Published : 12 Apr 2014 10:17 AM
Last Updated : 12 Apr 2014 10:17 AM

மனதுக்கு இல்லை வயது!- 12:04:14

மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி செய்யும்போது பெரியவர் ஒருவரை அடிக்கடி பார்ப்பேன். அவருக்கு வயது 75-க்கு மேல் இருக்கும். அவரது நடையே மித ஓட்டமாக இருக்கும். பயிற்சியை முடித்த பின்பு இளைஞர்களுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.

நீங்கள் எப்படி சுறுசுறுப்பாகவே இருக்கிறீர்கள் என்று ஒருநாள் அவரிடம் கேட்டேன். ‘‘ஒரு நாளுக்கு மூன்று நாளிதழ்கள் படித்து, உலக நடப்புகளை அறிந்துகொள்கிறேன். சமூகவலைதளங்கள் உள்பட சில அடிப்படைத் தகவல் தொழில்நுட்ப விஷயங்களை பேரக் குழந்தைகளின் உதவியுடன் புதுப்பித்துக்கொள்கிறேன்’’ என்றார் . பெரும்பாலான மூத்த குடிமக்களின் பிரச்சினை, அவர்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்வது (அப்டேட்) இல்லை.

‘‘நான் அந்தக் காலத்து மனுஷன். இதெல்லாம் நமக்கு எதுக்குப்பா? இன்னும் கொஞ்ச காலம்தானே’’ என்கிற சலிப்புத் தட்டும் எதிர்மறை எண்ணங்களிலேயே பலரும் காலத்தைக் கழிக்கின்றனர். இதுவே மூத்த குடிமக்களுக்கும் இளைய தலைமுறையினருக்குமான இடைவெளி அதிகரிக்கக் காரணம். இதனாலேயே, ‘இதெல்லாம் உங்களுக்குப் புரியாது தாத்தா’ என்று புறக்கணிக்கப்படவும் நேரிடுகிறது.

அதற்காக மூத்த குடிமக்கள் அனைத்து விஷயங்களிலுமே இளைஞர்களுக்கு இணையாக மூக்கை நுழைத்து சிரமப்பட வேண்டியதும் இல்லை. தங்களுக்குத் தேவையான சின்னச் சின்ன அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் இருப்பது எத்தனை மூத்த குடிமக்களுக்குத் தெரியும்? 2007-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது இந்தச் சட்டம்.

சொந்த வருமானம் அல்லது சொந்தமான சொத்துகள் மூலம் தன்னைத் தானே பராமரித்துக்கொள்ள முடியாத ஒருவரை பராமரிக்கும் சட்டபூர்வமான கடமை அவரது வாரிசுகளுக்கு உள்ளது. அதை செய்யத் தவறினால் பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம். அதனை அவர் வருவாய்க் கோட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைப்பார்.

வாரிசுதாரர்களிடம் வருவாய்க் கோட்ட அலுவலர் விசாரித்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை பெற்றோருக்கு வழங்க உத்தரவிடுவார். அப்படியும் பணம் கொடுக்கவில்லை என்றால் கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்...)

இதேபோல, மூத்த குடிமக்களின் சொத்துகள் அபகரிக்கப்படும்போதும் அவர்கள் மாவட்ட ஆட்சியரை அணுகலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டக் குழு விசாரணை நடத்தி, மூத்த குடிமக்கள் நலன் பேணிக் காத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும். அதேபோல, தங்கள் பெயரில் இருக்கும் அசையாச் சொத்துக்களை வாரிசுகள் அனுபவித்துக்கொண்டே பெற்றோரை கவனிக்கவில்லை என்றால், அசையாச் சொத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து செலவுக்கு பணம் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் பெற்றோர் யாருக்கு சொத்தை உயில் எழுதி வைக்கிறார்களோ, அவர்கள் அந்த கடனை அடைத்த பிறகுதான் சொத்தை அடைய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x