத் தற்கொலைவரை கொண்டு போய்விடுகிறது. இந்தப் பாதிப்பால் 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள்வரை பாதிக்கப்படுகிறார்கள்.

# மன ரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கு நம்பிக்கையும் உடனடி ஆலோசனையும் அவசியத் தேவை.

தொற்றா நோய்கள்

# வாழ்க்கை முறை நோய் என்றழைக்கப்படும் இதயநோய், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம், நீரிழிவு, பல்வேறு புற்று நோய்கள், ஞாபக மறதி நோய் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் மூலம் பெண்கள் 70 வயதைத் தொடும் முன்பே மரணத்தைத் தழுவுகிறார்கள்.

# 2012-ம் ஆண்டு நிலவரப்படி இந்த நோய்கள் மூலம் 47 லட்சம் பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஏழை, வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களே.

# சாலை விபத்து, புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், போதை மருந்துப் பழக்கம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளாலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

# வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலம் இந்தப் பாதிப்புகளில் இருந்து பெண்கள் தற்காத்துக்கொள்ள முடியும்.

பதின்ம வயது பாதிப்பு

# பதின்ம வயதுப் பெண்கள் பலருக்கும் பாலுறவு, குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சினைகள் பெரும் சவாலாக உள்ளன. பால்வினை நோய்கள், ஹெச்.ஐ.வி. மற்றும் கர்ப்பம் போன்ற பிரச்சினைகளும் இதில் அடக்கம்.

# ஒவ்வோர் ஆண்டும் 20 வயதுக்கு உட்பட்ட பதின்ம வயதுப் பெண்களில் 1.30 கோடி பேர் குழந்தைக்குத் தாயாகிறார்கள்.

# இளம் வயதில் கர்ப்பமடைவதாலும், குழந்தை பெறுவதாலும் பல பெண்கள் உடல்நிலை மோசமடைந்து துர்மரணத்தைத் தழுவுகிறார்கள். பாதுகாப்பற்ற கருக் கலைப்பு மூலமும் பாதிக்கப்படுகிறார்கள்.

முதுமை காலப் பிரச்சினை

# ஞாபக மறதி நோயும் மூதாட்டிகளைப் பாதிக்கும்போது பிரச்சினை தீவிரமாகிவிடும். பல மூதாட்டிகள் மோசமான உடல் உபாதைகளுக்கு ஆளாக, இதுவும் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x