Published : 03 Jan 2015 01:10 PM
Last Updated : 03 Jan 2015 01:10 PM

தொண்டை வலிக்கு முற்றுப்புள்ளி

எனக்கு அடிக்கடி தொண்டை வலி வருகிறது. அதை முழுதாகப் போக்க முடியுமா?

- ஜார்ஜ், களியக்காவிளை

நீங்கள் குறிப்பிட்டுள்ள தொண்டை வலியை Pharyngitis என்பார்கள். Pharyngitis-யை Sore throat என்றும் அழைப்பார்கள். இது வந்தால் தொண்டையில் ஊசியை வைத்துக் குத்துவது போல் வலிக்கும். விழுங்குவதற்கும் கஷ்டமாக இருக்கும்.

ஜலதோஷம் வந்த பிறகும், வைரஸ் காய்ச்சல் வந்த பிறகும் இது காணப்படும். Group A streptococcus கிருமிகள் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள். குளிர் காலங்களில் இது அதிகம் வரலாம். இது பரவும் தன்மைகொண்டது. இதனுடன் காய்ச்சல், தலைவலி, தோலில் குறியீடுகள், நிணநீர் நாணங்களில் வீக்கம் போன்றவை காணப்படும்.

சில நேரம் தேவைப்பட்டால் தொண்டையில் இருக்கும் திசுவை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். இது வைரஸால் வந்திருந்தால் Antibiotic-க்கால் பலன் கிடையாது. நம்முடைய உணவுப் பழக்கத்தின் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை இயல்பாக அதிகரிப்பதே சிறந்தது.

# இதற்கு துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு, திப்பிலி, தேயிலை போட்டு தேநீர் வைத்துக் குடிக்க வேண்டும்.

# சூடான தண்ணீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

# கதிராதி வடி என்ற மாத்திரையை வாயில் சுவைக்க வேண்டும்.

காதில் பழுப்பு வராமல், (sinus) அழற்சி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மை கொண்டது என்பதால் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் இந்த நோயுடன் மிகுந்த தலைவலியாலும் அவதிப்படுவார்கள். நவீன மருத்துவத்தில் Penici##in, Ampici##in ஊசி 10 நாட்களுக்குப் போடுவார்கள்.

ஒரு சில நேரம் இது மூட்டு வாதமாக (Rheumatic arthritis) மாறிவிடும். சில நேரம் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு ஆயுர்வேதத்தில் முதலில் இந்து காந்த கஷாயம், தசமூல கஷாயம் கொடுப்பார்கள். தாளிசாதி சூரணம், கண்டங்கத்திரி சூரணம், தூதுவளை சூரணம் கொடுப்பார்கள். பின்பு தாணிக்காய் கஷாயம், அக்கறா குடிநீரில் வாய் கொப்பளிக்கச் சொல்வார்கள்.

காய்ச்சல் போன பிறகு, நோய் வராமல் இருக்க இந்துகாந்த நெய், கூஷ்மாண்ட லேகியம், சியவன பிராச லேகியம் போன்றவற்றை கொடுப்பார்கள். இவற்றால் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும். நோயில் இருந்து விடுபட்ட பிறகு, தலைக்கு கரிசலாங்கண்ணி தைலம் 10 சொட்டு தேய்த்துக் குளிக்கலாம்.

எளிமையான கைமருந்துகளைப் பார்ப்போம்:

# தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்குப் பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும். மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியுடன் மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண் ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால், தொண்டையைத் தொல்லைப் படுத்தும் பிரச்சினைகள் நீங்கிவிடும்.

# சிற்றரத்தையை இடித்துப் பொடியாக்கி, அதனுடன் 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தொண்டைப்புண் குறையும்.

# இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

# உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.

# கடுகைப் பொடி செய்து தொண்டையின் வெளிப்புறத்தில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x