Last Updated : 07 Jul, 2017 10:33 AM

 

Published : 07 Jul 2017 10:33 AM
Last Updated : 07 Jul 2017 10:33 AM

சினிமாலஜி 11 - தல, தளபதிகள் தேவை... ஏன்?

"உங்களில் யாரெல்லாம் அஜித், விஜய் ரசிகர்கள்?"

சலீம் சாரின் விவேகமான கேள்வியில் வகுப்பறையே மெர்சல் ஆனது. ரெண்டு பேரைத் தவிர எல்லாருமே கை தூக்க, "ஓ மை காட்... நீங்களும் இவங்களோட ரசிகர்களா?" என்று அப்பாவியாகக் கேட்டார்.

"அது வேற டிபாட்மென்ட்; இது வேற டிபாட்மென்ட் சார். தல, தளபதியில யாரோ ஒருத்தருக்கு ஃபேனா இல்லாம சர்வைவ் பண்றதே கஷ்டம் சார்" என்றான் பார்த்தா.

"கரெக்ட்தான். எங்க அப்பா காலத்துல எம்.ஜி.ஆர். - சிவாஜி, என் ஜெனரேஷன்ல ரஜினி - கமல், இப்ப அஜித் - விஜய்" என்று லாஜிக்கலாக சமாளிக்க முயன்றவரை மடக்கினாள் ப்ரியா.

"எம்.ஜி.ஆர். மாஸ், சிவாஜி க்ளாஸ், ரஜினி சூப்பர் ஸ்டார், கமல் சூப்பர் ஆக்டர்... ஆனா தல, தளபதி ரெண்டு பேருமே பக்கா மாஸ்தானே சார்!!!"

"ஒரு மேட்டர் சொன்னா அனுபவிக்கணும்; ஆராயக் கூடாது" என்று ப்ரியாவை அடக்க முயன்றான் பார்த்தா.

அடக்கினாள் அடங்கும் ஆளில்லையே அவள். "சொல்லுங்க, எங்க தல பத்தி நாங்க என்ன பேசணும்?"

அப்போது குறுக்கிட்ட கீர்த்தி, "இளைய தளபதி முதல் தளபதிவரை மெர்சலான வாழ்க்கை வரலாறு வேணுமா சார்?" என்று குரல் எழுப்பினாள்.

கொந்தளிக்கத் தொடங்கிய கவிதா, "தமிழ் சினிமா உருப்புடாம போறதுக்கே இந்த ஹீரோ ஒர்ஷிப்தான் காரணம். அது இருக்குற வரைக்கும் நம்ம சினிமாவை அந்த ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது. எத்தனையோ நல்ல படங்கள் இருட்டடிக்கப்பட்டு இதுபோன்ற மாஸ் ஹீரோக்களால விழுங்கப்பட்டிருக்கு. சரி, வேற வழியில்லாம இந்தப் படங்களுக்குப் போனாலும் ஒரே குப்பை" என்றாள் கவிதா.

ஆட்டத்துக்குள் நுழைந்த ப்ரேம், "சினிமான்றதே நமக்கு ஒரு திருவிழா. கொண்டாட்டங்கள் இருக்கத்தான் செய்யும். இருக்கணும். தல படத்தை முதல் நாள் வைகறைப் பொழுதில் ‘காசி’யில் தரிசித்த அனுபவம் இருக்கா உனக்கு?" என்றான்.

"ஏதாவது புரியிற மாதிரி பேசுறியா?!"

"தல படம் ரீலீஸ் ஆன முதல் நாள் முதல் காட்சிக்கு முந்தைய ஸ்பெஷல் ஷோ பத்தி பேசுறேன். சென்னை - காசி தியேட்டர்ல அதிகாலை சிறப்புக் காட்சி பார்த்து அனுபவிச்சாதான் தெரியும். அதெல்லாம் விவரிக்க முடியாத பேரனுபவம்" என்று சிலிர்த்தான் ப்ரேம்.

"ஆமாமா... முதல் ஷோவுக்கு முன்னாடியே உங்கத் தல படத்தைப் பார்த்திடணும். அதுவும் அரைத் தூக்கத்துல பார்த்து கொண்டாடிடணும். தெளிவான மனநிலையில பார்த்தோம்னா உங்களுக்கே தலைவலி கியாரன்டினா, எங்க நிலைமையை யோசிச்சுப் பாரு" என்று இழுத்த மேனகா நிச்சயம் விஜய் ரசிகர்தான் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

"வாம்மா, செம்ம மெர்சல் ஆக்குறியே. ஒத்துக்குறேன்... உங்க தளபதி படத்துக்கு டஃப் கொடுக்க உங்க தளபதியாலதான் முடியும். இன்னமும் சுறாவுக்கு டஃப் கொடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரே, அதையும் ஹண்ட்ரட் க்ரோர் கிளப்புக்கு முட்டுக் கொடுக்கத் துடிக்கிறீங்களே, நீங்கள்லாம் தெய்வ லெவல்!" என்று சிரித்தான் ப்ரேம்.

"நிறுத்துங்க!!!"

சலீம் சார் ஆவேசமானதும் அடங்கியது வகுப்பறை.

"இதென்னா சோஷியல் மீடியாவா? இல்லை, கேன்டீனா? எவ்ளோ சீரியஸான விஷயம் பத்தி பேசிட்டிருக்கோம், மாத்தி மாத்தி திட்டிக்கிறீங்க. ப்ரேம் முதல்ல சொன்னது உண்மைதான். சினிமா இங்கே ஒருபக்கம் திருவிழா கொண்டாட்டமாதான் இருக்கு. ஸ்பான்ஸர்ன்ற பேர்ல பிச்சை எடுத்து ஃப்ளைட்ல போய் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பார்த்த காலக்கட்டத்துல, சென்னை - ஆல்பர்ட் தியேட்டர்ல முதல் நாள் முதல் ஷோவில் ‘பாட்ஷா' பார்த்து பரவசமடைஞ்சவன்ல நானும் ஒருத்தன். இந்த மாதிரியான கொண்டாட்டங்களும் தேவைதான்னு தோணுது. மக்களை மகிழ்விப்பதுதான் கலையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதில் இதுவும் அடங்கும்னு நம்புறேன்."

"சார், நீங்க சொல்றது ஓகேதான். தலயும் தளபதியும் ஒரு காரணம் மட்டும்தான். கொண்டாட்டம்தான் இங்கே முக்கியம்னு சொல்ல வர்றீங்க. ஏன் அவங்கப் பின்னாடி இப்படி அலையணும். அரசியல், கலை, இலக்கியத்தோட வறட்சிதான் வேற வழியில்லாம மசாலா சினிமாக்காரங்க பக்கம் மக்களை ஒதுங்க வைக்குதா? கேரளத்தை எடுத்துக்கோங்க. இவ்ளோ மோசமா இல்லை. அங்கே உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம்கூட அரசியல் ஈடுபாடு இருக்கு. கல்லூரி மாணவர்கள் பலரிடமும் இலக்கிய ஆர்வம் இருக்கு. சமூக அக்கறை மிகுந்த அமைப்புகளில் அங்கமா இருந்து செயல்படுறாங்க. இங்க இளம் சமுதாயத்துக்கு ஆதாருக்கு எங்க அப்ளை பண்ணனும்னு கூடத் தெரியாது" என்று சம்பந்தத்துக்கும் சம்பந்தத்துக்குமே சம்பந்தம் உண்டு என்கிற ரீதியில் பேசினான் ரகு.

அதை ஆமோதித்து தோள் கொடுத்த ஜிப்ஸி, "கேரளால மம்முக்காவும் லாலேட்டணும் மாஸ் படங்களும் பண்றாங்க. அதைவிட அதிகமா க்ளாஸ் படங்கள் நடிக்கிறாங்க. உங்க உச்ச நாயகர்களை முதல்ல நடிக்கச் சொல்லுங்கப்பா. ஒரு தல - ஒரு தளபதியோட நின்னுட்டா பிரச்சினை இல்லை. மாஸ் காட்றதா நினைச்சிகிட்டு பச்சை மண்ணுங்க எல்லாம் படம் முழுக்க பஞ்ச் பேசுறதை எங்கப் போய் சொல்றது?" என்று நொந்துகொண்டான்.

"போக்கிரி, மங்காத்தா மாதிரி அப்பப்ப கொஞ்சம் நீட்டான பொழுதுபோக்கு படங்கள் பண்ணிகிட்டு, இடையிடையில் ஓரளவு நேர்த்தியான படங்கள்ல நடிச்சா நாங்க ஏன் பொங்க வைக்கிறோம்?" என்றாள் கவிதா.

"ஏன் ‘கத்தி' மாதிரி சமூக அக்கறையுள்ள படங்களில் தளபதி தனித்துவத்தோட நடிச்சது உங்கக் கண்ணுக்குத் தெரியலயா? 'என்னை அறிந்தால்' முதலான படங்களில் தல தன்னிகரில்லாம நடித்தது எல்லாம் நடந்த விஷயங்கள்தானே?!"

"நீ நடிச்சதைச் சொல்றியா? நடந்ததை சொல்றியான்னு தெரியல மூர்த்தி. ஆனா, என்ன நடந்தா நம்ம சினிமாவுக்கு நல்லாருக்கும்ன்றதுதான் என் கவலை" என்றாள் கவிதா.

"ஏம்மா, நாங்க என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றோம்? எங்களுக்கும் ஷாரூக், ஆமிர், மம்முட்டி, மோகன்லால் மாதிரி நிஜ சினிமாவுல நடிக்கத்தான் விருப்பம். அதான் வரலையே. விட்ருங்கப்பா!" - ஆம், இது பார்த்தாவேதான்.

"அதுக்காக அபத்தங்களை ஆராதிக்கணுமா?"

கவிதாவின் இந்தக் கேள்விக்கு சற்றே நிதானமாக பார்த்தா சொன்ன பதில்:

"தல படத்தை அவரோட ரசிகர்கள் பார்க்குறதைவிட தளபதி ரசிகர்கள் பார்க்குறதுதான் அதிகம். அதே மாதிரிதான் தளபதிக்கும்ன்னு ஆய்வு சொல்லுது. ஒவ்வொருத்தரும் எதிர்தரப்பு படங்களை சீன் பை சீன், டயலாக் பை டயலாக் அப்படியே உள்வாங்கி மாத்தி மாத்தி கலாய்ச்சிக்கவும், மீம்ஸ் கிரியேட் பண்ணி ட்ரால் பண்ணவும் மேற்கொள்ளப்படும் பெருமுயற்சி இது. இன்னிக்கு ஜிஎஸ்டியால பிறந்துகொண்டிருக்கும் புதிய இந்தியாவில் செத்துக்கொண்டிருப்பவர்களையும், அப்ரைசலில் ஆப்பு செருகப்பட்டவர்களும் தன் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அதிகமா போற இடமே தல, தளபதிகள் கிட்டதான். அவங்களை கலாய்ச்சி உற்பத்தி செய்யப்படும் மீம்களைக் கண்டுதான் உளவியல் ரீதியில் தங்கள் இயல்பு மனநிலையை மீட்டு எடுக்குறாங்க. இதுக்காகவாவது தல, தளபதிகள் நமக்குத் தேவை. இது நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?" என்ற பார்த்தாவின் அறச்சீற்றப் பேச்சுக்கு எதிர்ப்புக் குரல் ஏதுமில்லை.

தொடர்புக்கு: siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x