Last Updated : 12 May, 2014 12:00 AM

 

Published : 12 May 2014 12:00 AM
Last Updated : 12 May 2014 12:00 AM

மனதுக்கு இல்லை வயது!- முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும்

முதுமையில் மனநலம் காக்க முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராஜன் வழங்கும் ஆலோசனைகள்:

முதுமையில் உடல் நலமும், மனநலமும் முக்கியம். முதுமையில் உடல் நலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மனநலத்துக்கு கொடுப்பதில்லை. இதனால் மனச்சோர்வு, பதற்றம், தூக்கமின்மை, பசிக்குறைவு, எடைக்குறைவு ஏற்படுகிறது. இதை முதுமையின் விளைவு என முதியவர்கள் நினைக்கின்றனர்.

மனநலம் சார்ந்த பிரச்சினையால் மனச்சோர்வு, பதற்றம் மட்டுமின்றி மறதி நோயும் ஏற்படும். புற்றுநோய், மூட்டு வலி, ஆஸ்துமா, இதய நோய், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், அவர்கள் நாம் மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டியுள்ளதே என்ற மனச்சோர்வு இருக்கும்.

குடும்பத்தில் நிதி சார்ந்த பிரச்சினைகள், பிள்ளைகள் தனிக்குடித்தனம் செல்வது, கையில் பணம் இல்லாமை மற்றும் வீட்டில் தனியாக இருப்பது போன்றவையும் முதியவர்களின் மனச்சோர்வுக்கு காரணமாக இருக்கிறது. நாட்டில் 3-ல் ஒரு முதியவர் இளைஞர்களால் அவமதிக்கப்படுகிறார்கள்.

முதலில் மகனாலும், அதற்கு அடுத்தபடியாக மருமகளாலும் அதிகமாக முதியவர்கள் அவமதிக்கப்படுகின்றனர்.

நோய், பணம், அவமதிப்பு போன்றவைகளால்தான் முதியவர்களின் மனநலம் அதிகம் பாதிக்கிறது. முதுமையின் எதிரி தனிமை. அதனால், முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும்.

50 வயது ஆன உடனேயே ஓய்வுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். அதன்படி ஓய்வு காலத்தை கழிக்க வேண்டும். தினமும் காலையில் கட்டாயமாக தியானம் செய்ய வேண்டும். மூளையில் உறங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான நியூரான் செல்களை எழும்பும் சக்தி தியானத்துக்கு உள்ளது.

அதே போல ஐம்புலன்களையும் அடக்கும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். இந்த பயிற்சி முதுமையிலும் இளமையான தோற்றத்தை உண்டாக்கும். நம்முடைய கஷ்டங்கள் மற்றும் குறைகளை மறந்துவிட்டு, மற்றவர்களின் கஷ்டங்கள் தீருவதற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் நம்முடைய கவலைகளும், குறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக போய்விடும். நம்பிக்கை உள்ளவர்கள், ஆன்மிகத்தில் அதிகமாக ஈடுபடலாம். மன சந்தோஷத்துக்கு நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கலாம். மொத்தத்தில் தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீரைப் போல வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

மனநலத்திற்கு நடைப்பயிற்சி செய்யலாம். மூளைக்கு ஏற்ற உணவான பசலை கீரை, ஆப்பிள், வெங்காயம், ஸ்டிராபெரி, குளத்து மீன், முட்டை மஞ்சள் கரு சாப்பிட்டால் மனநலத்துக்கு நல்லது.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x