Last Updated : 02 Jan, 2015 01:34 PM

 

Published : 02 Jan 2015 01:34 PM
Last Updated : 02 Jan 2015 01:34 PM

இரவில் ஓர் அர்த்தமுள்ள கொண்டாட்டம்

யார் சொன்னது பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் வெட்டி வேலை என்று? இளைஞர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் அம்சங்களாகப் பெரியவர்கள் பலர் கருதும் இந்தச் சமூக வலைத்தளங்கள் நாலு பேருக்கு நல்லது செய்யவும் பயன்படுகின்றன. எத்தனையோ இளைஞர்களுக்கு இவை சமூக சேவை தளங்களாகப் பயன்படுகின்றன.

வீடு இல்லாமல், உணவில்லாமல் சாலையோரங்களில் வாழும் மக்களுக்கு இந்தக் குளிர்காலத்தை சமாளிக்கும் விதமாக உணவையும், கம்பளிகளையும் கொடுத்து உதவிசெய்கிறார்கள் சில இளைஞர்கள். நீல் கோஸ், ஆனந்த் சின்ஹா என்ற இரண்டு இளைஞர்கள் ராபின் ஹூட் ஆர்மி(# Robin Hood Army) என்னும் பெயரில் இந்த முயற்சியை முதலில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

கடந்த ஆகஸ்டில் பேஸ்புக் பக்கம் தொடங்கிய பிறகு ராபின் ஹூட் ஆர்மிக்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. பச்சைநிற டிஷர்ட் அணிந்த இந்த ராபின் ஹூட் ஆர்மி டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் வேகமாக பரவலாகிவருகிறது.

இளைஞர் படை இதோ!

“போர்ச்சுகலில் ஜோமேட்டோ என்ற நிறுவனத்தில் பனிபுரியும்போது, ‘ரீஃபுட்’ என்ற அமைப்பு ஒவ்வொரு இரவும் உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்கிவந்தது. அந்த அமைப்பில் நானும் என்னை இணைத்துக்கொண்டேன். இந்தியா வந்ததும், அதே மாதிரி ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நானும், ஆனந்தும் பேசியதில் ‘ராபின் ஹூட் ஆர்மி’ உருவானது” என்கிறார் நீல் கோஸ்.

பேஸ்புக்கில் இவர்கள் ராபின் ஹூட் ஆர்மி பக்கம் தொடங்கிய பிறகு, சில ரெஸ்டாரண்ட்கள் இவர்கள் நோக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இரவு உணவு வழங்க முன்வந்திருக்கின்றன. ஆரம்பித்த புதிதில் வார இறுதியில் மட்டுமே செயல்பட்டுவந்த இந்த ராபின் ஹூட் ஆர்மி அமைப்பு, இப்போது டெல்லி போன்ற நகரங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் தினமும் இயங்கத் தொடங்கயிருக்கிறது.

கல்யாண சாப்பாட்டில் மீதி

ராபின் ஹூட் ஆர்மியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஐந்து நகரங்களில் சுமார் 1,600 பேருக்குத் தினமும் உணவளித்துவருகிறார்கள்.

இவர்கள் நகரங்களில் இருக்கும் கேட்டரர்களைத் தொடர்புகொண்டு திருமணம் போன்ற விழாக்களில் மீதமாகும் உணவை வீணாகவிடாமல் அதையும் சேகரிக்கத் தொடங்கயிருக்கிறார்கள். “நம் நாட்டில் திருமணங்களில்தான் அதிகமான உணவு வீணாகிறது. ஒருமுறை ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணத்தில் மீதமான உணவை ஒரு கேட்டரிங் நிறுவனம் எங்களிடம் வழங்கியது. அந்த உணவை 980 பேருக்கு வழங்க முடிந்தது” என்கிறார் நீல் கோஸ்.

நல்ல உணவுதான் நிபந்தனை

இந்த அமைப்பில் இணைவதற்கு சில விதிமுறைகளையும் வைத்திருக்கிறார்கள். தன்னார்வலர்களாக இணைய விரும்புபவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகேயிருக்கும் இரண்டு ரெஸ்ட்ராண்ட்களில் பேசி அவர்களை வாரயிறுதியிலோ, தினமுமோ முடிந்த உணவுப்பொட்டலங்களை வழங்க சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்குப்பிறகுதான் ராபின் ஹூட் ஆர்மியில் இணைய முடியும்.

பெரும்பாலான ரெஸ்டாரண்ட்கள் இதற்காகவே உணவை ஃப்ரெஷ்ஷாகத் தயார் செய்து அளிக்கின்றன. எம்.பிக்கள் சசி தரூரும், மீனாட்சி லேகியும் இவர்கள் முயற்சிக்கு பாராட்டையும், ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் தொடர: https://www.facebook.com/robinhoodarmy

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x