Last Updated : 05 Dec, 2014 12:43 PM

 

Published : 05 Dec 2014 12:43 PM
Last Updated : 05 Dec 2014 12:43 PM

வாட்ஸ் அப்புக்கு வழிவிடும் ஃபேஸ்புக்

கையில் எப்போதும் மொபைல வச்சுக்கிட்டு என்னதான் பண்றாங்கன்னே தெரியல எனச் சலித்துக்கொள்கிறீர்களா? உங்கள் நிலைமை ரொம்ப கஷ்டம்தான். ஏனெனில் இளைஞர்கள் தங்கள் கையகலக் கருவியில் உலகத்தைப் பார்க்கிறார்கள். உலகெங்கிலும் வாழும் தங்கள் நட்பையும் உறவையும் வாட்ஸ் அப் வழியே ஒன்றிணைத்துக் குதூகலிக்கிறார்கள்.

அமிஞ்சிக் கரையில் தான் பார்க்கும் அழகான காட்சி ஒன்றை அமெரிக்காவில் உள்ள நண்பனுக்கு உடனே வீடியோ படமாக எடுத்து அனுப்பிவிட முடிகிறது. சில நிமிடங்களுக்குள் அந்தப் படம் கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துவிடுகிறது. குதூகலத்தின் திரியில் வைக்கப்படும் நெருப்பு உலகைச் சில நிமிடங்களில் உற்சாகத்தில் மூழ்கடித்துவிடுகிறது.

ஸ்மார்ட் போனின் அப்ளிகேஷனான வாட்ஸ் அப் என்னும் மந்திரம் இளைஞர்களுக்கு ஜீபூம்பா காட்டுகிறது. அவர்கள் ஏவும் வேலையை எல்லாம் செய்துவிட்டு அடுத்து என்ன என்பது போல் அந்தப் பூதம் காத்துக் கிடக்கும். ஸ்மார்ட் போனில் உள்ள நண்பர்கள் யார் யாரெல்லாம் வாட்ஸ் அப் வைத்திருக்கிறார்கள் என்பதை உடனுக்குடன் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அவர்கள் எப்போது வாட்ஸ் அப்பில் மெஸேஜைப் பார்த்தார்கள் என்னும் தகவல் நகர்ந்துகொண்டே இருக்கிறதே. ஐ லவ் யூ சொல்லக் கடிதம் எழுதி அதை அவள் படித்தாளோ, இல்லையோ என இளைஞர்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை.

வாட்ஸ் அப்பில் நினைத்ததைச் சொல்லி வீடியோ ஃபைலாக அனுப்பிவிடலாம். அவள் பதிலுக்கு ஓகே சொல்லலாம். அல்லது செருப்பைக்கூடக் காட்டலாம். அதைப் பற்றி என்ன, ஷேம்லெஸ் கய்யாக மாறி அடுத்த தொடர்புக்குத் தாவிவிடலாம்.

வாட்ஸ் அப்பை அணுக கம்ப்யூட்டர் தேவையில்லை ஸ்மார்ட் போனே போதும் என்னும் நிலையின் காரணமாக, அது ஃபேஸ்புக்கைவிட எளிதில் இளைஞர் உலகத்தில் ஊடுருவிவிட்டது. இளைஞர்கள் என்றில்லை, கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரிடம் வந்து சேர்ந்துள்ளது இந்த வாட்ஸ் அப். என்ன உனக்கு எழுதப் படிக்கத் தெரியாதா என்று கேள்வி கேட்பதுபோல வாட்ஸ் அப் உன்னிடம் இல்லையா என எள்ளலுடன் கேட்கிறார்கள்.

வேறு வழியின்றி பலர் அதில் தங்களை இணைத்துக்கொள்ள நேர்கிறது. இந்தியாவில் சுமார் ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் போஸ்ட்களில் பரவுவதைப் போல இதிலும் கேளிக்கைச் செய்திகள் நிமிடங்களில் பரவுகின்றன.

குடும்ப உறுப்பினர்கள், அலுவலக நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரித் தோழர்கள் எனப் பல குழுக்களில் இணைந்துகொண்டு வாழ்க்கையைச் சுவாரசியப் படுத்திக்கொள்கிறார்கள். வேலைகளின் நடுவே கிடைக்கும் நேரத்தில் இளைப்பாற வாட்ஸ் அப் நன்கு கைகொடுக்கிறது. எங்கேயோ இருக்கும் நண்பன் அனுப்பும் ஒரு ஸ்மைலி துக்கங்களைத் தூசாக்கித் துடைத்துச் செல்கிறது.

இதிலும் வளவளவெனக் குப்பைகளைக் கொட்டும் நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இஷ்டம்னா படிக்க வேண்டியது தான், இல்லாட்டி விட்டுற வேண்டியதுதான். என்ன செய்றது பாஸ், நண்பர்கள்னா தொந்தரவும் இருக்கத்தானே செய்யும் என்று இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

மெயில், ஆர்குட், ஃபேஸ்புக் என்று கணினியை மையப்படுத்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவை கைபேசியை மையப்படுத்துவதால் எளிதில் அனைவரையும் ஈர்த்துவிடுகின்றன. இனி ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புக்கு வழிவிட்டு நிற்பதைத் தவிர வேறு வழியே இல்லையோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x