Last Updated : 07 Apr, 2015 02:07 PM

 

Published : 07 Apr 2015 02:07 PM
Last Updated : 07 Apr 2015 02:07 PM

படிக்காமல் பேராசிரியரானவர்

ஏப்ரல் 9- ராகுல்ஜி பிறந்த தினம்

ராகுல்ஜி என அழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்தியாயன் (1893 ஏப்ரல் 9 1963 ஏப்ரல் 14) இந்தி மொழியில் ‘ பயண இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுதியதால் மூன்றாண்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

ராகுல்ஜி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே பெற்றோர்கள் இறந்துவிட, பாட்டியால் வளர்க்கப்பட்டார். ஆரம்பப்பள்ளி வரைதான் படித்தார். ஆனால் பல்வேறு மொழிகளையும் தாமாகவே கற்றார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று. இந்தி, பாலி,சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும் மொழிகளும், சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளையும் கற்றார். புகைப்படக் கலையையும் படித்திருந்தார்.

ஊர் சுற்றி

அவர் இளமையிலேயே புத்தத் துறவியாக ஆனார். அதன்பிறகு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 45 வருடக் காலம் பயணம் செய்துகொண்டே இருந்தார். கால்நடையாகவும் பல இடங்களுக்குப் பயணித்துள்ளார். ஊர்சுற்றிப் புராணம் என்ற நூலையும் படைத்துள்ளார்.

இவர் இந்தியாவுக்குள் பயணம் போனது மட்டுமல்ல, நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கும் போனார்.

பேராசிரியர்

புத்தமதத் துறவியாக இருந்தாலும் மார்க்சியத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டார். அவர் சோவியத் யூனியன் போனபோது, ராகுல்ஜி முறைப்படி படிக்காதவர் ஆனாலும் அவரது மிக ஆழமான அறிவைப் புரிந்துகொண்ட லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராய் நியமித்துக்கொண்டது.

புத்தகங்கள்

20 வயதில் எழுத ஆரம்பித்த ராகுல்ஜி 146 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் வரலாற்று புனைவு நூல் அனைவரும் அறிந்தது. கி.மு. 6000 த்தில் தொடங்கும் இந்த நூல் கி.பி.1942-ல் முடிகிறது. இந்த நூல் தமிழ் உள்படப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விருதுகள்

இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான சாகித்திய அகாடமி விருது ‘மத்திய ஆசியாவின் இதிகாசம்’ எனும் இவரது புத்தகத்துக்கு 1958-ம் ஆண்டில் வழங்கப்பட்டது. 1963-ம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கிக் கவுரவித்தது.

இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைப் படைப்பவர்களுக்கு ராகுல்ஜி பெயரால் ‘மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது’ இந்திய அரசின் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் என்ற அமைப்பால் வழங்கப்படுகிறது. சுற்றுலா ஆராய்ச்சி தொடர்பாக இந்தி மொழியில் புத்தகங்கள் எழுதுபவருக்கு ‘மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது’ இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

திபெத்துக்கு

இவர் புத்தத் துறவியாகச் சென்றபோது அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்தவை. ஆகவே, ராகுலைப் பெருமைப்படுத்தும் வகையில் பாட்னா அருங்காட்சியகம் இந்தப் பொருட்களின் சிறப்புப் பிரிவை ஏற்படுத்திக் காட்சிப்படுத்தி உள்ளது.

ராகுல்ஜி திபெத்தில் சேகரித்த புத்தகங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ராகுல்ஜி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x