Last Updated : 02 Dec, 2014 11:12 AM

 

Published : 02 Dec 2014 11:12 AM
Last Updated : 02 Dec 2014 11:12 AM

வெட்டிவேரு வாசம் 12 - கள்வெறி கொள்ளுதடி!

பட்டப்படிப்பை முடித்திருந்த நேரம். வேலை தேடும் படலம் தொடங்கியிருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பனாயிருந்த தியாகு தேடி வந்தான்.

“டேய்… பக்கத்து வீட்டு வேணு சாரோட தங்கச்சி விழுப்புரத்திலேர்ந்து வந்திருக்கா. தமிழ்ல அரியர்ஸ். இங்கதான் எக்ஸாம் எழுதப் போறா. அவளுக்குக் கொஞ்சம் தமிழ் கத்துக் குடுடா...” என்றான்.

தமிழ் போதிக்க வேணு சார் வீட்டுக் குப் போனேன். துணைக்கு தியாகுவும் வருவான். கிரிஜாவுக்குப் பெரிய விழிகள். நான் என்ன சொன்னாலும், அந்த விழிகள் மேலும் விரிய ‘ஓ’ என்று கேட்பாள். கொஞ்ச நாள் கழித்துத்தான் தியாகு என்னை முட்டாள் கழுதையாக்கி இருந்தது புரிந்தது. அவன் கிரிஜாவைக் காதலித்துக் கொண்டிருந்தான். சந்திப்பு களுக்கு நான்தான் உடந்தை.

கிரிஜாவிடம் காதலைச் சொல்லி அவன் கெஞ்சக் கெஞ்ச, அவள் மறுத்துக் கொண்டிருந்தாள். ஆனா லும் கிரிஜாவுக்கும் தியாகுவைப் பிடித்திருந்ததை உணர முடிந்தது.

கிரிஜா கோயில், ஷாப்பிங் என்று போகும் போதெல்லாம் தியாகு என்னை இழுத்துக் கொண்டு போய்விடுவான். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பான். ‘கிரிஜா… கிரிஜா’ என்று உருகுவான்.

கிரிஜாவோ “பாருண்ணா… தியாகுவை. எப்பப் பார்த்தாலும் லவ்வு, லவ்வுன்னு சொல்லிக்கிட்டு..” என்று தியாகுவைச் செல்லமாகக் கடிந்து கொள்வாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். கிரிஜா தியாகுவுக்குப் பச்சைக் கொடி காட்டியதும், அவன் எனக்கு புஹாரி ஹோட்டலில் நிற ரகளையான ஃபலூடா வாங்கித் தந்தான்.

காந்தி மண்டபம், வள்ளுவர் கோட்டம், கூட்டமற்ற திரைப்படக் கொட்டகை, எலியட்ஸ் கடற்கரை என்று நகரின் அத்தனை மூலை முடுக்கு களிலும், என்னை சாட்சியாக வைத்துக் கொண்டு அவர்களது காதல் வளர்ந்தது. விஷயம் வேணு சாருக்குத் தெரிந்ததும், பொங்கினார். படித்துக் கிழித்தவரை போதும் என்று தங்கையை விழுப்புரத்துக்கு அனுப்பிவிட்டார். உடனடியாக அவள் வீட்டில் திருமணப் பேச்சு எழுந்தது.

கிரிஜாவால் தியாகுவை மறக்க முடியவில்லை. இரவோடு இரவாக, நான்கைந்து சில்வர் பாத்திரங்கள், கரண்டிகளை மூட்டை கட்டிக்கொண்டு, தியாகுவோடு குடித்தனம் நடத்துவதற் காகச் சென்னைக்கு வந்துவிட்டாள். ஒரு தோழி வீட்டில் தங்கிக் கொண்டு தியாகுவுக்குச் செய்தி அனுப்பினாள்.

தியாகுவும் அவளைச் சந்தித்தான். தனது வீட்டில் சம்மதம் வாங்கும் வரை பொறுமையாக இருக்கும்படி உபதேசித்தான். கிரிஜாவைப் பெற்றவர்கள் வேணு சாருக்கு போன் செய்து, விஷயத்தைச் சொல்லி அழுதார்கள். தன் தங்கை இருக்கும் இடம் நிச்சயம் தியாகுவுக்குத் தெரியும் என்று அவர் இரண்டு ஆட்களை அனுப்பி எங்களைக் கண்காணிக்கச் சொன்னார்.

என் பின்னால் ஒருவன் பின்தொடர, தியாகுவின் நிழலாக இன்னொருவன். கிரிஜா தங்கியிருந்த இடம் அவர்களுக் குத் தெரிந்துபோனது. வேணு சார் அவளை வீட்டுக்கு இழுத்துச் சென்றார். தியாகு தைரியம் பெற்று, அவர் வீட்டுக்குப் போனான். அவர் எதிரிலேயே கிரிஜாவைத் தன்னோடு வரச் சொன்னான். அவளும் சட்டென்று தியாகுவுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

வேணு சாருக்கும் தியாகுவுக் கும் வாக்குவாதம் தொடங்கியது.

ஒருகட்டத்தில், வேணு சார் தியாகுவிடம், “என் உயிர் போனாலும் தங்கச்சியை உனக்குக் கட்டிக் கொடுக்க மாட்டேன்டா..” என்று ஆவேசமாய்க் கத்த, தியாகு தளர்ந்தான்.

தடுமாறி, கீழே விழ இருந்தவன் சுவரைப் பிடித்துச் சமாளித்தான். அந்தச் சமயத்தில் அவனது இடது உள்ளங்கையில் மூடி வைத்திருந்த ஒரு பாட்டில் நழுவி தரையில் விழுந்து உருண்டது. பூச்சிக் கொல்லி மருந்து. கலப்படமற்ற விஷம். கிரிஜாவைப் பிரித்தால் அவன் உயிர் பலியாகும் என்றதும், வேணு சார் பதறிவிட்டார். சமாதானம் பேசி, கிரிஜாவைத் திருமணம் செய்து கொடுப்பதாக சத்தியம் செய்தார். தியாகு பெற்றோருடன் பெண் கேட்டு வருகிறேன் என்று சொன்னான்.

கண்ணீர் உகுத்தபடி நின்றிருந்த கிரிஜா வெட்கப் புன்னகையுடன் உள்ளறைக்கு ஓடிப் போய் கதவுக்குப் பின்னால் நின்று, தியாகுவுக்கு ஒழுங்கு காட்டினாள். “அவளிடம் சொல்லிக் கொண்டு புறப்படலாம்..” என்றான், தியாகு. துணைக்கு என்னையும் சேர்த்துக் கொண்டு கிரிஜா இருந்த அறைக்குள் நுழைந்தான்.

கிரிஜா எதிர் சுவருக்கு நகர்ந்து, அதில் சாய்ந்து நின்றாள்.

“கெளம்பறேன்..” என்றான் தியாகு.

“அவ்வளவுதானா? இனிமே லவ்லாம் கெடையாதாடா..?” என்று உதடுகள் துடிக்க, ஏக்கமான குரலில் கிரிஜா கேட்டாள்.

தியாகு சட்டென்று ஒரே எட்டில் பாய்ந்து அவளது இதழ்களில் முத்தமிட்டான். அதிர்ந்து போனேன். 'இந்த முரடன் என்ன வேலை செய்தான் பார்' என்று பதறினேன்.

கிரிஜா அதிர்ந்த மாதிரி தெரியவில்லை. கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள். திடீரென்றுதான் நான் அங்கே சாட்சி யாக நிற்பதை உணர்ந்தாள். தியாகுவைத் தள்ளிவிட்டு, “ஒன் ஃப்ரெண்ட் என்ன பண்றார் பாருண்ணா..” என்றாள் சிணுங்கும் குரலில்.

‘அடிப்பாவி!’ என்று சிரித்தேன்.

‘அயன்’ திரைப்படத்தில் தேவா (சூர்யா) தனது காதலி யமுனாவை (தமன்னா) இப்படித்தான் அவள் அண்ணன் சிட்டியை (ஜெகன்) சாட்சியாக வைத்துக் கொண்டு முத்தமிடுவான். யமுனா, அண்ணனிடம் சிணுங்கலாக புகார் சொல்லி விலகுவாள்.

இந்தத் திரைக் காதலை மக்கள் ரசித்தாலும், அண்ணனுக்கு எதிரிலேயே தங்கையும் காதலனும் முத்தம் கொடுத்துக் கொள்வதெல்லாம் ஓவர் என்று விமரிசித்தார்கள் - பின்னணியில் உண்மைக் கதை இருப்பது தெரியாமல்.

பின் குறிப்பு: கிரிஜா - தியாகு தம்பதியரின் செல்ல மகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நிகழவிருக்கிறது.

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x