Published : 30 May 2015 02:26 PM
Last Updated : 30 May 2015 02:26 PM

நரம்பு பாதிப்பு இருந்தால் பார்கின்சன் வருமா?

பார்கின்சன் நோய் எந்த வயதுடையவர்களைத் தாக்கும்? எந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டவர்களை இது தாக்கக்கூடும்? எனது நெருங்கிய உறவினருக்கு நரம்புப் பிரச்சினை இருந்தது. இப்போது பார்கின்சன் பாதிப்பு வந்துவிட்டது. எனக்கும் நரம்புப் பிரச்சினைகள் உண்டு. என்னையும் பார்கின்சன் பாதிக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.

- ஆரிப் கான், ஈக்காட்டுத்தாங்கல்.

பார்கின்சன் (Parkinson - நடுக்கவாதம்) என்பது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும், நாட்பட்ட அசையும் தன்மையைப் பாதிக்கிற ஒரு நோய் இது. இந்த நோயானது தீவிரமடைந்து, நாளடைவில் மிகவும் மோசமான நிலையை ஏற்படுத்தும். லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.

இதற்கான துல்லியமான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இந்நோய்க்குப் பூரணமான சிகிச்சையும் இல்லை. மருந்துகளைக் கொடுத்தால் கட்டுப்படுத்தலாம். இதற்கென்று நவீன அறுவை சிகிச்சைகள் வந்துள்ளன.

நோய்க்கான காரணம்

Nerve cells என்று சொல்லக்கூடிய நியூரான் நரம்புத் திசுக்களைப் பாதித்து இந்நோய் உருவாகிறது. இந்த நோயால் மூளையில் substantia nigra என்ற பகுதியில் உள்ள நரம்புத் திசுக்கள் அழிகின்றன. அந்த இடத்தில்தான் நரம்பு செயல்பட்டு dopamine என்று சொல்லக்கூடிய புரதம் உருவாகிறது. இது மனிதனின் அசைவுகளையும், செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. Dopamine உருவாகுவது குறைவதால் இந்த நோய் ஏற்படும்.

இந்நோயில் ஒவ்வொரு நோயாளியும் அனுபவிக்கும் அறிகுறிகள் வேறுபடும். பொதுவாகக் கால், கை, தாடை, முகம் போன்றவற்றில் நடுக்கம் காணப்படும். இந்த நோயாளி செயல்பாடுகளில் வேகம் குறைந்ததாக உணர்வார். கை, கால்கள், முதுகுப் பகுதியில் இறுக்கம் (Rigidity) காணப்படும். இவர்களுக்கு நேர்கோட்டில் செல்வது, ஒரு செயல்பாட்டைக் கட்டுக்கோப்பில் வைத்திருப்பதில் சிரமம் இருக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் alpha synuclein என்ற விஷயம் நடு மூளை, மூளைத் தண்டுவடம், கண் பகுதிகளில் உள்ளது. இதற்கும், Parkinson நோய்க்கும் தொடர்பு இருப்பதாக நம்புகிறார்கள். துல்லியமாக இதைக் கண்டுபிடிப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், அனுபவம் உள்ள மருத்துவர் இந்நோயை அறுதியிட்டுக் கூற முடியும். இப்போது movement disorder specialist என்ற தனி நிபுணர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் நரம்பியல் அறிகுறிகளை நன்றாகப் பரிசோதித்து இந்த நோயைக் கண்டுபிடிக்கிறார்கள். ஒருவருடைய முக பாவனை எப்படி இருக்கிறது, உட்கார்ந்த நிலையில் கையில் நடுக்கம் உள்ளதா? கையை நீட்டி விரித்த நிலையில் நடுக்கம் உள்ளதா? கைகளில், கழுத்தில் இறுக்க நிலை உள்ளதா? நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்திருக்க முடிகிறதா? நடக்கும்போது கையை வீசி நடக்கிறாரா, தடுமாறுகிறாரா என்பதையெல்லாம் பரிசோதிப்பார்கள். ஒரு சில நேரம் levodopa என்ற மருந்தைத் தற்காலிகமாகக் கொடுத்து நோயை உறுதி செய்வார்கள். Parkinson நோயைக் கண்டுபிடிப்பதற்குத் தனிப் பரிசோதனைகள் என ஒன்றும் இல்லை.

பெயர்க் காரணம்

ஒரு சிலருக்கு உடலில் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படும், பின்பு மறுபகுதிக்கும் பாதிப்பு தொடரும். இந்த நோயை Parkinson என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அதனால், அவருடைய பெயரிலேயே நோய் அழைக்கப்பட்டது. இதில் குறிப்பாக 70% பேருக்கு உட்கார்ந்த நிலையிலோ, கைகளிலோ, கால்களிலோ, தாடையிலோ, முகத்தின் ஒரு பகுதியிலோ நடுக்கம் ஏற்படும்.

ஒரு விரலில் மட்டும் நடுக்கம் ஏற்படும். இதை resting tremor என்று சொல்வார்கள். இது எந்த வேலையும் செய்யாதபோது ஏற்படுகிற நடுக்கம். மன அழுத்தத்தாலோ, உணர்ச்சிவசப்படுவதாலோ இந்த நடுக்கம் ஏற்படலாம். அடுத்தது, செயல்படும் வேகம் குறையும், இதை bradykinesia என்று சொல்வார்கள்.

Parkinson நோயில் துரிதமாகச் செயல்படும் நிலை குறையும். முக பாவனைகள் குறையும். பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும். தசைகள் இறுகிக் காணப்படும். அசைவு தடைபடும். கழுத்து, தோல், கால் போன்றவை இறுகிக் காணப்படும். நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். உடல் பின்னால் சரிவதற்கும் வாய்ப்பு உண்டு. நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ, நிற்கும்போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு retropulsion என்று பெயர்.

அது மட்டுமல்லாமல் இந்த நோயாளிகள் கால் தரையில் பதியாதது போல உணர்வார்கள். முதல் அடி எடுத்து வைத்த பிறகுதான் சரியான உணர்வு ஏற்படும். படி ஏறும்போதும் இதை உணரலாம். முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாதது போல, முகத்தை வைத்திருப்பார்கள். வேகமாகப் பேச முயற்சிப்பார்கள். இவர்கள் சிறிது கூன் போட்டு முன்னோக்கிச் சரிவது போன்றும் காணப்படுவார்கள். ஒரு சிலருக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல் பேச்சுகள் மாறும்.

மலச்சிக்கல், மணங்களை உணர இயலாமை, தூக்கத்தில் குறைபாடு, மூத்திர வெளியேற்றத்தில் குறைபாடு, மனச் சோகம் போன்றவை காணப்படலாம். இந்நோய் 60 வயதுக்கு மேல் பொதுவாக வரும் என்றாலும், தற்போது 45 வயதிலேயே பலருக்கும் காணப்படுகிறது. ஒரு சிலரின் குடும்பத்திலேயே இந்நோய் காணப்படுகிறது. அதிகமான பூச்சிக்கொல்லி பயன்பாடு இந்நோய்க்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நோயை மென்மை, நடுத்தரம், தீவிரம் என்று வகை பிரிப்பதும் உண்டு.

நோயின் வகைகள்

Parkinsonism என்று ஒரு வகை உண்டு. சில மருந்துகளாலும், வேறு சில நரம்பு மண்டல நோய்களாலும் Parkinson போன்ற அறிகுறிகளைக் காட்டும் நோய் இது. Lewy body என்ற மறதி நோய், மூளை காய்ச்சல் நோய், பக்கவாதத்தின் சில நிலைகள், கார்பன் மோனாக்சைடு நச்சு, பாதரச நச்சு போன்றவை இந்த நோய்க்குக் காரணம்.

இதிலும் முகத்தில் உணர்ச்சியின்மை, எழுந்திருப்பதில் சிரமம், நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும், நடுக்கம் ஏற்படும், குரல் மாறுபடும். இதற்கான காரணங்களைச் சரியாகக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்குத் தினமும் வேலைகளைச் செய்வதிலும், உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்படலாம். ஒரு சில நேரங்களில் இதை atypical parkinson disease என்றும் சொல்வார்கள். இது அல்லாமல் multi system atrophy, shy drager syndrome என்றும் உண்டு.

ஆயுர்வேதப் பார்வையில்

ஆயுர்வேதத்தில் ஒருவருடைய அசைவு, சலனம் என்று அழைக்கப்படுகிறது. இதை dynamism என்று சொல்வோம். இந்த அசைவுகளுக்குக் காரணமாக வாயு இருக்கிறது. இதில் குறிப்பாகப் பிராண வாயு, உதான வாயு போன்றவை ஒரு மனிதனுடைய அசைவுகளையும், பேச்சாற்றலையும், அறிவையும் நிலைபெறச் செய்கின்றன. கசப்பான உணவு, துவர்ப்பான உணவு, கார்ப்புடைய உணவு, மலச்சிக்கல், குறைந்த அளவில் உண்ணுதல், அதிக அளவில் உண்ணுதல், அஜீரண நிலையில் சாப்பிடுதல், சாப்பிட்டுவிட்டு உறங்குதல், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல், மனநிலை தடுமாற்றம், சக்திக்கு மீறிய செயல்களைச் செய்தல், மரபணு மாற்றம் ஆகியவற்றால் வாத தோஷம் தன்னிலை இழந்து உடலின் மஜ்ஜா தாதுவைப் பாதித்து நடுக்க வாதம், கம்ப வாதம் என்கிற நோயை உருவாக்குகிறது. இந்த நோயைக் குணப்படுத்துவது அரிது.

இந்த நோயில் முதலில் வாதத்தின் இருப்பிடமாகிய பெருங்குடலில் வாதத்தைக் கீழ்முகமாக இயக்குவதற்கு, மலச்சிக்கலை மாற்றுகிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

ஆயுர்வேத சிகிச்சைகள்

ஆமணக்கு வேர் கஷாயம், வைச்வானர சூர்ணம், தான்வந்தரக் குளிகை, கடுக்காய் சேர்ந்த அபயாரிஷ்டம், பூண்டு லேகியம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும்.

பின்பு கருங்குறிஞ்சி சேர்த்துக் காய்ச்சப்பட்ட எண்ணெயை உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். பிண்யாக தைலத்தையும் உள்ளுக்குக் கொடுக்கலாம்

அதன் பிறகு தான்வந்தர தைலம், பிரபஞ்சன தைலம் போன்றவற்றைத் தேய்த்து ஆவி பிடித்து நன்றாக மலசுத்தி செய்து வஸ்தி என்று சொல்லக்கூடிய ஆசனவாய் சிகிச்சை (ஆசனவாய் வழியாக மருந்துகளைச் செலுத்தி மலக்குடலை சுத்தி செய்கிற சிகிச்சை) போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

ஸகசராதி தைலத்தைப் பஞ்சினால் முக்கித் தலையில் வைப்பது, மூக்கில் நஸ்யம் செய்வது போன்றவற்றைச் செய்துவரலாம். இது அல்லாமல் கழற்சிக்காய், பூனைக்காலி வித்து, குறுந்தட்டி வேர் ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் காய்ச்சிக் கொடுப்பது சிறந்தது.

அஷ்டவர்க்கம் என்று சொல்லக்கூடிய சிற்றாமுட்டி, கருங்குறிஞ்சி, ஆமணக்கு வேர், சுக்கு, சிற்றரத்தை, தேவதாரம், நொச்சி வேர், வெள்ளை பூண்டு ஆகியவற்றைக் கஷாயமாக வைத்துக் குடிப்பதும் நல்லது.

சிறுதேக்கு சூரணத்தை 10 கிராம் எடுத்துப் பாலில் கலந்து அருந்துவது சிறந்தது.

சித்த மருத்துவத்தில் கருப்பு விஷ்ணு சக்கரம் மாத்திரை இரண்டு வீதம் இரண்டு வேளை சாப்பிடலாம்.

நாரசிங்க லேகியம், தாது கல்ப லேகியம், ஓணான் சுடர் தைலம் போன்றவை சிறந்த மருந்துகள்.

வாணி கிருதம், கல்யாணக கிருதம், பஞ்சகவ்ய கிருதம் போன்றவையும் ஓரளவுக்குப் பலன் தரக்கூடியவை

பூனைக்காலி வித்துக்கு இந்த நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதில் இயற்கையாகவே dopamine இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு 30 கிராம்வரை வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.

இந்த நோயைப் பூரணமாக குணப்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x