Published : 06 Mar 2015 11:31 AM
Last Updated : 06 Mar 2015 11:31 AM

காதல் திருமணம் செய்து என்ன பிரயோஜனம்?

நாம் மன நிறைவுடன் வாழ்கிறோமா? நமக்குள் நம்மைப் பற்றியும் நம் வாழ்க்கை குறித்தும் திருப்தி இருக்கிறதா? நம் இருப்பையும் நம் சுயத்தையும் நாம் முழுமையாக அங்கீகரிக்கிறோமா? அல்லது எந்நேரமும் நம்மை மற்றவர்களின் பார்வையிலிருந்து பார்த்து அவர்களின் அளவுகோல்களால் நம்மை அளந்துகொண்டே இருக்கிறோமா? நம் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறதா? நம்மை நமக்கு எவ்வளவு பிடிக்கிறது? நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? நம்மைப் பற்றி மேன்மையான ஒரு சித்திரம் நம் மனத்தில் இருக்கிறதா? இந்தக் கேள்விக்கெல்லாம் நம்மிடம் பதில் உண்டா?

நம் சுயத்தை நாம் முழுமையாக அங்கீகரிக்கும்போதுதான் இந்தக் கேள்விக்கெல்லாம் அர்த்தம் இருக்கும். நம் கண்களில் நாம் என்னவாகத் தெரிகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. மேன்மையும் கம்பீரமும் கொண்ட ஒரு சுய பிம்பம்தான் நம் கண்களில் நாம் நிமிர்ந்து நிற்பதற்கு உதவ முடியும். அப்போதுதான் நம் வாழ்க்கையை நாம் நிறைவுடனும் சந்தோஷத்துடனும் வாழ முடியும்.

நானும் என் தாய் மாமாவும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டோம். எங்களுக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை குழந்தை இல்லை, மன நிம்மதியும் இல்லை. நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அவர் எடுத்ததுக்கெல்லாம் என் மீது எரிந்து விழுகிறார். எங்களுக்குள் சின்னச் சண்டை வந்தால்கூட, உடனடியாக என் பெற்றோரை அழைத்துக் கடுமையாகப் பேசுகிறார். என் மீது குற்றம் கண்டுபிடிப்பதையே வேலையாக வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், சின்னப் பிரச்சினைக்குக்கூட ‘வீட்டை விட்டு வெளியே போ!’ என ஈவு இரக்கமின்றிச் சொல்லுவார்.

பல நாட்கள் பொறுமையாக இருந்தேன் ஆனால் ஒருநாள் மனமுடைந்து ‘மீண்டும் வீட்டுக்கு வந்துவிடு’ என நீங்களே என்னிடம் சொல்லும் நாளில்தான் வீடு திரும்புவேன் எனச் சொல்லிவிட்டு பத்து நாட்களுக்கு முன்பு என் தாய்வீட்டுக்கு வந்துவிட்டேன். ஆனால் இதுவரை அவர் என்னை அழைக்கவே இல்லை. அவருடைய அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் நானாகச் சென்றால், என்னைப் பழையபடிதான் நடத்துவார். இப்போது நான் என்ன செய்ய?

நீங்கள் உங்களை மதிக்கிறீர்கள். வீட்டைவிட்டு நீங்கள் வெளியே வந்ததிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் உடனடியாக அவர் வந்து உங்களை அழைத்துக்கொண்டு போய்விடுவார் என்று எதிர்பார்த்திருக்கிறீர்கள். அது நடக்கவில்லை என்றதும் உங்கள் மனத்தில் பயம் எழுந்திருக்கிறது. ஆனால் நீங்களாகத் திரும்பப் போவது சரியாக இருக்காது. நீங்கள் சொல்வதுபோல் பழைய விஷயங்கள்தான் தொடரும். இன்னும் மோசமாகக் கூட நடக்க முடியும். உங்கள் நிலைமை இன்னும் பலவீனமாகத் தெரியும்.

அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்கிறீர்கள். அவர் உங்களை நேசிக்கிறாரா? உங்களுடன் சண்டை போடும்போதுகூட உங்களோடு நில்லாமல் உங்கள் பெற்றோரிடம் வந்து குறை கூறுவது தவறான நடவடிக்கை. வாங்கிய பொருள் சரியில்லை என்று கடைக்காரரிடம் புகார் செய்வதுபோல் இருக்கிறது.

குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். சண்டைக்கு அது காரணமா என்று நீங்கள் சொல்லவில்லை. அது குறித்து இருவரும் பரிசோதனைகள் மேற்கொண்டீர்களா?

கொஞ்ச நாட்களுக்குத் தாய்வீட்டிலேயே இருங்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் சுய மரியாதையுடனும் முழு நம்பிக்கையுடனும் காத்திருங்கள். எல்லாம் சரியாக நடக்கும்.

உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x