Published : 13 Apr 2014 02:06 PM
Last Updated : 13 Apr 2014 02:06 PM

பெண் சக்தி: அணையா நெருப்பு - டீஸ்டா செடல்வாட்

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனிதஉரிமை அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டப் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படும் டீஸ்டா செடல்வாட்டும் ஒருவர்.

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய டீஸ்டா செடல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. செடல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் செடல்வாட், சீதா செடல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் இந்தியா ஆகியவற்றில் பணிபுரிந்தார். டீஸ்டா நினைத்திருந்தால், பரபரப்பான, பிரபலமான ஒரு பத்திரிகையாளராக மாறியிருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் விரும்பிய பத்திரிகைப் பணியே, அவரது வாழ்க்கையின் திருப்பத்துக்குக் காரணமாக அமைந்தது.

1993-ல் மும்பையில் மதக் கலவரம் மூண்டபோது, அவரது வாழ்க்கை தலைகீழ் மாற்றம் கண்டது. பத்திரிகையாளர் என்பதால், கலவரச் சம்பவங்களுடன் அவர் நேரடியாக உறவாட வேண்டியிருந்தது. கண்ணெதிரே நிகழ்ந்த கலவரக் காட்சிகள், அவரை உலுக்கின. அதன் பிறகு முழுநேர மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார்.

கம்யூனலிஸம் காம்பாட் (மத அடிப்படைவாதத்துக்கு எதிரான போர்) என்ற மாத இதழைக் கணவர் ஜாவெத் ஆனந்துடன் சேர்ந்து தொடங்கினார். ஜாவெத் ஆனந்தும் ஒரு முன்னாள் பத்திரிகையாளர்தான். தொடர்ந்து மத அடிப்படைவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அவர்களது வெறுப்புணர்வுக் கொள்கைகளையும் மனச்சிதைவையும் அம்பலப்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு டீஸ்டா செயல்பட்டு வருகிறார்.

தூண்டியது எது?

டீஸ்டாவை அப்படிச் செயல்படத் தூண்டியது எது?

"மதக் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் எப்போதுமே தண்டனை பெறாமல் தப்பித்துவிடுவதுதான், எங்கள் மனஉறுதியை ஆழப்படுத்தி, நமது சமூக அமைப்பில் உள்ள கோளாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டுமெனத் தூண்டியது.

எனது தாயகம் குஜராத். 1998-ல் இருந்து குஜராத் பற்றி நான் ஆராய்ச்சி செய்துவருகிறேன். அங்கு வழக்கத்துக்கு மாறான வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் ரயில் எரிந்தபோது, துயரம் நிரம்பிய நெருக்கடியான பல அழைப்புகள் எனக்கு வந்தன. நடந்ததை நேரில் அறிய குஜராத்தில் கால் பதித்தபோது, நான் உடைந்து போனேன். எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கிப் போய்விட்ட நிலையில், குறைந்தபட்ச நம்பிக்கையையாவது உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இருந்தது.

பெண்களின் கோபமும், அவநம்பிக்கையும், ஆண்களின் பயம் மிகுந்த கையாலாகத்தன்மையும் என்னை ஆழமாகப் பாதித்தன. பாதிக்கப்பட்டவர்களின் பயங்கரமான கதைகளைப் பதிவு செய்தபோது, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியும், விடை தேடும் கேள்விகளும் என் மனதை அரித்தெடுத்தன.

மதக் கலவரத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் தீர்வே அளிக்கப்படுவதில்லை. குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையும் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று, மேலும் மேலும் வலுவடைகிறார்கள்.

மதக் கலவரத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் தீர்வே அளிக்கப்படுவதில்லை. குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையும் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று, மேலும் மேலும் வலுவடைகிறார்கள்.

இதுதான் 1984-ல் டெல்லியிலும் 1992-ல் மும்பையிலும் நடந்தது. மும்பை கலவரம் போலில்லாமல், குஜராத் வழக்குகளின் இறுதிவரை போராடுவது என்று நான் முடிவெடுத்தேன்" என்கிறார். கோத்ரா ரயில்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டீஸ்டா உதவ ஆரம்பித்தபோது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பிரவிண் தொகாடியா, வெளிப்படையாக இவரை மிரட்டி இருக்கிறார்.

எதிர்ப்பு அடையாளம்

2002 குஜராத் கலவரத்துக்குப் பின்னர் நரேந்திர மோடி நிர்வாகத்துக்கு எதிரான எதிர்ப்பு அடையாளங்களுள் ஒருவராக டீஸ்டாவும் மாறினார். குஜராத் மதக் கலவரம் தொடர்பான முக்கிய வழக்குகளில் மறு புலன் விசாரணை, மறு நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த முதல் அமைப்புகளுள், டீஸ்டாவின் அமைப்பும் ஒன்று.

அவரது முயற்சியால்தான் பல முஸ்லிம்கள் இறக்கக் காரணமாக இருந்த பெஸ்ட் பேக்கரி வழக்கின் மறுவிசாரணை, குஜராத்துக்கு வெளியே வேறு மாநிலத்தில் நடத்த உத்தரவிடப்பட்டது. குஜராத் அரசின் பிம்பம் அந்த மாநிலத்திலும் இந்தியாவிலும் சரிந்துபோனதற்கு, இந்த வழக்கே முக்கியக் காரணம்.

அத்துடன் குஜராத் கலவரத்துக்குப் பின்னால் வகுக்கப்பட்ட சதித் திட்டம் தொடர்பாக மோடியை விசாரிக்க வேண்டும் என்ற கிரிமினல் வழக்கை, மறைந்த முன்னாள் எம்.பி. ஈஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரியுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தவர் டீஸ்டாதான். இந்த மனுதான், முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் நரேந்திர மோடிக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பு பற்றிய பல்வேறு புகார்களைச் சிறப்புப் புலன்விசாரணைக் குழு (Special Investigation Team) விசாரிக்க வேண்டிய நெருக்கடியைக் கொடுத்தது.

அவப் பிரசாரம்

இப்படி மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தளராத உறுதியுடன் டீஸ்டா போராடினாலும், ஒருபுறம் அவருக்கு எதிரான அவப் பிரசாரமும் நடந்து வருகிறது. அவருக்கு எதிராகப் பல்வேறு போலி வழக்குகளையும் தொடுத்து குஜராத் அரசு அவருக்கு மறைமுக இக்கட்டுகளை ஏற்படுத்திவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அது மட்டுமில்லாமல் குஜராத் மதக் கலவரம் சார்ந்த பல வழக்குகளில் எஞ்சியிருக்கும் ஒற்றை சாட்சி அல்லது கடைசியாக உயிரோடு இருப்பவரை அச்சுறுத்தி, பிறழ் சாட்சியாக மாற்றும் முயற்சிகளும் தொடர்ச்சியாக நடந்திருக்கின்றன. இத்தனை நெருக்கடிகளுக்குப் பிறகும், எப்படி டீஸ்டாவால் செயல்பட முடிகிறது?

"எனது பலம் எல்லாம் உயிர் பிழைத்திருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் பலம்தான். அறம் சார்ந்த ஆழமான, திடமான நம்பிக்கைதான். மதக் கலவரக் குற்றவாளிகள், குற்றத்துக்குப் பொறுப்பாக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்ற எண்ணம்தான், எங்கள் அனைவருடைய போராட்டத்துக்கும் காரணம்" என்று மனிதம் மீதான தனது இறுக்கமான பிடிப்பை வார்த்தைகளில் வடிக்கிறார் டீஸ்டா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x