Last Updated : 02 Jul, 2019 11:09 AM

 

Published : 02 Jul 2019 11:09 AM
Last Updated : 02 Jul 2019 11:09 AM

நிதி அமைச்சர்களும் பட்ஜெட்டும்

2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 ஜூலை 5 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். ஒவ்வொரு நிதி ஆண்டுக்குமான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது நிதி அமைச்சரின் முதன்மைப் பொறுப்புகளில் ஒன்று.

பெண் நிதி அமைச்சர்கள்

விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் நிதி அமைச்சராக இருந்துள்ளனர். இவர்களில் நிர்மலா சீதாராமனுடன் சேர்ந்து இருவர் மட்டுமே பெண்கள். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1969 ஜூன் முதல் 1970 ஜூலைவரை நிதி அமைச்சகத்துக்கும் பொறுப்பு வகித்தார். எனவே, பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இந்திரா காந்திதான்.

தமிழ் நிதியமைச்சர்

நாடு விடுதலை பெற்ற பிறகு பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையில் அமைந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம். இவர் 1947 நவம்பர் 26 விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டிய கடுமையான கலவரச் சூழல் நிலவிவந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட், ஏழு மாத காலத்துக்கானதாக இருந்தது.

முன்னாள் பிரதமரின் சாதனை

மத்திய பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் இரண்டையும் சேர்த்து 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்து, மிக அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

ப.சிதம்பரம் ஒன்பது முறை; பிரணாப் முகர்ஜி எட்டு முறை; யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி.சவான், சி.டி.தேஷ்முக் ஆகியோர் தலா ஏழு முறை; மன்மோகன் சிங், டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் ஆறு முறை; அருண் ஜேட்லி ஐந்து முறை, ஆர்.வெங்கட்ராமன், ஹெச்.படேல் ஆகியோர் மூன்று முறை; ஜஸ்வந்த் சிங், வி.பி.சிங், சி.சுப்ரமணியம், ஆர்.கே.சண்முகம் ஆகியோர் இரண்டு முறை; ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சரண் சிங், என்.டி.திவாரி, மது தந்தவடே, எஸ்.பி.சவான், சச்சிந்திர சவுத்ரி ஆகியோர் ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர்.

உடல்நலைக் குறைவு காரணமாக அருண் ஜேட்லி பதவி விலகிவிட்டபின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற பியூஷ் கோயல், 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை 2019 பிப்ரவரியில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யாத நிதி அமைச்சர்கள்

இதுவரை நிதி அமைச்சர்களாக இருந்தவர்களில் கே.சி.நியோகி, எச்.என்.பகுகுணா (1979-80) ஆகியோர் ஒரு பட்ஜெட்டைக்கூட தாக்கல் செய்ததில்லை. இவர்களில் கே.சி.நியோகி 35 நாட்கள் மட்டுமே நிதி அமைச்சராக இருந்தவர். விடுதலை பெற்ற இந்தியாவின் இரண்டாவது நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற நியோகி, தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இந்திய நிதிக் குழுவின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார்.

உயர்வுபெற்ற நிதி அமைச்சர்கள்

ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்தபோதே நிதி அமைச்சராகவும் இருந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், மன்மோகன் சிங் ஆகியோர் நிதி அமைச்சராக இருந்து பின்னர் பிரதமரானவர்கள். ஆர்.வெங்கட்ராமன், பிரணாப் முகர்ஜி இருவரும் நிதி அமைச்சர்களாக இருந்து, பின்னர் குடியரசுத் தலைவர் ஆனவர்கள்.

மாறிய நேரமும் தேதியும்

பட்ஜெட்டை மாலை 5 மணிக்குத் தாக்கல் செய்யும் வழக்கம் முன்பு நிலவி வந்தது. 1999-ம் ஆண்டில் முதல்முறையாகக் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா. அப்போதிலிருந்து அதே நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது.

காலனி ஆட்சிக் காலத்தில் மதியம் 12 மணிக்கு பிரிட்டனில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், அதற்குப் பிறகு மாலையில் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்வது தொடங்கும் (இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே இருந்த நேர மாற்றமே, இந்த நேர இடைவெளிக்குக் காரணம்).

2017ஆம் ஆண்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி இரண்டு மாற்றங்களைச் செய்தார். பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

அதற்குமுன் பிப்ரவரி கடைசி தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்துவந்தது. நெடுங்காலமாகத் தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு, பொது பட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x