Last Updated : 20 May, 2014 03:45 PM

 

Published : 20 May 2014 03:45 PM
Last Updated : 20 May 2014 03:45 PM

பூமியின் பொக்கிஷங்கள்: சர்வதேச பல்லுயிரிய நாள்-மே 22

பூவுலகிலே, பல வடிவங்களிலும் அளவுகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் நம்மிடையே உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு வாழ்பவை முதல் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பவைவரை பல்வேறு உயிரினங்கள் உள்ளன.

சுட்டெரிக்கும் பாலைவனங்களில் சில உயிரினங்கள் வாழ்கின்ற அதேநேரம், பனி படர்ந்த கடுங்குளிர்ப் பிரதேசங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. உணவு, வாழிடம் (Habitat) போன்ற பல்வேறு அம்சங்களில், பல்வேறு வகைகளில் வேறுபடுகிற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் வாழ்ந்துவருகின்றன. இப்படி ஒரு பகுதியில் பல்வேறு உயிரினங்கள் செழித்து வாழ்வதே பல்லுயிரியம், உயிரினப் பன்மயம், பல்லுயிர் பெருக்கம் எனப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது.

இப்போதுவரை பூவுலகில் கண்டுபிடிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட 80 லட்சம் உயிரினங்களும் இன்னும் கண்டறியப்படாத, பெயரிடப்படாத தாவர, விலங்கினங்களும், நம்முடன் வாழும் வளர்ப்பு விலங்குகளும் சேர்ந்த ஒட்டுமொத்த உயிரின வளமே பல்லுயிரியம் (Bio Diversity).

ஒன்றுக்கொன்று தொடர்பு

சூழலியலில் (Ecology) ஒவ்வொரு உயிரின வகையும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, ஓர் உயிரினம் அழிக்கப்பட்டால், அதன் விளைவு சங்கிலி தொடராக மற்றொன்றைத் தாக்கும். நீலகிரியில் உள்ள இருவாச்சி பறவை (Hornbill) அழிந்தால், அத்துடன் தொடர்புள்ள 10 வகை மரங்களும் அழிந்துவிடும். இதற்குக் காரணம் இருவாச்சி உட்கொண்டு வெளியேற்றும் தாவர விதைகளே உயிர்ப்புத்தன்மைமிக்கதாக உள்ளதுதான். இப்படித்தான் காட்டில் அந்த மரங்கள் செழித்துப் பெருகுகின்றன.

நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில்தான் பல்லுயிரியம் செழித்துக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட பாலூட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.

கருப்பொருள்

பல்லுயிரிய நாளின் இந்த ஆண்டுக் கருப்பொருள் தீவுகள். தீவுப் பகுதிகள், அவற்றைச் சுற்றியுள்ள கரையோரக் கடல் பகுதிகள் தனித்தன்மை கொண்ட சூழல்தொகுதிகளாக (Ecosystem) ஓரிடத் தாவரங்கள், ஓரிட வாழ்விகள் (Endemic) நிரம்பிய இடமாக உள்ளன. ஓரிட வாழ்விகள், ஓரிடத் தாவரங்கள் என்பவை உலகில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே வாழக்கூடிய அரிய வகைகள்.

பரிணாம வளர்ச்சியில் கடற்கரை சார்ந்த சூழல்தொகுதி ஒப்பிடமுடியாதப் பொக்கிஷம். இந்தப் பகுதிகளே 60 கோடி தீவுவாசிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், நலவாழ்வு, பண்பாட்டு அடையாளமாக உள்ளன. அதாவது, உலகில் 10-ல் ஒருவர் தீவுகளில் வாழ்கிறார்கள்.

ஐ.நா. பொதுச்சபை 2014-ம் ஆண்டை வளரும் சிறு தீவு நாடுகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருப்பதை ஒட்டி, இந்தப் பல்லுயிரிய நாள் தீவுகளைச் சிறப்பித்துக் கொண்டாடுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x