Last Updated : 20 Feb, 2015 02:37 PM

 

Published : 20 Feb 2015 02:37 PM
Last Updated : 20 Feb 2015 02:37 PM

தன்னம்பிக்கை ஊற்று...

படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் மாணவர்களுக்கு மத்தியில் படிக்கும் போதே வருங்காலத்துக்கான பாதையை அமைத்துக் கொள்கின்றனர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள்.

தினமும் வகுப்பு நேரம் முடிந்ததும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்காக உருவாகிய கிரீன்ஸ்கியூ என்ற கடையில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார்கள் இவர்கள்.

பயனடையும் மாணவர்கள்

கிரீன்ஸ்கியூ கடையில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் இந்தக் கல்லூரி மாணவர்களே வடிவமைத்த கைவினைப் பொருட்கள், பைகள், டெரகோட்டா அணிகலன்கள், வடிவமைத்துத் தைத்த ஆடைகள் மாற்றும் மாணவர்கள் எழுதிய புத்தகங்கள்.

இது பற்றி கிரீன்ஸ்கியூவில் வேலை பார்த்து வரும் ரீனாவிடம் கேட்டபோது, “மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இங்கு உற்சாகமாக வேலை பார்த்து வருகிறோம்.

இதில் வரும் வருமானத்தில் பாதியைக் கடையில் மீண்டும் முதலீடு செய்வோம். மீதியை நாங்கள் எடுத்துக் கொள்வோம். விற்பனையில் கிடைக்கும் லாபம் முழுவதையும் ‘மண்ணா’ என்ற திட்டத்தின் மூலம் ஏழ்மையில் உள்ள மாணவர்களுக்கு உதவி வருகிறோம்.” எனத் தன்னம்பிக்கையோடு பேசுகிறார்.

நாவுக்கு விருந்து

இது மட்டுமின்றி கல்லூரி இலவசமாக அளிக்கும் தையல் பயிற்சி மூலம் மாணவர்களே ஆடைகளை வடிவமைத்து, தைத்துக் கல்லூரி வளாகத்திலேயே விற்கின்றனர்.

அடுத்துக் கல்லூரி தோட்டத்திலேயே தேன் கூடு அமைத்து, பராமரித்து அதிலிருந்து வரும் தேனையும் விற்று அதன் மூலம் வரும் வருமானத்தையும் மாணவர்கள் தங்கள் கல்லூரி செலவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவை அனைத்தும் கிரீன்ஸ்கியூ கடையில் தான் விற்கப்படுகின்றன.

அவ்வப்போது அனைத்துத் துறை மாணவர்களும் இணைந்து சமைத்து உணவுத் திருவிழா நடத்திச் சுவை மிகுந்த தின்பண்டங்களை விற்று அதில் கிடைக்கும் லாபத்தையும் “மண்ணா” திட்டத்துக்கு அளிக்கின்றனர். “இப்படி எங்கள் கல்லூரி எங்களை ஊக்குவித்து முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.

எங்களுக்காக ஒரு ஆசிரியரையும் நியமித்து எங்களுக்கு உதவி வருகிறது. இதற்குக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாஸுக்கும் அமைப்பை ஒருங்கிணைத்து நடத்தி வரும் மேகலா ராஜனுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று நன்றி மறவாமல் பேசுகிறார் ரீனா.

வாழ்க்கை என் கையில்!

கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்பட்டுவரும் மண்ணா திட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது ஒரு மாணவனுக்கு பேப்பர் நகல் எடுக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுத்து அவனுக்கு மாதச் சம்பளமும் அளிக்கிறது இக்கல்லூரி.

இயந்திர நகலகத்தில் பரபரப்பாக மாணவர்களுக்கு நகல் எடுத்துக் கொண்டிருந்த ராஜ் கண்ணனிடம் கேட்டபோது “நான் இந்த நகலகத்தில் பணி புரிவதால் என் சொந்தக் காலில் நிற்க முடிகிறது. என் சொந்த ஊர் மதுரை. என் அப்பா அம்மா இருவரும் கூலி வேலை செய்து தான் என்னைப் படிக்க வைக்கின்றனர்.

நான் இங்குக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கிறேன். இதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கல்லூரி விடுதிக்கான மாத வாடகையை நானே கட்டிக் கொள்கிறேன்” என்று சுறுசுறுப்பாகப் பேசுகிறார்.

இப்படி வேலை பார்ப்பதன் மூலம் இக்கல்லூரி மாணவர்கள் படிப்புக் கட்டணம் முதற்கொண்டு தங்களின் பல்வேறு செலவுகளைத் தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். படிக்கும்போதே தொழில் கற்றுக் கொள்ளும் இக்கல்லூரி மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுக்கு உதவவும் கற்றுக்கொள்வதே இத்திட்டத்தின் தனிச் சிறப்பு.

படங்கள்: ராபின் வில்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x