Published : 20 Dec 2014 03:31 PM
Last Updated : 20 Dec 2014 03:31 PM

மூட்டுத் தேய்மானம்: மாற்று வழி

எனக்கு வயது 55 ஆகிறது. மூட்டு தேய்மானம் இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு உங்கள் கருத்து என்ன?

குமாரசுவாமி, நான்குநேரி

மூட்டுத் தேய்மானம் இன்று அதிகமாகக் காணப்படும் ஒரு பிரச்சினை. இதை Osteoarthritis அல்லது sandhigata vatam என்று அழைப்போம். முதுமை, உராய்வு, அதிக வேலை செய்வது போன்றவற்றால் மூட்டுகளில் தேய்வு நிலை உண்டாகிறது. மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் இடையே cartilage என்று சொல்லக்கூடிய ரப்பரைப் போன்ற ஒரு பொருள் உள்ளது. ஆயுர்வேதம் இதை ஸ்லேஷ்மதர கலை என்று அழைக்கிறது. இது இருப்பதால் ஓர் எலும்பின் மேல் மற்றொரு எலும்பு நகர்ந்து போக முடியும். இந்த cartilage என்ற எலும்புச் சவ்வு தேயும்போது எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயும். இதனால் வலி, வீக்கம், தசை இறுக்கம் போன்றவை உருவாகும்.

தேய்மானம் முற்றும்போது புதிய எலும்புகள் மூட்டைச் சுற்றி முளைக்கும். தசை நார்களும், தசைகளும் பலவீனம் அடையும். 50 வயதுக்கு மேல், இது அதிகமாகக் காணப்படும். சில குடும்பங்களில் மரபு சார்ந்து வரலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படலாம், இடுப்பு மூட்டு, கணுக்கால் மூட்டு, பாத மூட்டு, குதிகால் மூட்டுகள் தேய்வடையும். எலும்பு முறிந்தாலும் தேய்வடையலாம். மண்டியிட்டு இருத்தல், சம்மணம் போட்டு உட்காருதல், அதிகமாக நடப்பது போன்றவை தேய்மானத்தைச் சற்றே கூட்டும். Hemophilia நோய் உள்ளவர்கள், மூட்டுகளுக்கு ரத்தவோட்டம் இல்லாத நிலை உள்ளவர்கள், முடக்குவாதம் உள்ளவர்கள் ஆகியோருக்குக் கூடுதலாகத் தேய்மானம் வரலாம். 70 வயது ஆகிவிட்டால் மூட்டுத் தேய்மானம் இல்லாதவர்களே இல்லை எனலாம்.

தொடரும் வலி

உடற்பயிற்சி செய்தால் வலி அதிகரிக்கும். சில நேரங்களில் சத்தம் உண்டாகும். காலை வேளையில் மூட்டு இறுக்கம் வரும், இது 30 நிமிடம்வரை காணப்படும். செயல்பாடுகள் தொடங்கத் தொடங்க இது சற்றே மாறும். வேலை செய்தால் வலி காணப்படும், ஓய்வெடுத்தால் வலி குறையும். நோய் முற்றிவிட்டால் ஓய்வெடுத்தாலும் வலி இருக்கும். X-ray மூலம் இதை நாம் தெளிவாகக் காணலாம். ஒரு சில நேரங்களில் மூட்டுகளில் நீர் காணப்படும். மூட்டை அசைக்க முடியாது, தொட்டால் வலிக்கும். X-ray-ல் மூட்டுகளின் இடைவெளி குறைந்திருப்பதைப் பார்க்கலாம், புதிய எலும்புகள் உருவாகி இருக்கும். இது முழுமையாகக் குணமாகாது, ஆனால் தடுத்து நிறுத்த முடியும். மிகவும் முற்றிய நிலையில் அறுவை சிகிச்சையே ஒரு வழி. வலியைக் குறைத்தல், மூட்டைச் சுற்றியுள்ள hamstring, quadriceps போன்ற தசைகளை வலிவூட்டுதல் போன்றவை இன்றிமையாதவை.

ஆயுர்வேதத்தில்...

ஆயுர்வேதத்தில் மூட்டு கபத்தின் ஸ்தானமாக இருக்கிறது. அங்கு வாதத்தால் தேய்வு வருகிறது. எனவே, முதலில் கொட்டம் சுக்காதி லேபம், கிரக தூமாதி லேபம் போன்றவற்றைச் செய்வார்கள். பின்பு தான்வந்தர தைலம், பிரபஞ்சனம் தைலம், மகா மாஷ தைலம் போன்றவற்றை இட்டு இலை கிழி, எலுமிச்சை கிழி, நாரத்தங்காய் கிழி போன்ற கிழிகளைக் கொடுப்பார்கள். பின்பு பேதிக்கு மருந்து கொடுப்பார்கள். பின்பு வஸ்தி சிகிச்சை செய்வார்கள். அதன் பிறகு மூட்டுக்குப் பற்று போடுவார்கள். மூட்டு வலியைக் குறைக்கும் முறிவெண்ணெயை வைத்து தாரை செய்வார்கள்.

மூட்டு வலியைக் குறைக்க சிலாஜித், குக்குலு, குறுந்தொட்டி வேர், கருங்குறிஞ்சி வேர், ஆமணக்கு வேர், சுக்கு, தேவதாரம், நொச்சி வேர், பூண்டு, வாத நாராயணன், வாத மடக்கி, முதியார் கூந்தல் போன்ற மருந்துகள் பயன்படும். அஸ்வகந்தா இதற்குச் சிறப்பாக வேலை செய்கிறது. சல்லகி என்ற மரத்தின் பிசினும் நன்றாக வேலை செய்கிறது.

அப்யங்கம் எனப்படும் மசாஜ், எண்ணெயைப் பஞ்சில் நனைத்து வைத்தல் நடப்பதற்கு உதவியாக இருக்கும். Arthroscopic surgery மூலம் cartilage சரி செய்வார்கள். மாற்று மூட்டு அறுவை சிகிச்சைகள் செய்வார்கள். எப்படியிருந்தாலும் வலி மாத்திரைகளை அதிக எண்ணிக்கையில் சாப்பிடக் கூடாது.

கைமருந்துகள்

இது அல்லாமல் கைமருந்தாகப் பல மருந்துகள் உள்ளன அவற்றைப் பார்ப்போம்:

# கருஞ்சீரகம், புளி இலை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.

# எலுமிச்சை பழச்சாறு விட்டு சுக்கை அரைத்துப் பத்துப் போடலாம்.

# குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

# வசம்பை, காசுக்கட்டி

உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

# வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

# ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.

# பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம்.

# சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம்.

# குங்கிலியத்தைப் பொடித்து அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்துப் பாலில் கலந்து பருகலாம்.

# ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

# முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.

# நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது.

மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x