Last Updated : 14 Mar, 2015 02:49 PM

 

Published : 14 Mar 2015 02:49 PM
Last Updated : 14 Mar 2015 02:49 PM

யோகா: முழுமையான வாழ்க்கைமுறை

தினமும் காலையில் செய்யும் ஓர் உடற்பயிற்சியாக மட்டுமே யோகாவைப் பலரும் பார்க்கிறோம். ஆனால், அப்படியில்லாமல் யோகாவை ஒரு வாழ்க்கைமுறையாகப் பார்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியது சர்வதேச யோகா திருவிழா.

யோகா என்னும் வாழ்க்கைமுறை பல உலக நாடுகளில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடாக, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா திருவிழாவைச் சொல்லலாம். ரிஷிகேஷ்பரமார்த்நிகேதனில் சமீபத்தில் நடந்து முடிந்த 16-வது சர்வதேச யோகா திருவிழாவில் அறுபத்தி ஐந்து நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.

எப்போதும் யோகா

“இந்த நொடியில் வாழ்வதற்கான கலையைத் தெரிந்துகொள்வதுதான் யோகாவின் முக்கியமான அம்சம். அதை ‘ஆஃப் தி மேட்’(Off the mat) யோகா என்று சொல்லலாம். உடல், மனம் இரண்டைப் பற்றியும் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரும் விஷயங்களை விட்டு விலக எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

தவறு செய்திருக்கிறோம் என்று தெரிந்தால் கடந்த காலத்தைப் பற்றியும், வருங்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமல், தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதற்குத் தயார் மனநிலையில் இருப்பதை ‘ஆஃப் தி மேட்’ யோகா எனலாம்”, என்கிறார் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்ட சென்னை கிருஷ்ண யோகா என்னும் யோகப் பயிற்சி அமைப்பின் இணை நிறுவனர் டாக்டர் ஃபர்சானா.

எல்லைகளைக் கடந்த யோகா

அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த யோகா குருக்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர். “நாடு, மதம், மொழி என எந்த எல்லைகளும் இல்லாமல் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்து வந்திருந்த யோகா ஆசிரியர்களிடம் கலந்துரையாடியதும், ஒரே இடத்தில், யோகாவின் ஆசிரியராகவும், மாணவராகவும் இருக்க நேர்ந்தது ஒரு மாறுபட்ட அனுபவம்தான்” என்கிறார் ஃபர்சானா.

ஒரு வாரம் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் பாரம்பரிய ஹத யோகாசனங்கள், ஓஷோவின்டைனமிக் தியானம், கிரியா யோகா, சீனாவின் ‘தைஜி யோகா’ எனப் பல வகை யோகா முறைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது, யோகாவின் வீச்சை எடுத்துக்காட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x