

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டக் கல்லூரி உள்பட நாடு முழுவதும் இயங்கும் 16 தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசியச் சட்டக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை சட்டப் படிப்புகளில் சேர “கிளாட்” (Common Law Admission Test-CLAT) எனப்படும் பொதுச் சட்ட நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத்தேர்வு, ஆங்கில அறிவு, பொது அறிவு மற்றும் நடப்புக்கால நிகழ்வுகள், கணிதம், சட்ட அறிவு (Legal Aptitude), பகுத்தாராயும் திறன் (Logical Reasoning) ஆகியவற்றைப் பரிசோதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இளங்கலை சட்டப் படிப்பில் சேரப் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் தேவை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் என்றால் 40 சதவீத மதிப்பெண்கள் போதுமானவை. வயது வரம்பு 22. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு அளிக்கிறார்கள்.
முதுகலை சட்டப் படிப்பைப் பொருத்தவரையில், 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்டத்தில் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு உண்டு. வயது வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
2015-ம் ஆண்டுக்கான “கிளாட்” நுழைவுத்தேர்வு மே மாதம் 10-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், சென்னையிலும் திருச்சியிலும் தேர்வு நடக்கிறது. நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஆன்லைனில் (>www.clat.ac.in) விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தில் பழைய வினாத்தாள்களைத் தெரிந்துகொள்வதுடன் ஆன்லைனில் மாதிரித் தேர்விலும் பங்கேற்கலாம்.