Last Updated : 13 Jul, 2019 10:46 AM

 

Published : 13 Jul 2019 10:46 AM
Last Updated : 13 Jul 2019 10:46 AM

பட்ஜெட் 2019: வீடு வாங்கப் புதிய சலுகை

அண்மையில் தாக்கல்செய்யப்பட்ட மத்திய அரசின் 2019-2020 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஓர் இனிய செய்தியைச் சொல்லியிருந்தார்கள். சொந்த வீடு வாங்குபவர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும் என்பதுதான் அந்தச் செய்தி.

ரூ.45 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்குவதற்கு, இதற்கு முன்பு ரூ.1.5 லட்சம் மட்டுமே வட்டிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதை 2 லட்சம் அதிகமாக்கி ரூ.3.5 லட்சமாக அதிகரித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த அறிவிப்பின்படி வரும் மார்ச் 31, 2020 வரை, அதாவது இந்த நிதியாண்டு இறுதிவரை வீடு வாங்குவோருக்கு இந்தச் சலுகை கிடைக்கும். முதன் முறையாக வீடு வாங்கும் நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் இத்திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

ரூ. 45 லட்சம் மதிப்புள்ள வீடு என்றால், அந்த மதிப்பு வீட்டுக்கு மட்டுமே வட்டிச் சலுகை கிடைக்குமா, வீட்டை எப்படி மதிப்பிடுவார்கள் என நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் எழலாம்.

இது குறித்து பாங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற உதவிப் பொதுமேலாளரும், நிதி ஆலோசகருமான எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம். “இந்த பட்ஜெட்டிலேயே மிகவும் நல்ல அம்சம் கொண்டது இந்த வட்டிச் சலுகைதான்.

இது புதுமையாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் அல்ல. ஏற்கனவே இருந்த திட்டம்தான். ‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழங்கிக்கொண்டிருந்த சலுகைதான். அந்தத் திட்டத்தை மேம்படுத்தி வழங்கிய சலுகையை இன்னும் அதிகரித்திருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

ரூ. 45 லட்சத்துக்கு 3.5 லட்சம் ரூபாய் வட்டி மானியம் என்றால், அது வீட்டு நிலத்தின் மதிப்பா, வீடு கட்டச் செலவு செய்யப்படும் தொகையின் மதிப்பா என்ற சந்தேகம் எழலாம். அதை எப்படி மதிப்பிடுவார்கள்?

“ஒரே தெருவில் உள்ள வீடுகளின் மதிப்பைக் கேட்டாலே, ஒருவர் ரூ. 50 லட்சம் மதிப்பு என்று சொல்வார். இன்னொருவர் ரூ. 60 லட்சம் என்று சொல்வார். மற்றொருவர் ரூ. 35 லட்சம் மதிப்பு என்றுகூடச் சொல்வார். ஆனால், அரசு இத்திட்டத்தில் இதுபோன்ற மதிப்பீடுகளை எடுத்துக்கொள்ளாது.

வீடு கட்டவோ வாங்கவோ வங்கிகள் அளிக்க முன்வரும் தொகையைத்தான் மதிப்பாக எடுத்துக்கொள்ளும். அதற்கு உச்சவரம்புதான் ரூ. 45 லட்சம். வீட்டின் மதிப்பை நிரூபிக்க வேண்டுமென்றால், வங்கிக் கடன் கொடுத்ததைத்தானே எடுத்துக் கொள்ள முடியும். வங்கியானது வீட்டை மதிப்பிட்டுத்தானே வீட்டுக் கடனை வழங்குகின்றன” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

அதேபோல ரூ. 45 லட்சம் மதிப்புள்ள வீட்டுக்கு மட்டுமே வட்டிச் சலுகை என்று நினைக்கத் தேவையில்லை. 25 லட்சமோ, 30 லட்சமோ எதுவாக இருந்தாலும் வட்டிச் சலுகை கிடைக்கும். இந்தச் சலுகையைப் பெற உச்ச வரம்பாக மட்டுமே ரூ. 45 லட்சத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது.

“இந்தச் சலுகை 2020 மார்ச் 31 வரை வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்திக்கிறது. ஒரு பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு என்பது அந்த நிதியாண்டு பட்ஜெட்டுக்கானது மட்டுமே. எதையும் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் மாறுதலுக்கு உட்பட்டதுதான். அடுத்த ஆண்டு பட்ஜெட்டில்  இது மாறலாம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

மத்திய அரசின் இந்தச் சலுகையால் வீடு அதிகமாகக் கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்தத் திட்டத்தால் பெரு நகரகங்களில் உள்ள நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் கட்ட நகரங்கள், பேரூர்களில் உள்ள நடுத்தர மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்கிறார் கோபாலகிருஷ்ணன். இந்தச் சலுகைகளால் வீட்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x