Last Updated : 10 Feb, 2015 02:55 PM

 

Published : 10 Feb 2015 02:55 PM
Last Updated : 10 Feb 2015 02:55 PM

முத்திரை நிகழ்வுகள் : இலங்கைத் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர்

தமிழ் நீதிபதி

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஜே சிறீபவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முந்தைய தலைமை நீதிபதியாக இருந்தவர் ஷிரானி பண்டாரநாயக்கா.

இலங்கையின் 44-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சிறீபவன் இப்பதவிக்கு வந்திருக்கும் இரண்டாம் இலங்கைத் தமிழர். இதற்கு முன்னர் ஹெர்பர்ட் தம்பையா இப்பதவியை வகித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

லியாண்டர் பயஸ், மார்ட்டினா ஹிங்கிஸ் இணை 2015-ம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றிபெற்றுள்ளனர்.

இறுதிப் போட்டியில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இவர்கள் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் லியாண்டர் பயஸ் 15 கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றவராகிறார்.

இலவசக் கல்வி

பீஹார் மாநில அரசு தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பெண்கள் ஆகிய பிரிவினருக்கு முதுகலை வரை இலவசக் கல்வி வழங்க முடிவுசெய்துள்ளது.

முதலமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு 29 கோடி ரூபாய் செலவாகும், இதனால் நான்கு லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.

பாசியினங்கள் கண்டுபிடிப்பு

சுற்றுச்சூழலுக்குப் பயன் தரும் இரண்டு பாசி இனங்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உல்வா பஸ்கிமா பாஸ்ட் (Ulva paschima Bast), க்ளாடோஃபோரா கோயன்சிஸ் பாஸ்ட் (Cladophora goensis Bast) என்னும் இந்த இரண்டு பாசியினங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் தன்மை கொண்டவை.

இப்பகுதியில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட இப்பாசியினங்கள் தானாகவே வளரும் தன்மை கொண்டவை. மருத்துவக் குணங்களும் கொண்டவை இவை. கடந்த 40 ஆண்டுகளில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பாசியினங்கள் இவை.

புதிய உள்துறைச் செயலர்

இந்தியாவின் புதிய உள்துறைச் செயலராக எல்.சி.கோயல் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கும் முந்தைய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார். மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் செயலராக இருந்த கேரளாவைச் சேர்ந்த இவர் 1979-ல் ஆட்சிப் பணிக்குத் தேர்வானவர்.

வைஃபை பெரு நகரம்

இந்தியாவின் பெரு நகரங்களில் ஒன்றான கொல்கத்தா முதல் வைஃபை நகரம் என்னும் பெருமையைப் பெறுகிறது. இந்நகரின் பூங்கா வீதியில் இதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்காம் அலைவரிசை வைஃபை சேவையைத் தொடங்கிவைத்தார். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முழு கொல்கத்தா நகரமும் படிப்படியாக வைஃபை வசதி பெற்றுவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x