Last Updated : 20 Mar, 2015 12:59 PM

 

Published : 20 Mar 2015 12:59 PM
Last Updated : 20 Mar 2015 12:59 PM

கடிதம் சொன்ன காதல்: மொழி பிரிக்காத உணர்வு

கபர் - அதாவது செய்தி என்ற சொல்லை மூலமாகக் கொண்ட ‘கத்’ எனும் உருதுச் சொல்லின் பொருள் கடிதம். லிகிதம் என்று சமஸ்கிருத மொழியிலும் மடல், கடிதம் என்று தமிழிலும் அழைக்கப்படும் இந்த ஊடகத்திற்குத் திரைப்பாடல்களில் முக்கிய இடம் உண்டு.

கண்கள் பேசும் வார்த்தைகளும் கைகள் இணையும் அசைவுகளும் நேரில் நின்று நிகழ இயலாமல் காதலர்கள் பிரிந்து நிற்கும் பொழுதுகளில், தங்களின் ஆழமான காதல் உணர்வை எழுதி அனுப்பும் கடிதங்கள் வழியே வியக்கத்தக்க ஒரே உணர்வை வெளிப்படுத்தும் இந்தி, தமிழ் மொழிப் பாடல்களைப் பார்ப்போம்.

1968-ல் வெளியான ’சரஸ்வதி சந்த்ரா’ என்னும் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை இயற்றியவர் இந்திவர். பாடியவர்கள். முகேஷ், லதா மங்கேஷ்கர். இசை. கல்யாண்ஜி - ஆனந்த்ஜி.

பாடல்:

ஃபூல் துமே பேஜா ஹை கத் மே

ஃபூல் நஹீன் மேரா தில் ஹை

பிரியதம் மேரே முஜ்கோ லிக்னா

க்யா யே துமாரா காபில் ஹை (நாயகி)

பியார் சிப்பா ஹை கத் மே இத்னா

ஜித்னே சாகர் மே மோதி

சூம் ஹீ லேத்தா ஹாத் துமாரா

பாஸ் ஜோ மேரே தும் ஹோத்தி (நாயகன்)

.. .. ..

.. .. ..

பொருள்.

உனக்குக் கடிதத்துடன் அனுப்பியுள்ள

மலர் வெறும் மலர் அல்ல என் மனம்

அன்பே எனக்கு அளித்திடு பதிலை

இது உனக்குப் போதுமா (நாயகி)

கடிதத்தில் காதல் மறைந்துள்ளது

முத்துக்கள் எத்தனை கடலில்

அத்தனை முத்தமிட்டிருப்பேன் கரங்களில்

அருகில் நீ இருந்தால் (நாயகன்)

உறக்கம் உனக்கு வருவது உண்டே

உறக்கத்தில் கண்ட கனவுதான் என்ன (நாயகி)

கண்களைத் திறந்தால் இருப்பது தனிமை

கனவினை நான் காண்பது எங்கே? (நாயகன்)

தனிமையை நாம் தள்ளிவிடலாம்

இனிமை தரும் நாதஸ்வரம் எடுத்து வா (நாயகி)

காதலை வளர்த்த பின்

மறந்து கைவிட்டு விடாதே

காதலை எனக்குக் கற்றுக்கொடுத்தது நீயே

கடிதத்தால் என் காதல் நிறையாது

கண்கள் கலந்தால்தான் கதை நடக்கும் (நாயகன்)

சந்திரன் நம் அங்கத்தில் இறங்கும்

அந்த விதம் ஒரு அம்சம் கிட்டும் ( நாயகி)

நாம் சந்திப்பது எப்படி என ஒரு

சாளரம் எழுது (நாயகன்)

அகல விரித்த விழிகளுடன் அமர்ந்துள்ளேன்

பகலாய் எழுதி எப்பொழுது வருவாய் என

(நாயகி)

உனக்குக் கடிதத்துடன் அனுப்பியுள்ள

மலர் வெறும் மலர் அல்ல என் மனம்.

இந்தப் பாடலில் வெளிப்படும் உணர்வைக் கிட்டத்தட்ட அப்படியே பிரதிபலிக்கும் தமிழ்ப் பாடலைப் பாருங்கள்.

திரைப்படம்: பேசும் தெய்வம். பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: வாலி . இசை: கே.வி. மகாதேவன். ஆண்டு: 1967

நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்

அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்

உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள

நான் அனுப்புவது கடிதம் அல்ல

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்

நீருக்கு மீன் எழுதும் கடிதம்

மலருக்குத் தேன் எழுதும் கடிதம்

மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

(எழுதி அனுப்புவது)

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்

ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்

என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்

உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்

(நான் அனுப்புவது)

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x