Published : 14 Mar 2015 12:39 PM
Last Updated : 14 Mar 2015 12:39 PM

பட்டா மாறுதல் எப்படி?

நாம் ஒரு சொத்தை வாங்கும்போது பத்திரப் பதிவு செய்துகொள்வது எவ்வளவு முக்கியமோ அதைப் போல பட்டா மாற்றமும் செய்துகொள்ள வேண்டும். அது எப்போதுமே அத்தியாவசியமான ஒன்று.

நீங்கள் வாங்கிய சொத்து எந்தத் தாலுகாவைச் சேர்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் எந்தத் தாலுகா என்பது கண்டுபிடிப்பது சிரமமான காரியம். அதனால் அதை உறுதிப்படுத்திக்கொண்டு சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலும் பட்டா மாற்றத்துக்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதைப் பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை நிரப்பி பூர்த்திசெய்ய வேண்டும்.

விண்ணப்பதாரரின் பெயர், தகப்பனார் அல்லது கணவர் பெயர், இருப்பிட முகவரி போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அத்துடன் பட்டா மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரங்களையும் கவனமாகப் பூர்த்திசெய்ய வேண்டும்.

விண்ணப்பத்தில் சர்வே எண் போன்ற இலக்கங்களைச் சரிபார்த்து எழுத வேண்டும். அதுபோல சர்வே எண்ணுக்குரிய இடம் முழுவதும் வாங்கியிருக்கிறோமா, சொத்தின் ஒரு பகுதி மட்டும் வாங்கியிருக்கிறோமா என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒருபகுதியை மட்டும் வாங்குவதாக இருந்தால் அதன் உட்பிரிவு சர்வே எண்ணைச் சரியாக குறிப்பிட வேண்டும். அத்துடன் பட்டா மாறுதலுக்குக் கட்டணம் செலுத்திய ரசீதையும், சொத்து விண்ணப்பிப்பவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சொத்துவரி செலுத்திய ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலையும் இணைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x