Published : 31 Mar 2014 12:17 PM
Last Updated : 31 Mar 2014 12:17 PM

வேலையைக் காதலி! - 4

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய போக்கு தெரிகிறது. வேலைக்குப் போவதை விட தனியாகத் தொழில் தொடங்கும் ஆசை அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கிய மான போக்குதான்.

ஆனால் எப்போது எப்படி என்பதில்தான் குழப்பம்.

மாணவப் பருவத்திலேயே பல நவீன வியாபார எண்ணங்கள் பலருக்கு இருப்பது உண்மை. ஆனால் நிஜமாக தொழில் தொடங்குவோர் மிகக்குறைவு. அதில் ஜெயிப்பவர்கள் மிக மிகக் குறைவு.

வணிக நிர்வாகம் படிக்கும் எம்.பி.ஏ.க்களில் 2% தான் தனியாக தொழில் தொடங்க விரும்புவதாகக் கூறியுள்ள தாகப் படித்து அதிர்ந்தேன். எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் ஒரு தொழில் முனைவோருக்கான அமைப்பு உள்ளது. ஈ-செல் என்று பெயர். இவை களில் பல வருடந்தோறும் சில தொழிலதிபர் களை அழைத்துப் பேச வைத்து, மாணவர் களுக்கு மிக்சர், டீ கொடுத்து தங்கள் கடமையைச் செவ்வனே முடித்துக் கொள் கின்றன. இதற்கு அரசு ஊக்கத் தொகை அளிப்பதாகவும் கேள்வி.

இவை அனைத்தையும் மீறி தொழில் துவங்க ஆசைப்படும் பலரைச் சந்திக் கிறேன். அவர்கள் ஆசைகள் நியாயமான வை. ஆனால் பலர் சொல்லும் காரணங்கள் தான் மனக்கிலேசத்தை உண்டு செய்கிறது.

“யாருக்கும் கீழ் வேலை செய்யக்கூடாது. நம்மள யாரும் கேள்வி கேட்கக்கூடாது. நாமதான் எல்லாம்னு இருக்கணும்.”

“சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னா பிஸினஸ்தான் சார்! எதையாவது செஞ்சு பெரிய ரேஞ்சுல செட்டில் ஆகணும்.”

“நாம் வேலைக்கு போய் சம்பாதிக் கணும்னு இல்லைங்க. அதனால எதையாவது செஞ்சு பாக்கலாம்.’’

சிலர் ரொம்ப சீரியஸாக காமெடி பண்ணுவார்கள். “அரியர்ஸ் எக்கச்சக்கம் இருக்கு. பாஸ் பண்ணவெல்லாம் முடி யாது. அதனால வேறு ஏதாவது செஞ்சு பார்க்கலாம்!” “நான் லவ் பண்ற ஆள் முன்னாடி ஒரு பிஸினஸ் மேக்னட் ஆகி நிக்கணும்!”

வேலைக்குப் போவதற்கு மாற்று தொழில் செய்வது அல்ல. ஏன் என்றால் உங்கள் தொழிலிலும் நீங்கள் வேலை செய்ய வேண்டும். இன்னும் சொல்லப் போனால் பொறுப்புகள் அதிகம்.

தனியாக தொழில் தொடங்குபவர்களில் பலர் தோற்பதற்குக் காரணம் தொழில் நடத்துவதைப் பற்றிய தவறான எதிர் பார்ப்புகளே.

தன் மகனை அழைத்து வந்த ஒருவர் கூறினார்: “என்னால் ஒரு கோடி வரை கடன் வாங்கி முதலீடு செய்ய முடியும். பையனுக்கு என்ன தொழில் வரும், எதைச் செய்தால் நல்லா வருவான்னு ஆய்வு செய்து சொல்லுங்கள்” என்றார். இத்தனைக்கும் அவர் தொழிலதிபர் அல்ல. மாத சம்பளக்காரர்தான்.

சோதித்ததில் மகனுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் ஸ்திரமான வேலை பார்க்கத்தான் விருப்பம். ஆனால் அப்பா சொல்லை மீற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். தந்தைக்கு தன் ஒரே மகன் மிக உயர்ந்த நிலைக்கு வர தொழில் துவங்குவதுதான் ஒரே வழி என்ற எண்ணம். கடைசியில் அவருக்குத் தனியாக ஆலோசனை செய்து அனுப்பினேன். இன்று அந்த மகன் மும்பையில் ஒரு பெட்ரோலியம் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். அப்பாவும் கோடி ரூபாய் கடன் வாங்காமல் மகன் வளர்ச்சியை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தொழில் தொடங்குமுன் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்தல் மிக அவசியம் என்று நம்புகிறேன். தொழில் உலகில் ஒரு பணியாளராய் சில பால பாடங்கள் கற்பது நல்லது. அது நீங்கள் பிற்காலத்தில் தொழில் பண்ணப்போகும் துறையாக இருக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை.

அமெரிக்க பிரபல தொழில் முனை வோர்கள் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்கள்தானே, அவர்கள் சோபிக்க வில்லையா, அவர்கள் செய்யும் போது நம்மால் முடியாதா என்று கேட்கலாம்.

அவர்கள் சமூக சூழல் வேறு. அவர்களுக்கு குடும்ப அமைப்பின் எதிர் பார்ப்புகள் குறைவு. வயது, பாலினம், படிப்பு போன்றவை எதில் தோற்றாலும் வேறு எதில் வேண்டுமானாலும் மீண் டும் துவங்கும் வசதி உள்ளது. தவிர, பல பல்கலைக்கழகங்கள் தன் வளாகத்திலேயே ஸ்டார்ட் அப் கம்பெனிகளை அடை காத்து வளர்க்கின்றன.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பிறந்த கம்பெனிகளின் எண்ணிக்கை எவ் வளவு என்று கூகுள் செய்து பாருங்கள். நான் சொல்வது புரியும். தவிர ஒரு பிஸினஸ் பிளானை எடுத்துக் கொண்டு வரும் நபரின் வயது, படிப்பு, அனுபவம், பின்னணியை நம் அளவிற்கு அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அங்கு ஒரு தொழில் முனைவு தோற்றால்கூட அதன் பின் எம்.பி.ஏ.விற்கு விண்ணப்பிக்கும்போது அந்தத் தொழில் அனுபவத்தின் மதிப்பு கருதி முன்னுரிமை தருகிறார்கள். இங்கு முதல் தொழில் படுத்துவிட்டால் அவனை தோல்விப் பட இயக்குநரைப் போலப் பார்க்கிறோம். அந்த குற்ற உணர்விலிருந்து மீண்டு வர நிரம்ப துணிவு வேண்டும் இங்கு.

அதனால் முறையான படிப்பும், தொழில் அனுபவம் தரும் வேலையும் உங்கள் தொழில் முனைவின் படிக்கட்டுகள். 5 வருடங் களில் நிதி பெற சிறந்த வழிகள், கூட்டு சேரத்தக்க பங்குதாரர்கள், உதவி செய்யக் கூடிய தொழில் அன்பர்கள், தொழில் நுட்பத் தகவல்கள், பல்வேறு துறைக்கு ஏற்ற பணியாளர்கள் இப்படி மெல்ல மெல்ல திரட்டித் தயாராதல் நல்லது.

வேலையில் நீங்கள் பணியாளர் என்கிற ஒரு முகம்தான். தொழிலில் உங்களுக்கு முதலாளி, நிர்வாகி மற்றும் தொழிலாளி என பல முகங்கள்தான். இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டு தயாரானால் உங்களுக்கு வெற்றி முகம் தான்.

- திங்கள்தோறும்

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x