Published : 09 Feb 2015 10:59 AM
Last Updated : 09 Feb 2015 10:59 AM

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

இந்தியப் பொருளாதாரத்தை உற்பத்தி துறை சார்ந்து மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தொடங்கப்பட்ட வைதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zone).

2005 ல் மத்திய அரசால் இதற்கென தனிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இங்கு தொழில் தொடங்குவதற்கு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது, உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிப்பது போன்றவை முதன்மை நோக்கங்களாக கொண்டிருந்தது.

தொழில்துறையில் பின்தங்கிய பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு சிறப்பு பொருளாதார மணடலங்களை அமைப்பதன் மூலம் உள்ளூர் வளங்கள் மற்றும் வாய்ப்புகளை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழி செய்தது.

இலவசமான உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் தொடங்க நிலம், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து, வரிச்சலுகைகள், இயற்கை வளங்களை பயன்படுத்துவதில் சலுகை, விரைவான அனுமதிகள், 5 வருடங்களுக்கு முழுமையான வரிவிலக்கு, அடுத்த ஐந்து வருடங்களுக்கு 50 சதவிகித வரிவிலக்கு, என பல சலுகைகள் கொடுக்கப்பட்டன. இதனால் குறுகிய காலத்தில் தொழில் துறையினரிடத்தில் வரவேற்பை பெற்றது.

இவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆன நிலையில் மத்திய அரசின் இந்த நோக்கத்தை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நிறைவேற்றியுள்ளதா? இங்கு தொழிலை அமைத்த நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்களா? என்று மீளாய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.

ஏனென்றால் இங்கு தொழில் அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் தொழிலை அமைக்காமல் அரசின் வரிச்சலுகைகளை மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும், வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஏன் எதிர்பார்த்த வளர்ச்சியை தரவில்லை என்பதற்கு பல காரணங்களை சொல் கிறார்கள் வல்லுனர்கள். முதலில் சலுகைக்கு மேல் சலுகை வழங்கியதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பு, இதற்கென தேர்ந்தெடுக்கபட்ட நிலங்கள் பெரும்பாலும் விவசாய பகுதிகளாக இருந்தது, மறுவாழ்வு நடவடிக்கைகளில் பல்வேறு அரசியல் தலையீடுகள் போன்ற காராணங்களால் இந்த திட்டம் தோல்வி கண்டது என்றும் சொல்லலாம்.

மேலும் இந்த சிறப்பு பொருளாதார மணடலங்கள் சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு தொடங்கப்பட்டன. அங்கு 500 சதுர கிலோ மீட்டர் என்கிற பெரிய பரப்பளவில் இந்த மண்டலங்கள் அமைக்கப்பட்டன. அதனால் ஒரு பிராந்தியமே தொழில் மண்டலமாக இருக்கும். ஆனால் இங்கு மிகச் சிறிய பரப்பளவில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இதன் காரணமாகவும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நோக்கத்தை எட்டவில்லை என்கிறார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட சலுகைகளால் ஈர்ப்பு இருந்தது. பல நிறுவனங்கள் தொழில் தொடங்க இந்த மண்டலங்களில் இடங்களையும் வாங்கியிருந்தனர். ஆனால் அதற்கு பிறகு மத்திய அரசு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும் என்று என்றதால் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வெற்றி பெறவில்லை.

பல வரி விலக்குகளையும் பெற்ற சிறப்பு பொருளாதார மண்டலங்கள், எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவில்லை என்பதை தற்போது குறிப்பிடுகின்றனர் தொழில்துறையினர்.

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு இனி புதிதாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி அளிப்பதில்லை என்றும், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களை முறைப்படுத்தவும் கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆக பத்தாண்டுகள் கடந்த பின்னும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்த தெளிவான கொள்கைகளை இன்னும் வரையறுக்கவில்லை என்பதுதான் உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x