Published : 05 Jan 2015 02:55 PM
Last Updated : 05 Jan 2015 02:55 PM

பான் கார்டு அவசியமாவது ஏன்?

பான் கார்டு (Permanent Account Number) ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல, அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப் பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.

இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம்.

ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.

எப்படி வாங்குவது?

பான் கார்டு வாங்கும் நடைமுறை வெகு எளிதானது. பான் எண் வாங்குவதற்கு என்று வயதுவரம்பு கிடையாது. வருமான வரி கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. எந்த நிறுவனத்திலும் பணியாற்ற வேண்டும் என்கிற தேவையுமில்லை. ஆதார் அடையாள அட்டை போல, அங்கீகாரம் பெற்ற அரசின் அமைப்பு வழங்கும் வரிக்கணக்கு எண். நீங்கள் வருமான வரி கட்டினாலும், கட்டவில்லை என்றாலும் உங்களுக்கு என்று ஒதுக்கப்படும் எண் இது.

பிறந்த குழந்தைக்குக் கூட பான் எண் வாங்க முடியும். குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

பான் கார்டு வாங்கிக் கொடுக்கும் முகவர்களிடம் தேவையான விவரங் களை கொடுத்தால், அவர்கள் என்எஸ் டில்எல் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்வார்கள். அங்கிருந்து நேரடியாக உங்கள் வீட்டு முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்பட்டு விடும். நேரடியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தும் பான் கார்டு வாங்கலாம்.

இதற்கு முகவரிச் சான்று, அடையாளச் சான்று, வயது சான்று போன்ற ஆவணங்களும், உங்களது புகைப்படமும் இணைக்க வேண்டும்.

பான் எண் எப்படி ஒதுக்கப்படுகிறது?

முதல் ஐந்து எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசையில் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும். நான்காவது எழுத்து விண்ணப்பதாரர் குறித்த குறியீடு. அதாவது குழுமம் (கம்பெனி) என்றால் - C , தனி நபர் -P, ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) - H , நிறுவனம் - F , தனி நபர்களின் கூட்டு (AOP) - A , அறக்கட்டளை - T , பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) - B ,

லோக்கல் அதாரிட்டி - L , செயற்கையான நீதிமன்ற நடவடிக்கை சார்ந்த நபர் - J , அரசு - G.

ஐந்தாவது எழுத்து தனிநபர் என்றால் அவரது குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரிலுள்ள முதல் எழுத்து. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-ஆரம்பித்து 9999 வரை வரிசையாகச் செல்லும்.

கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு எழுத்து.

எப்படி விண்ணப்பம் செய்வது?

பான் கார்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 105 ஆகும். காசோலை, வங்கி வரைவோலை மற்றும் ஆன்லைன் பேங்கிங் வழியாகவும் செலுத்தலாம். காசோலை NSDL - PAN என்கிற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் இருக்க வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 971 ரூபாய். இதே இணையதளத்தின் மூலம் வழி பான் கார்டு திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். கட்டணங்களில் மாற்றமில்லை.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்ய இணையதள முகவரி:

>https://tin.tin.nsdl.com/pan/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x