Last Updated : 12 May, 2014 12:00 AM

 

Published : 12 May 2014 12:00 AM
Last Updated : 12 May 2014 12:00 AM

மனசுக்கு கொஞ்சம் ரீசார்ஜ்

கல்லூரி விடுமுறையைக் களிப்புடன் கழிப்பதற்கு ஏற்கெனவே பல திட்டங்களைப் போட்டுவைத்திருப்பீர்கள். அந்தத் திட்டங்களில், எப்படியும் நண்பர்களைச் சந்திப்பதிற்கு நிச்சயம் முன்னுரிமை வழங்கியிருப்பீர்கள். நண்பர்களுடன் செலவிடப்படும் தருணங்களுக்கு எந்த வரையறைகளும் எப்போதும் இருப்பதில்லை. ஏனென்றால், நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை மட்டுந்தான் எப்போதுமே நாம் நமக்கான நேரமாக உணர்வோம். அதுவும், நண்பர்களுடன் இருக்கும் நிமிடங்களை மேலும் அர்த்தமுள்ளவையாக ஆக்குவது அவர்களை நாம் சந்திக்கும் இடங்கள். அந்த இடங்கள்தான் நண்பர்களுடன் நாம் கழித்த பொன்னான பொழுதுகளுக்கு எப்போதும் அடையாளமாக இருக்கும். அந்த வகையில், நண்பர்கள் சிலர் அவர்கள் மனதிற்கு நெருக்கமான இடங்களைப் பற்றி பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஸ்ரீ வந்தனா, மருத்துவம் இரண்டாம் ஆண்டு, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி

“என் நண்பர்களுடன் நான் அடிக்கடி செல்லும் இடம் மெரினா பீச்தான். எப்போதும் வகுப்பு, தேர்வு என பிஸியாக இருப்பதால், இங்கே நண்பர்களுடன் வரும்போது எப்போதும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன். அது மட்டுமில்லாமல், எங்கள் கல்லூரி அருகிலேயே இருப்பதால், அடிக்கடி இங்கே வந்துவிடுவோம். அதுவும் அங்கே கிடைக்கும் சோளம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு. அதிகச் செலவில்லாமல், அமைதியான மனநிலையை அளிப்பதில் மெரினா பீச்சிற்கு இணையாக வேறு இடம்இல்லை.

துஷார், பொறியியல் இரண்டாம் ஆண்டு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

“சென்னையில் நண்பர்களுடன் செல்வதற்கு என்னோட சாய்ஸ் எப்போதுமே பெசண்ட் நகர் பீச்தான். இங்கே வந்தவுடன் எல்லாவித மன அழுத்தங்களும் நீங்கி ஒருவிதமான தன்னம்பிக்கையை நான் உணர்வேன். எந்தப் பரீட்சை முடிந்தாலும் கட்டாயம் நண்பர்களுடன் இங்கே வந்து விடுவோம். இங்கே வந்த பிறகு நண்பர்களுடன் மணலில் கட்டிப் புரண்டு விளையாடாமல் நாங்கள் சென்றதில்லை. எப்போதும் என்னை ரீசார்ஜ் செய்யுமிடமாக பெசண்ட் நகர் பீச்சைத்தான் சொல்வேன்.”

மாதவா கிருஷ்ணன், பொறியியல் இரண்டாம் ஆண்டு, புனே

“நான் பிறந்தது, படிச்சது எல்லாம் சென்னையில்தான். ஆனால் நான் +2 படிச்சு முடிச்சதும், என் அப்பாவின் வேலை காரணமாக புனேவிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதனால் புனேயில் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் சென்னையை ரொம்பவே மிஸ் பண்ணினேன். அதனால் நான் எப்போது சென்னை வந்தாலும், தவறாமல் நண்பர்களுடன் மாமல்லபுரம் மட்டும் விசிட் பண்ணிவிடுவேன். அப்போதுதான் புனேல இருந்து சென்னை வந்து போன திருப்தி கிடைக்கும்.”

சேஷாத்ரி, பொறியியல் நான்காம் ஆண்டு, ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

“சென்னையில் எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் அபிராமி மெகா மால்தான். அது மட்டுமில்லாமல், எனக்கும் என் நண்பர்களுக்கும் படங்கள் பார்ப்பதுதான் ரொம்ப பிடித்த பொழுதுபோக்கு. ஃப்ரெண்ட்ஸ் பர்த்டே, வீக்கென்ட்-ன்னு (weekend) எப்பவும் எங்க கேங்கோட கொண்டாட்டம் அங்கதான்

கோடை விடுமுறையைக் கழிக்க எவ்வளவோ நவீன இடங்கள் புற்றீசல் போல முளைத்துவிட்டாலும் இன்னமும் மெரினாவும் பெசண்ட் நகரும் மாமல்லபுரமும் இளைஞர் களைக் கவர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. எப்போதுமே சலிப்பூட்டாத கடலும் அலைகளும் கடற்கரையும் இளைஞர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x