Published : 07 Dec 2014 11:03 AM
Last Updated : 07 Dec 2014 11:03 AM

ஜோதிடம் தெளிவோம்: கிரகங்களின் வீடுகள்

ஜோதிடம் என்பது வானிலுள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் இவற்றின் அவ்வப்போதைய நிலையை வைத்துக் கணக்கிட்டுக் கூறப்படுகிறது.

சூரியனைக் சுற்றித்தான் கிரகங்கள் வலம் வருகின்றன. குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் சூரியனை வலப்புறமாகச் சுற்றிவருகின்றன. ஆனால் ராகு, கேதுக்கள் இடப்புறமாகச் சுற்றி வருகின்றன. சந்திரன் சூரியனைச் சுற்றுவதோடு பூமியையும் சுற்றி வருகிறது.

வான் மண்டலத்தில் முட்டை வடிவப் பாதையில் கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்றி வரும் பாதையில் தான் 27 நட்சத்திரங்களும் உள்ளன. வான் மண்டலத்தில் எண்ணற்ற கோடி நட்சத்திரங்கள் இருப்பினும் அஸ்வினி முதல் ரேவதி வரையிலும் உள்ள 27 நட்சத்திரங்கள்தான் ஜோதிட ரீதியாகக் கணக்கிடப்படுகின்றன.

இந்த 27 நட்சத்திரங்கள் உள்ள ஓட்டப் பாதையை 12 ராசிகளாகப் பிரிந்துள்ளனர். சந்திரன் இரண்டேகால் நாட்கள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். இந்தச் சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டே ஒருவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது. சூரியனை வைத்து லக்னத்தையும் சந்திரனை வைத்து ராசியும் கணிக்கப்படுகிறது.

ஜோதிட விதிப்படி நாழிகை கணக்கு முக்கியமானது. ஒரு நாள் என்பது 24 மணி நேரம். 24 மணி நேரம் என்பது 60 நாழிகை. ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகை எனக் கணக்கு கணிக்கப்படுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வரும்போது இரவு, பகல் உண்டாகிறது. பவுர்ணமி, அமாவாசையும் வருகிறது. இடைப்பட்ட சந்திரன் வளர்ந்து தேயும் நிலையில் உள்ள நாட்கள் திதிகள் என்று கணக்கிடப்படுகின்றன.

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கப்பட்டு ஏழு நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ராகு, கேதுக்களுக்கு மட்டும் எதுவும் தனியாக நாட்கள் பிரித்துக்கொடுக்கப்படவில்லை. இப்படிக் கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவுகளை ஒட்டியே கிழமைகள், திதிகள், வாரம், வருடம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

27 நட்சத்திங்கள்

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை 27 நட்சத்திரங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

ராசி மண்டலம்

ராசி மண்டலத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற வரிசைமுறையில் 12 ராசிகள் வழங்கப்படுகின்றன.

ஒருவரது ஜாதகத்தில் லக்னம் எங்கு குறிக்கப்பட்டுள்ளதோ அதனை ஒன்றாம் வீடாகக் கொண்டு எண்ணுதல் வேண்டும்.

உதாரணமாக மேஷம் 1-வது வீடு எனக் கொண்டால் மிதுனம் 3-ம் இடம். சிம்மம் 5-ம் இடம். ராசி வேறு லக்னம் வேறு என்று ஜோதிடவியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடு எதுவோ அதுவே அவரது ராசி வீடு.

சூரிய உதயாதி நாழிகை முதல் கணக்கிட்டு குழந்தை பிறந்த காலம் வரையுள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டு, அந்த நேரத்தில் என்ன லக்னம் வருகிறதோ அதுவே அந்தக் குழந்தையின் லக்கினம்.

திரிகோண ஸ்தானங்கள்

லக்னத்துக்கு 1, 5, 9-ம் வீடுகளுக்கு திரிகோண ஸ்தானங்கள் என்று பெயர்.

துல்லியமாக ஒரு ஜாதகரின் பலனை அறிந்து கொள்வதற்கு முதலில் ராசி எது லக்னம் எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஜோதிடவியல் கூறுகிறது.

சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து அப்போதைய நேரத்துக்குக் கிரகங்கள் எங்குள்ளன என்று கண்டறிந்து பலன் சொல்லும் முறைக்கு கோட்சாரப்பலன் என்று பெயர். லக்னம் எங்கிருக்கிறதோ அந்த வீட்டை ஒன்றாவது வீடாகக் கொண்டு மற்ற வீடுகளை 2,3-ம் வீடுகள் என்று கணக்கிட்டு எந்த வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார்’ எப்படிப்பட்ட பலம் கொண்டு அமைந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து பிறகு அதற்கேற்ப பலனைக் கணிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x