Last Updated : 03 Jul, 2019 11:12 AM

 

Published : 03 Jul 2019 11:12 AM
Last Updated : 03 Jul 2019 11:12 AM

இந்தப் பாடம் இனிக்கும்: பனையும் புல்லும் ஒரே வகை

பாடம் என்றால் படிக்க வேண்டும், தேர்வில் அதைக் குறித்து கேள்வி கேட்பார்கள் என்பதால் பலருக்கும் பாடங்கள் பிடிப்பதே இல்லை. ஆனால், கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுவரும் பாடநூல்கள், பழைய பாட நூல்களைப்போல் இல்லை.

பாடங்களில் நிறைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தத் தகவல்களும் வெறும் பாடமாக இல்லாமல் புதுமையாகவும் சுவாரசியமான முறையிலும் தரப்பட்டுள்ளன. பெரியவர்கள் படித்துத் தெரிந்துகொள்ளவும் நிறைய புதுத் தகவல்களுடன் அறிவை வளர்ப்பவையாகவும் உள்ளன.

இந்த வாரம் முதல் புதிய பாடத்திட்டப் புத்தகங்களிலிருந்து சுவாரசியமான ஓர் அம்சத்தைக் குறித்து கூடுதல் தகவல்களை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.

ஓர் அறிவு கொண்டது எது?

பண்டைத் தமிழர்களும் தமிழும் பதிவுசெய்துள்ள அறிவியல் குறித்து பரவலாகத் தெரியவில்லை. உலக உயிர்களை ஓர் அறிவு முதல் ஆறு அறிவுவரை கொண்டவை என்று வகைப்படுத்திச் சொல்கிறோம். இந்த உயிரினங்களுக்கான எடுத்துக்காட்டுகள் தெரியுமா? மேற்கண்ட அறிவு வகைப்பாடு பற்றியும், அவற்றுக்கான எடுத்துக்காட்டுகளையும் தொல்காப்பியரே சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.

# ஓர் அறிவு – தொடு அறிவு கொண்டவை. உடலால் உணரக்கூடியவை. எ.கா.: புல், மரம்

# இரண்டு அறிவு– தொடு அறிவுடன் சுவையையும் சேர்த்து உணரக்கூடியவை. எ.கா.: நத்தை (நந்து), சங்கு (முரள்)

# மூன்று அறிவு – தொடு அறிவு, சுவை அறிவுடன் மோப்பம் பிடித்தும் உணரக்கூடியவை. எ.கா.: சிதல் (கறையான்), எறும்பு

# நான்கு அறிவு – தொடு அறிவு, சுவை அறிவு, மோப்ப அறிவுடன்  பார்வை மூலமாகவும் உணரக்கூடியவை. எ.கா.: நண்டு, தும்பி.

# ஐந்து அறிவு – தொடு அறிவு, சுவை அறிவு, மோப்ப அறிவு, பார்வை அறிவுடன் காதால் கேட்டு உணரக்கூடியவை. எ.கா.: விலங்குகள் (மா - நான்கு கால் கொண்டவை), பறவைகள்.

# ஆறு அறிவு தொடு அறிவு, சுவை அறிவு, மோப்ப அறிவு (மூக்கு), பார்வை அறிவு, செவி அறிவுடன் பகுத்தறியும் அறிவைக் கொண்ட ஒரே உயிரினம் மனிதன்.

‘ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே…’ என்று தொடங்கும் அந்தத் தொல்காப்பியப் பாடல் ‘ஒருசார் விளங்கும் உள என மொழிப’ என்று முடிவடைகிறது.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் மரபியல் திணையில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. குறைந்தபட்சம் 1,600 ஆண்டுகளில் இருந்து 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது தொல்காப்பியம்.

புல் எது? மரம் எது?

தொல்காப்பியரின் அறிவியல் அறிவு, இயற்கை அறிவு சாதாரணமானதல்ல. அதிலிருந்து இன்னோர் எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம். இன்றைக்குத் தாவரங்களை ஒரு வித்திலைத் தாவரம், இரு வித்திலைத் தாவரம் என்று நவீனத் தாவரவியல் அறிஞர்கள் பிரிக்கிறார்கள். இதைப் பற்றியும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்:

புறக் காழனவே புல்லெனப் படுமே

அகக் காழனவே மரமெனப் படுமே

கிளைகள் இன்றி நேராக வளர்வது புல் (புறக்காழ்), ஒரு வித்திலைத் தாரவம் – இதில் கட்டை எனப்படும் பகுதி இருக்காது. கிளைகளைக்கொண்டு வளர்வது மரம் (அகக்காழ்), இருவித்திலைத் தாவரம் – இதில் கட்டை எனப்படும் பகுதி இருக்கும்.

எல்லோரும் அறிந்த ஒரு வித்திலைத் தாவரம் புல். இன்னொரு விஷயம் தெரியுமா, தென்னையும் பனையும்கூட ஒரு வித்திலைத் தாவரங்கள்தாம். தென்னை, பனை மரம் என்று அழைக்கப்பட்டாலும், அவை கட்டையைக் கொண்டிருப்பதில்லை.

இந்த வாரம்:

ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில், ‘தமிழ்த்தேன்’ என்ற இயலின்கீழ் ‘கனவு பலித்தது’ என்ற கடிதப் பகுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x