Last Updated : 01 May, 2015 12:47 PM

 

Published : 01 May 2015 12:47 PM
Last Updated : 01 May 2015 12:47 PM

கிரேசியைக் கேளுங்கள் 31 - கிச்சன் கிங்!

நிர்மலா ராகவன், ஹ்யூஸ்டன்.

உங்கள் ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் பார்த்தேன். எந்த ஊரில் நடந்த ‘சாக்லேட் கிருஷ்ணா’ உங்களுக்கு ரொம்பவும் பிடித்தது?

எனக்கு மிகவும் பிடித்தது ‘ஹிண்டு’ கேசவ் என்னை சாக்லேட் கிருஷ்ணா ஓவியமாக வரைந்ததுதான். சென்ற ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இரவு கேசவ் எனக்கு போன் செய்து, ‘1952-ம் வருஷம் அக்டோபர் 16-ல் வந்த தீபாவளிதான் என்னால் மறக்கவே முடியாத தீபாவளி. ஏனெனில் அன்றுதான் நான் பிறந்தேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதே போல இந்த வருஷ பிறந்த நாளையும் நீங்கள் மறக்க மாட்டீர்கள்’ என்று சஸ்பென்ஸ் வைத்த கையோடு, போனையும் வைத்துவிட்டார்.

மறுநாள் அடியேனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஓவியத்தை எனக்குப் பிறந்த நாள் பரிசாக அனுப்பியிருந்தார் அந்த மேதை!

கோமதி நமச்சிவாயம், நெல்லை.

27 குழந்தைகளைப் பெற்ற குசேலர், தீடீரென்று தனது வீட்டுக்கு சாப்பிட வந்த 27 சம்பந்திகளையும் எப்படி சமாளித்திருப்பார்?

சம்பந்திகளை சமபந்தி போஜனத்தில் அமர்த்தி சமாளித்திருக்கலாம். ‘28-வது பிள்ளையைப் பெற்றெடுக்க என் மனைவி பொறந்த வீட்டுக்குப் போயிருக்காள்’ என்று சொல்லி சமாளித்திருக்கலாம்!

கே.அன்பரசு, நாகர்கோயில்.

‘கிச்சன் கிங்’ புரமோஷன் கிடைத்தால் எப்படி சமாளிப்பீர்கள்?

அதை ஏன் கேட்கறீங்க? சமீபத்தில் தனது மருமகளைப் பார்க்க எனது ‘கிச்சன் குயின்’ பெங்களூருக்குச் சென்றபோது, எனக்கு ‘கிச்சன் கிங்’ புரமோஷன் கிடைத்தது. பாவம் என் புரமோஷனால் ‘மோசம் அண்ட் மோஷன்’ போனது என்னை நம்பி சாப்பிட்ட என் அப்பாவும், என் பசங்களும்தான்!

என் வசதிக்காக உளுத்தம் பருப்பை உ.ப என்றும் பயத்தம் பருப்பை ப.ப என்றும் டப்பாவின் மேல் எழுதி ஒட்டிவிட்டுப் போயிருந்தாள் என் மனைவி. உப்பு டப்பாவின் மேல் ‘ப்’ அழிந்து போனது தெரியாமல், நான் உளுத்தம் பருப்பு என்று நினைத்து உப்பை அள்ளிப் போட்டு சாம்பார் வைத்தேன். எக்கச்சக்க உப்பால் சாம்பாரில் சமுத்திர அலை அடித்த போது எனக்கு லேஸாக சந்தேகம் வந்து, மேலும் கொஞ்சம் உப்பை அள்ளிப் போட்டேன். அதைச் சாப்பிட்டவர்கள் உப்பிட்ட என்னைக் கரித்துக் கொட்டினார்கள். அன்று முதல் என் பிள்ளைகள் என்னை ‘அப்பா’ என்பதற்கு பதில் ‘உப்பா’ என அழைக்கிறார்கள்.

கு.சங்கீதா, அரியலூர்.

பாமாரனின் பார்வை, பத்திரிகையாளன் பார்வை. ஒப்பிடுங்களேன்?

விபத்தில் கிழவி மரணம் அடைந்தால் பாமரன் ‘கெய்வி ஆக்ஸிடெண்டுல பூட்சுப்பா’என்பான். பத்திரிகையாளன் பார்வையில் ‘அழகி பலி’!

காந்தி செல்விம் கோவிந்தபுரம்.

அது என்ன கபட நாடகம்?

மேக்அப் போட்டுக்கொண்டு நடிப்பது நாடகம். எதையாவது மேக்-அப் பண்ண நடிப்பது கபடநாடகம்!

ஆனந்தி ராமசாமி, சென்னை-5.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெரு மாள் மீசையின் காரணம்?

தன்னுடைய நெருங்கிய நண்பன் ‘கண்ணன் என் தோழன்’ பாடிய பாரதிக்கு கம்பெனி கொடுக்க!

மணவாளன், திருச்சானூர்,

உண்மை உறங்கும் நேரத்தில் ‘பொய்’ என்ன செய்யும்?

வேறென்ன… பேந்த பேந்த விழிக்கும்!

ரா.சங்கர நாராயணன், தளவாய்புரம்.

‘தந்தை சொல் கேட்டு மணி முடி துறந்த பீஷ்மர், ராமர்… இந்த இருவரில் யார் சிறந்தவர்’ என்ற பட்டிமன்றத்துக்கு தாங்கள் நடுவராக இருந்தால்?

இவர்கள் இருவரையும்விட ‘தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை எடுத்துக் காட்டியதில் சிறந்தவர், ரகு வம்சத்தில் வந்த மன்னன் யயாதியின் மகன் புருதான்.

தந்தை யயாதியின் வேண்டு கோளுக்கு இணங்கி தனது இளமையை அவருக்குத் தாரை வார்த்து , அதற்கு பதிலாக அவரது வயோதிகத்தைப் பெற்று, எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில் தன் ‘முடி’யைத் துறந்தவன் புரு. ஆச்சர்ய மாகப் பார்க்கும்போதெல்லாம் புரு வத்தை உயர்த்துவது இந்த ‘புரு’ வால்தான்!

திருமலை, பஹ்ரைன்.

சார் அது என்ன… ‘ஃப்ரெண்ட், பிலாசஃபர், கெய்டு’?

‘வேதாந்தி, வழிகாட்டி, தோழன்’ என்பதை ஆங்கிலத்தில் கேட்கிறீர்கள். ‘ரைட்ல திரும்பி நேரா போய் லெஃப்ட்ல கட் பண்ணா…’ என்பவன் வழிகாட்டி.

‘ரைட்டுல போனா யூ வில் பி லெஃப்ட் அலோன். லெஃப்ட்ல போனா யூ ஆர் ராங்…’ என்று குழப்புபவன் வேதாந்தி. போகும் வழி ராங்கா இருந்தாலும் அதை ‘செட் ரைட்’ செய்பவனே தோழன்!

கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.

வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டுப் போகாமல் இருந்திருந்தால்?

ஆங்கில ‘ஹிண்டு’ பேப்பரில் ‘Ask Crazy’ (கிரேசியைக் கேளுங்கள்) என்ற பகுதியில் வாசகர் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பேன்!

- நிறைந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x