Published : 23 Dec 2014 03:35 PM
Last Updated : 23 Dec 2014 03:35 PM

தங்கப்பாப்பாவுக்கு தாய்ப்பால் அவசியம்

படித்தவர்களைவிட படிக்காத பெண்கள் எளிதாகத் தாய்ப்பால் கொடுத்து விடுகிறார்கள் என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையைச் சேர்ந்த கைக்குழந்தை நல மருத்துவர் டாக்டர் நிஷாந் அகமது.

கிராமப் பெண்களுக்கு வேறு வாய்ப்புக்கள் இல்லை. மேலும் படித்தவர்கள் விளம்பரங்களைப் பார்த்து கரைத்த பால், கறந்த பால் என பலவற்றைக் கொடுக்க முயலுகிறார்கள். இது முற்றிலும் தவறானது.

தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை யாரும் சொல்வதும் இல்லை. தனக்காகவும் இளம் அன்னைக்குத் தெரிவதில்லை. தாய்ப்பால் வரவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். நாளொன்றுக்குச் சுமார் நூறு மில்லி பால் வந்தாலே அப்போது பிறந்த குழந்தைக்குப் போதுமானது.

இளம் அன்னைகள் கருத்தரித்த ஏழாம் மாதமே இது குறித்து மகப்பேறு மருத்துவரிடம் விளக்கம் பெற வேண்டும். Who இணையதளத்திலும் காணலாம். பொதுவாகக் குழந்தை பிறந்த அரை மணியில் தாய்ப்பால் கொடுக்கலாம்k.

குழந்தைக்கு அந்த நிலையிலேயே பால் குடிக்கத் தெரியும். உலகில் உள்ள அனைத்துப் பால் வகையிலும் இந்தப் பால் மிகுந்த இனிப்பானது, சுவையானது. இதில் குழந்தைக்கு ஏற்ற அனைத்து சக்தியும் இருக்கிறது என்று மேலும் தெரிவித்தார் டாக்டர் நிஷாந்.

முதல் மூன்று வாரங்களுக்குப் பால் கொஞ்சமாகவே வரும். இதற்கு கொலஸ்ட்ரம் என்று பெயர். இந்தப் பாலே குழந்தையின் முதல் நோய்த் தடுப்பு சாதனம் என்று சொல்லலாம். மூன்று மாதத்திற்கு பிறகு அம்மா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் அந்நேரங்களில் பாலைப் பிழிந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, குழந்தைக்குப் பின்னர் கொடுக்கலாம் என்றார் டாக்டர் டி.ஜி.சிவரஞ்சனி.

மாட்டுப்பால் கன்னுக்குட்டிக்கு, தாயின் பால் தங்கப் பாப்பாவுக்கு என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.

கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் பல பிரச்சனைகள் குறித்து டாக்டர் நிஷாந்திடம் மேலும் கேட்டபோது, தாமதமாக அழும் குழந்தைகள் பற்றித் தெரிவித்தார். குழந்தை வயிற்றுக்குள் இருக்கும்போது தனியாக மூச்சுவிடாது. அம்மாவின் உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சுக் காற்றுதான் குழந்தைக்கும், பிளசண்டா மூலமே மூச்சுக் காற்றாகக் கிடைக்கும்.

குழந்தை வெளி வந்தவுடன் பிளசண்டா தொடர்பு நீங்கிவிடும்போதுதான் குழந்தை தானாக முதல் முறையாக சுவாசிக்கத் தொடங்கும். ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளிவிடுதலை நுரையீரல்தான் செய்ய வேண்டும். குழந்தை தானாகவே தட்பவெட்ப சூழ்நிலை காரணமாகத் தானே மூச்சு விடுவதற்காக அழத் தொடங்கிவிடும். இவ்வாறு பிறந்து ஒரு நிமிடத்திற்குள் அழாத குழந்தையை ‘தாமதமாக அழும் குழந்தை’ (late cry baby) என்பார்கள்.

அழாத குழந்தையின் காலில் மருத்துவர்களே மிக லேசாகச் சுண்டுவார்கள். இதற்கும் அழவில்லை என்றால் ‘ஆம்பில் பை’ மூலம் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.

ஒரு நிமிடம் வரை குழந்தை அழவில்லை என்றால், அந்தக் குழந்தைக்கு ஆசிக்‌ஷியா என்று சொல்வோம். பல்ஸ் துடிக்காமல் நின்றுவிட்டது என்று அர்த்தம். பிறந்தவுடன் ஏற்படும் இந்த நிலை ரொம்பப் பெரிய பிரச்சனை. உலகில் பிறந்து இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து மில்லியன் என்றால் அதில் ஒரு மில்லியன் அழாத குழந்தை வகையை சேர்ந்தது.

குழந்தை பிறந்து வெளியே வரும்போதே குழந்தைக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். தாய்க்கு வலி எடுத்து, குழந்தை வெளி வர சுமார் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேரமும் அதிகபட்சம் பதினெட்டு மணி நேரமும் ஆகலாம். இதற்கு மேல் நேரமானால் குழந்தை வயிற்றுக்குள் நேராகவோ, தலை கீழாகவோ படுத்துக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

மேலும் தொப்புள் கொடி கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். குழந்தை வயிற்றுக்குள்ளேயே மலம் கழித்து, அம்மலம் குழந்தையின் நுரையீரலில் நிரம்பிவிடுவதால் மூச்சுவிட முடியாமல் அழாமலேயே இறந்துவிடக் கூடும். இந்த பிரச்சனைகள் இருந்தும் இறக்காத குழந்தைகள் புத்தி சுவாதீனம் இல்லாமல் ஆகிவிடும். மேலும் பேச முடியாமல் போவது, காது கேட்பதில் சிக்கல், பார்வைத் திறனில் குறைபாடு போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

இந்த நிலையைச் சீர்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசு மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. குழந்தை பிறந்த நிமிடம்தான் ‘கோல்டன் மினிட்’. இதற்குள் அனைத்தையும் சீர் செய்துவிட வேண்டும். இதில் தவறினால் உட்கார இயலாத, நடக்க முடியாத, நிற்க இயலாத குழந்தைகள் அதிகமானால் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் குழந்தைக்கும் இது துன்பம்.

இந்த நிலையில் இருந்து ஒரளவே குழந்தைகளை மீட்க முடியும் என்பதே உண்மை. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. இதனால்தான் மருத்துமனைகளில் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது.

பிராணன் என்ற உயிரைத் தரும் ‘பிராணா கருத்தரித்தல் மையம்’ குறித்து டாக்டர் டி.ஜி.சிவரஞ்சனி அளிக்கும் அற்புத விளக்கங்களை அடுத்த வாரம் காணலாம்.

-இந்த முனைப்பில் ‘தி இந்து’ மீடியா பார்ட்னர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x