Last Updated : 19 Jan, 2015 11:02 AM

 

Published : 19 Jan 2015 11:02 AM
Last Updated : 19 Jan 2015 11:02 AM

துணிவே தொழில் - திறமையான சிஇஓ அவசியமா?

புதியதாக தொழில் தொடங்குவது வாழ்க்கையை பணயம் வைப்பதைப் போன்ற முயற்சி. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவத்துக்கு உள்ள மதிப்பு விலை மதிக்க முடியாதது. விமானியாக முன் அனுபவம் இல்லாதபோது நீங்கள் விமானத்தை ஓட்ட முன் வருவீர்களா? அத்தகைய முட்டாள்தனமான முடிவை ஒருபோதும் எடுக்கமாட்டீர்கள். அதைப்போலத்தான் புதிதாக தொழில் தொடங்குவதும்.

பெரும்பாலான தொழில்முனைவோர் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் தொழிலை ஆரம்பிப்பர். நிறுவனத்தில் அனுபவம் இல்லாத தலைமைச் செயல் அதிகாரியால் தொடங்கப்படும் தொழில் 1000 சதவீதம் ஆபத்தான முடிவாக இருக்கும்.

ஆலோசகர்கள் இப்போது அபரிமிதமாகக் கிடைக்கின்றனர். ஆலோசனைகளை கட்டணம் செலுத்தியோ அல்லது இலவசமாகவோ பெறலாம். உரிய துறையில் அனுபவம் மிக்கவர்களிடமிருந்து ஆலோசனைகள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். இதே துறையில் அனுபவம் உள்ளவர்கள் இருந்தால் அது மிகப் பெரிய சொத்தாகும். எந்தத் தொழிலிலும் விதிவிலக்கு என்று ஒன்று உண்டு.

ஒரே நாள் இரவில் மிகச் சிறந்த தலைமை செயல் அதிகாரியாக வளர முடியாது. புத்தகத்தைப் படித்துவிட்டாலும் இது வராது. தவறுகளிலிருந்தும் கிடைக்கும் பாடமே அனுபவம்.

வெற்றிகரமான தொழில், முதலீட்டுக்குப் பின்னணியில் இவை உள்ளன. பிரச்சினை எது என்பதை நீங்களாகவே உணர வேண்டும். இதில் ஸ்மார்ட்டான நிர்வாகி இதை தனது குழு மூலம் அறிந்து கொள்வார். அனுபவம் மிக்கவர்கள் இருந்தால் நல்லது. ஆனால் அது அவசியம் என்பதல்ல. அனுபவம் மிக்க சிஇஓ உங்கள் நிறுவனத்தில் இருந்தால் உங்களுக்கு வெற்றி வசப்படும்.

சிஇஓ என்ன செய்வார்?

நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு பல திறமைகள் இருந்தாலும் அவருக்கு இரண்டு திறமைகள் மிகவும் அவசியமானவை. ஒன்று அனுபவத்தின் போது செய்த தவறுகளின் வாயிலாகக் கற்றுக் கொண்டது. மற்றொன்று இலக்கை எட்டுவதற்காக மற்றவர்களை வேலை செய்யும்படி தூண்டுவது. இலக்கை எட்டுவது மட்டுமே சிறந்த பணியாளர் நிர்வாகம் கிடையாது. தொழிலாளர் நிர்வாகம் என்பது மனிதாபிமானத்தோடு எல்லா நேரத்திலும் அணுக இயலாது. ஆனால் சிஇஓ நிலையில் இருப்பவர் சில சந்தர்ப்பங்களில் சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இருந்தாலும் பிரச்சினையைத் தீர்ப்பதில் முழு மனதோடு முயற்சிக்க எடுக்க வேண்டும்

இயக்குநர் குழுவின் பங்கு என்ன?

இயக்குநர் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் நிறுவனத்துக்கான வளர்ச்சித் திட்டத்தை வகுக்க போதுமான நேரம் இல்லாதவர்களாக இருப்பர். அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இவர்கள் பெரும்பாலும் பங்குதாரர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்வர். ஒரு பணிக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது நிராகரிப்பது ஆகியவற்றை மட்டுமே இவர்கள் மேற்கொள்வர். வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதில் இவர்கள் நேரடியாக ஈடுபடுவது கிடையாது. ஆனால் நிறுவனம் வகுத்தளித்த திட்டங்களை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கும் பணியை மேற்கொள்வர்.

இயக்குநர் குழுவில் எவர் இடம்பெறுவர்?

வெறுமனே முதலீட்டாளர்களாக மட்டும் இல்லாமல், ஒரு சில துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இயக்குநர் குழுவில் சேர்ப்பது நல்லது. நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் திறமை பெற்றவராக இருப்பது அவசியம்.

நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கும் சிஇஓ-வின் பணி

புதிதாக தொடங்கப்படும் நிறுவனத்தை வெற்றிகரமானதாக ஆக்க அந்நிறுவனத்தில் அனுபவம் மிக்க சிஇஓ அல்லது ஆலோசகர் இருப்பது புலனாகும். மிகவும் இக்கட்டான சூழலில் அவர் ஆலோசனை அளிப்பதோடு சரியான வழியையும் காட்டுவார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தனது மேலான ஆலோசனையை அளிப்பதோடு அதுகுறித்தும் விவாதிப்பார்.

ஒரே நாள் இரவில் மிகச் சிறந்த தலைமை செயல் அதிகாரியாக வளர முடியாது. புத்தகத்தைப் படித்துவிட்டாலும் இது வராது. தவறுகளிலிருந்தும் கிடைக்கும் பாடமே அனுபவம். மேலும் அனுபவசாலிகளிடம் விவாதித்து பெறுவதும் அனுபவம். ஆலோசனைகளை ஏற்கும் பக்குவத்தோடு நீங்கள் இருங்கள். உங்களைச் சுற்றி அதாவது உங்கள் தொழிலில் எத்தகைய மாற்றங்கள் நடைபெறுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள், தொழிலும் வசப்படும்.

கே.சுவாமிநாதன்

aspireswaminathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x