Published : 07 Mar 2015 12:21 PM
Last Updated : 07 Mar 2015 12:21 PM

அஸ்திவாரமும் பிரச்சினைகளும்

அஸ்திவாரம் என்பது கட்டிடங்கள் மிக உறுதியாக காலங்கள் கடந்து நீடித்து நிலைக்க உதவுவது. இதில் கட்டிடங்களின் பழுதுகளை, பலவீனங்களை நீக்கிப் பலப்படுத்தி மறுசீரமைக்கிறோம். ஆனால் கட்டிடங்களின் தரையின் கீழ் ஏற்படும் சீர்கேடுகளையும் அஸ்திவாரப் பழுதுகளையும் சோதிக்கவோ நீக்கி மறுசீரமைக்கவோ எளிதான, பாதுகாப்பான, நடைமுறைக்குச் சாத்தியமான வழி முறைகளைக் கண்டறிய ஆய்வுகளே இனிமேல்தான் தொடங்கப்பட வேண்டும் என்பது மிகவும் கசப்பான உண்மை. அஸ்திவாரத்தில் பல வகைகளில் பழுது ஏற்படும். அவற்றுள் மூன்று முக்கிய வகைகளைச் சொல்லலாம்.

முதல் வகை

வடிவமைப்பு குறைபாடு, மூலப்பொருட்களில் தரக் குறைபாடு, பொருட்சேர்க்கைகளில் நேரும் விகிதாச்சாரத் தவறுகள் மற்றும் தரமான கட்டுமான முறைகளைப் பின்பற்றாமை போன்றவை முதல் வகை.

இரண்டாம் வகை

மண்ணின் தாங்கும் திறனை தீர்மானிக்க உதவும்; மண்பரிசோதனையை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது, அக்கறையின்மையோடு நடத்தப்படும் சோதனைகள், குளங்கள், ஏரிகள், விவசாய நிலங்கள் போன்ற தாழ்வான பகுதிகளைத் தூர்த்துவிட்டும், சரிவான - ஏற்றத்தாழ்வான பகுதிகளைச் சமன் செய்துவிட்டும் கட்டப்படும் கட்டுமானங்களில் போதிய தொலைநோக்குப் பார்வை முன்னெச்சரிக்கை இல்லாமை ஆகியவை இரண்டாம் வகை காரணிகள்.

மூன்றாம் வகை

கட்டிடங்களிலிருந்து கழிவு நீர் தங்கு தடையின்றி வேகமாக வெளியேறத் தடங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அமைக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்று. அதுபோலவே வெளியிலிருந்து வரும் நீர் மற்றும் ஈரக்கசிவு கட்டுமானத்தை அணுகமுடியாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். மேலும் கட்டிடங்களுக்கு அருகே மரம் வளர்க்க விரும்புவோர் கட்டிடங்களிலிருந்து குறைந்தது 10 அடி இடைவெளி விடவேண்டும். இல்லாவிட்டால் மரத்தின் வேர்கள் அஸ்திவாரத்தைப் பாதிக்கும்.

கழிவுநீர் மேலாண்மையில் ஏற்படும் குறைபாடுகளோடு புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இடர்களும் அஸ்திவாரப் பழுதுகளை உண்டாக்கும். இவை மூன்றாம் வகை முக்கிய காரணிகளாக திகழ்கின்றன.

அஸ்திவாரத்தில் ஏற்படும் பழுது அல்லது அஸ்திவாரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் தரையில் ஏற்படும் சீர்கேடுகள், மண் நெகிழ்ந்து, தரை தளர்ந்து, தாங்கும் திறனை இழத்தல் என்பது கிட்டத்தட்ட மனிதனுக்கு ஏற்படும் புற்று நோய்க்கு ஒப்பானது. இம்மாதிரி நோய் கண்ட கட்டிடத்தின் தரைக்குக் கீழ்ப்பகுதியில் சீர்கேடுற்ற கட்டிடம் வெளிப்பார்வைக்கு நல்ல தோற்றத்தைத் தந்தாலும் வெள்ளம், மழை, புயல் நிலநடுக்க சமயத்தில் தாக்குப்பிடிக்க இயலாது.

குறுகிய காலத்திலேயே இதய மாற்று சிகிச்சைவரையிலான விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ள நம்மால் பல்லாயிர வருட அனுபவத்திற்குப் பின்னரும் அஸ்திவாரம், அடித்தரை பகுதிகளை பாதுகாப்பாக மறுசீரமைக்க முடியாது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

எதிர்காலத்தில் இந்த அவலம் எப்படி ஒழிக்கப்படும் என்பதை இனி பார்க்கலாம். அஸ்திவாரம் மற்றும் தரை இவை இரண்டுமே சீர்கேடு அடைவதைத் தடுக்கவும் முடியும். அதையும் மீறி ஏற்பட்டால் மறுசீரமைக்கவும் முடியும்.

மறுசீரமைப்பு

மண்பரிசோதனை, மண்ணின் தன்மைக்கேற்ற சரியான வடிவமைப்பு, தரமான கட்டுமானப்பொருட்கள்,அவற்றின் சரியான விகிதாச்சாரத்துடன் கூடிய சேர்க்கை, நன்கு திட்டமிடப்பட்ட கழிவு நீர்மேலாண்மை இவற்றோடு, தரமான கட்டுமான முறைகளைப் பின்பற்றி நிர்மாணிக்கப்பட்ட பாரம்பரிய கட்டிடம் ஒன்றையே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

கட்டுமானம் அமைந்துள்ள தரைப்பகுதியின் மொத்த பரப்பளவில் அஸ்திவாரம் அமைந்துள்ள தரையின் பரப்பு ஏறக்குறைய 8 முதல் 15 சதவிகிதத்தற்குள் தான் இருக்கும். அறைகள், சுவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அஸ்திவார பரப்பளவு கூடும் அல்லது குறையும். கட்டிடத்தின் மொத்த பளுவை, 8 லிருநது 15 சதவிகித தரைப்பகுதிமட்டுமே – அஸ்திவாரம் மட்டுமே – தாங்கும்படியாக உள்ளது பாரம்பரிய வடிவமைப்பு. அதனால் அஸ்திவாரம், அதிக சுமை + கடும் அழுத்தம் இரண்டையும் ஏற்கவேண்டியுள்ளது.

அதே நேரத்தில் பெரும்பான்மையான 85 சதவிகித பரப்புடைய கட்டிட உட்புறத்தரைக்கு சுமை, அழுத்தம் இவற்றை தாங்குவதில் எவ்வித பொறுப்பும் பங்கும் தரப்படுவதில்லை. அதாவது கட்டிட பலம் மற்றும் பாதுகாப்பிற்கு அஸ்திவாரம் ஒன்றை மட்டுமே நாம் காலம் காலமாக பெரிதும் நம்பி வருகிறோம். இதற்கு மாற்றாக உட்புறத்தரையை அஸ்திவாரத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட கான்கிரீட் தளமாக வடிவமைக்க வேண்டும்.

RCC சீலிங் கூரைப்பகுதி மற்றும் அடுக்குமாடி வீடுகளின் ஒவ்வொரு தளமும் எப்படி சுவர்களுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதோ, அதைப் போல தரைத்தளமும் சுவர்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதன்முலம் பலம் மற்றும் பாதுகாப்பிறகு அஸ்திவாரத்தை மட்டுமே பெரிதும் நம்பும் நிலைமாறி, கட்டிடத்தின் பளுவைத் தாங்கும் விதமாக, உட்தரைக்குப் பொறுப்பைக் கொடுத்து கட்டிடத்தை அதிக அளவில் பலப்படுத்தவும், ஸ்திரப்படுத்தவும் முடியும்.

அதுபோலவே கட்டிட பளுவையும் அழுத்தத்தையும் தாங்குவதில் எந்தப் பங்கும் இல்லாத கட்டிடத்தின் சுற்றுப்புற நடைபாதை தளம் சுவர்களுடன் ஒன்றிணைக்கப்பட்டால் வெளிப்புறத்திலிருந்து கட்டிடத்தையே தாங்கிப்பிடிக்கும் கூடுதல் தாங்கும் தளமாக அது திகழும்;. அதாவது போர்டிகோ பால்கனி போன்ற அமைப்புக்கள் எவ்வாறு அஸ்திவார நேர் கோட்டிலிருந்து வெளிப்புறம் நீட்டப்பட்டுள்ளதோ அது போல தரைப் பகுதியில் கட்டிடத்தின் வெளிப்புறம் கூடுதல் தாங்கும் தளம் நீட்டப்பட்டிருக்கும்.

ஒருங்கிணைக்கப்பட்ட தாங்கும் தளம் அஸ்திவாரத்தின் செயல்பாட்டில் பங்கு எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அஸ்திவாரத்தையும் மிஞ்சி அதிக அளவு நன்மையும், செயல் திறனும் தரும். ஏனென்றால் அஸ்திவாரத்தின் பரப்பைவிட 8 முதல் 10 மடங்கு அதிக பரப்பைக் கொண்ட தளம் கட்டிட எடையைத் தாங்கும். இவ்வாறு ஒருங்கிணைந்த தளம் போடுவதற்கு முன்பு பாரம்பரிய முறைப்படி தளத்தின் கீழத்தரையை நன்றாக கடினப்படுத்த வேண்டியது அவசியம்.

ஒருங்கிணைக்கப்பட்ட அஸ்திவாரம்

இது போன்ற சுற்றுத்தரை + சுவர்கள் + உட்தரை ஒன்றிணைக்கப்பட்ட கட்டிடவடிவம்; (Integrated Structural Design) ஏற்படுத்தப்பட்டால் தரை சீர்கேட்டினால் அஸ்திவாரத்தின் ஒருபகுதி மட்டும் புதையுண்டு அஸ்திவாரம் தாங்கும் சக்தியை இழக்கும் ‘அஸ்திவாரத்திறனிழப்பு’ (Foundation Failure) என்கிற அபாயம் நேரவே முடியாது. மேலும் தரை சீர்கேடு உண்டாகியிருக்கிறதா என்பதைச் சோதனை செய்யமுடியும். சீர்கேடு ஏற்பட்டிருந்தால், ஒன்றிரண்டு தொழிலாளர்கள் உள்ளே செல்லும் அளவிற்கு தரைப்பகுதியை குடைந்து, மறுசீரமைத்துவிட்டு சுவர்கள் சரியுமோ என்ற அச்சமில்லாமல் பாதுகாப்பாக வெளியே வரமுடியும்.

உதாரணத்திற்கு 30 அடி அகலமுள்ள கட்டிடத்தின் அடித்தரையை 4 அடி அகலத்திற்குச் சுரங்கப்பாதைக்காகத் தோண்டினால் மீதமுள்ள 26 அடி தளம் திறமையாகத் தாங்கிக் கொள்ளும். அதனால் சுவர்களோ கட்டிடமோ இடியாது. சரியாது. பாரம்பரிய கட்டிடங்களில் தரை, அஸ்திவாரம் சீர்கேடுற்றால் கட்டிடத்தையே இடித்து தள்ளவேண்டிய ஒரு வழிமட்டுமே இப்போது நமக்கு உள்ளது. இடிப்பதைத் தாமதித்தால் தானாகவே இடிந்து உயிர்பலியையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சமீபத்திய நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிக்கப்பட்டதையும், சில நேரங்களில் உயிர்பலி நேர்ந்ததையும் கண்டோம்.

இதில் நம்மை அதிகம் வேதனைக்கு உள்ளாக்கிய ஒரு அம்சம், இடிக்கப்பட்டதில் பெரும்பாலான கட்டிடங்கள் தரைக்கு மேல்புறம் பலமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன என்பதுதான்.ஒருங்கிணைக்கப்பட்ட கட்டிடவடிவம், நில நடுக்க அச்சுறுத்தலைக்கூட முறியடிக்கும் திறன் உடையது கூடுதல் சிறப்பு. புதிய வடிவமைப்பின் மூலம் கட்டிட பலம் மற்றும் ஸ்திரத்தன்மை பன்மடங்கு கூடும். தரை, அஸ்திவார குறைபாடுகள் கட்டுமானத்தைச் சீர்குலைக்காமல் காக்கமுடியும்.

அதுபோலவே கட்டுமானத்தில் நேரிடும் குளறுபடிகள் அடித்தரையை, அஸ்திவாரத்தை பாதிக்க முடியாதபடி “கூடுதல் தாங்கும் தளம்” பாதுகாப்பு கேடயமாகத் திகழும். அறிந்தோ, அறியாமலோ ஏற்படும் பல கட்டுமான குறைபாடுகள்கூட (Structural Deficiencies) ஈடு செய்யப்படும்.கட்டிட வாழ்நாளும் பன்மடங்கு கூடும். பொதுவாக இரண்டு முன்று தலைமுறையினருக்கு பயன் தரும் கட்டிடம் மேலும் பல தலைமுறைகளுக்கு பயன்படும்படியாக அதன் வாழ்நாள் நீட்டிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x