Last Updated : 15 Jul, 2017 12:25 PM

 

Published : 15 Jul 2017 12:25 PM
Last Updated : 15 Jul 2017 12:25 PM

புதிய வட்டிக்கு மாறுவது எப்படி?

சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் இப்போது புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும் வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்காது. புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை பழைய கடன்தாரர்களும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், புதிய வட்டி விகிதத்துக்கு மாற ‘கன்வர்ஷன்’ செய்துகொள்ளுங்கள் என்று வங்கிகள் தரப்பில் சொல்லப்படும்.

அப்படி ‘கன்வர்ஷன்’ செய்துகொள்ள நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு ஏற்ப கன்வர்ஷன் கட்டணம் வசூலிக்கப்படும். இப்படி கன்வர்ஷன் செய்து வட்டி விகிதத்தைக் குறைத்தாலும், சில ஆண்டுகளில் புதிய வாடிக்கையாளர்களுக்கும் பழைய வாடிக்கையாளர்களுக்குமான வட்டி விகித வித்தியாசத்தைக் காண முடியும். ‘கன்வர்ஷன்’ செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தீர்வு என்ன? வங்கிகளின் நடைமுறை என்ன?

புதியவர்களுக்கு சலுகையா?

எத்தனை முறை ‘கன்வர்ஷன்’ கட்டணம் செலுத்தி வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டாலும், புதிதாகக் கடன் வாங்குவர்களுக்கு வட்டி விகிதம் குறைவாக இருப்பதாகப் பழைய கடன்தாரர்கள் அலுத்துக்கொள்வார்கள். உதாரணத்துக்கு பழைய கடன்தாரர் தற்போது உள்ள 9.95 சதவீத வட்டி விகிதத்தை ‘கன்வர்ஷன்’ மூலம் 8.95 சதவீதமாகக் குறைத்தாலும், புதிய கடன்தாரருக்கு வட்டிவிகிதம் 8.85 சதவீத வட்டியை வங்கிகள் வழங்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லி வங்கிகளை அணுகி பேச வேண்டும் என்று சொல்கிறார்கள் வங்கியாளர்கள்.

‘கன்வர்ஷன்’ தள்ளுபடி இல்லை

வாங்கிய வீட்டுக் கடனை மாதாமாதம் எந்த நிலுவையும் இல்லாமல் செலுத்தினால் வங்கிகள் சில சலுகைகளை வழங்கும் என்று வாடிக்கையாளர்கள் நினைப்பதுண்டு. உதாரணமாக ‘கன்வர்ஷன்’ கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம். ஆனால், அது உண்மை இல்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் வங்கிக்கு சென்று, “உங்கள் வங்கியில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது. வேறு வங்கிக்கு நிலுவைத் தொகையை மாற்றிக்கொள்கிறேன்” என்று சொல்லி பாருங்கள். ஒரு வேளை ‘கன்வர்ஷன்’ கட்டணத்தை தள்ளுபடி செய்து வட்டி விகிதத்தை சில வங்கிகள் குறைக்கலாம். ஆனால், இது உறுதியாக நடக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு முயன்று பார்க்கலாம்.

வட்டி குறைக்க மறுப்பா?

வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைப்பு என்ற செய்தியை நீங்கள் பார்ப்பீர்கள். வட்டி விகிதம் குறைந்தால் தவணைக் காலம் குறையும் அல்லது செலுத்தப்படும் தவணைத் தொகை குறையும் என்று நீங்கள் கணக்குப் போடுவீர்கள். சரி, ‘கன்வர்ஷன்’ மூலம் இதை செய்து முடிக்கலாம் என்று வங்கிக்கு செல்வீர்கள். ‘கன்வர்ஷன்’ கட்டணம் செலுத்தத் தயாரக இருந்தும் பழைய கடன்தாரரான உங்களுக்கு வங்கிகள் வட்டியைக் குறைக்க மறுத்தால் என்ன செய்வது? இப்படி பல வாடிக்கையாளர்களுக்கு நிகழ்ந்தது உண்டு. உண்மையில் அப்படி மறுக்க எந்த வங்கிக்கும் தார்மீக உரிமை கிடையாது. ஒரு வேளை அப்படிச் சொன்னால், இதற்கு ஒரே தீர்வு எஞ்சிய நிலுவைத் தொகையை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்வதாகச் சொல்லி பாருங்கள்.

வட்டி நிர்ணயத்தை அறியுங்கள்

பல வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களும் நினைக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? வட்டியைக் குறைப்பதற்காக ஒருமுறை ‘கன்வர்ஷன் கட்டணம்’ செலுத்தினால் புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் பழைய கடன்தாரர்களுக்கு எப்போதும் வட்டி விகிதம் மாற்றப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. ஒவ்வொரு முறையும் நீங்கள் ‘கன்வர்ஷன்’ செய்தால்தான் வட்டிக் குறைப்பு நடக்கும். வட்டி விகிதம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டால் உங்களுக்கு எல்லாம் புரியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொருளைக் கூடுதல் விலைக்கு வாங்கியிருப்போம். அதே பொருள் இப்போது விலை குறைவாகக் கிடைக்கும். அதுபோலத்தான் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு குறைவாகக் கிடைக்கும் வட்டி விகிதமும் என்று சொல்கிறார்கள் வங்கியாளர்கள்.

பொருளுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம்; வட்டி விகிதத்தில் இது எப்படிச் சாத்தியமாகும் என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு ‘மார்ஜினல் காஸ்ட் லெண்டிங் ரேட்’தான் (மார்ஜினல் செலவினக் கடன்களுக்கான வட்டி விகிதம்)’ காரணம். அப்படியென்றால் என்ன?

ஒரு காலத்தில் பிரைம் லெண்டிங் ரேட் (அதாவது, பிரமாணக் கடன்களுக்கான வட்டி விகிதம்) மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு ‘பேஸ் ரேட்’ (அடிப்படைக் கடன் வட்டி விகிதம்) அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது மார்ஜினல் காஸ்ட் (செலவு) லெண்டிங் ரேட் என்கிற கடன் வட்டி விகிதத்தை (எம்.சி.எல்.ஆர்.) அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வங்கிகளுக்கு டெபாசிட் முதலிய நிதி திரட்டுவதற்கு ஆகும் செலவினங்களைக் கணக்கிடும்போது சி.ஆர்.ஆர். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது.

இந்தப் புதிய நடைமுறையின் காரணமாகவே புதிதாக வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் சிறிதளவு குறைகிறது. பழைய கடன்தாரர்களுக்குக் குறையாமல் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x