Last Updated : 02 Jul, 2017 12:25 PM

 

Published : 02 Jul 2017 12:25 PM
Last Updated : 02 Jul 2017 12:25 PM

ஒரு பிரபலம் ஒரு பார்வை: இவர்களுக்கு எப்போது விடியும்?

எங்கள் தெரு ஒரு முட்டுச் சந்து. தெருவின் முடிவில் சினிமாக் கொட்டகையின் பெரிய மதில் அடைத்திருக்கும். வர்ணாசிரமத்தின் விளிம்புநிலை மனிதர்களான மீனவர்கள், சலவையாளர்கள், நாவிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட தெரு அது. கருவாட்டுக்குக் காயும் மீன்கள், வலைகள், சோடாக் காரத்துடன் உலரும் அழுக்குத்துணிகள், வெள்ளாவி அடுப்பு, கழுதைகள், வாத்திமாரின் சாதியப் பிரம்புக்குப் பயந்து பள்ளிக்கு முழுக்குப் போட்ட சிறுவர்கள், வீட்டு வேலையையும் தம்பி தங்கச்சியையும் கவனிக்கவும் கல்வி மறுக்கப்பட்ட சிறுமிகள், தியேட்டர்காரன் கொட்டிய குப்பை மலை, அதில் மேயும் பன்றிகள் என வித்தியாசமான, கலகலப்பான தெரு. ஊர்க்காரர்கள் தேவைகளையொட்டித் தெருவுக்குள் நுழைவார்கள். அப்படி நுழையும்போது ‘நாறுது நாறுது’ என சாதிக் கவுரவத்துக்கு ஆயிரம் முறை செண்டு அடித்துக்கொள்வார்கள்.

விடுதலை இல்லாத வேலை

எழுபதுகளில் எங்கள் பகுதியில் நவீனக் கழிப்பறைகள் கிடையாது. கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் தோட்டத்தின் கடைசி மூலையில் பெரிய பள்ளம் தோண்டி, குறுக்கே பனையைப் பிளந்து போட்டுக் கீற்றால் கழிப்பறையாகத் தடுத்திருப்பார்கள். ஆற்றங்கரை சவுக்குத் தோப்பு, வயல்வெளிகள்தான் சகலருக்கும் பீக்காடு. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சினிமாக் கொட்டகை ஆகிய இடங்களில் மட்டும் நவீனக் கழிப்பறைகள் இருந்தன.

கக்கூஸைச் சுத்தப்படுத்த ஒரு சமூகம் வாழ்வதே ருக்மணி ஆயாவால்தான் தெரியவந்தது. ஒருவாய் வெற்றிலை கேட்டோ, குழம்புக்குக் கருவாடு வாங்கவோ அடிக்கடி சினிமாக் கொட்டகை மதில் கேட்டைத் திறந்துகொண்டு என் ஆயாவிடம் வருவார் ருக்மணி ஆயா. இரண்டாவது மணி அடித்து டிக்கெட் கிழிப்பவர் போன பிறகு, அந்த கேட்டைத் திறந்து இரவில் திருட்டுப் படம் பார்க்க எங்கள் தெரு சிறுவர்களை அவர் அனுமதிப்பதும் உண்டு.

ஊரின் தீண்டத்தகாத காலனியிலிருந்து வரும் ருக்மணி ஆயா இந்த இழிதொழிலைக் காலை பத்து மணிக்கு ஆரம்பிப்பார். அரங்கைக் கூட்டிப் பெருக்கி, பெண்கள், ஆண்கள் கக்கூஸில் நிரம்பி வழியும் மலத்தையெல்லாம் வாரியெடுத்துக் கழுவி, பிளீச்சிங் பவுடர் தெளித்து, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி அன்றைய காட்சிக்குத் தயார்படுத்துவார்.

சனங்கள், குழந்தைகளை வழியெல்லாம் மலமிருக்கவைத்து நாறடித்துவிடுவார்கள். இருட்டில் கக்கூஸ் அறைக்குள் போகப் பயந்த பெண்கள் பெரும்பாலும் சிறுநீர் கழிக்கும் படியிலேயே மலம் கழித்திருப்பார்கள். “பேளறத்துக்குன்னே சினிமாவுக்கு வராளுங்க” என்றும், இன்னும் அசிங்கமாகவும் திட்டிக்கொண்டே ருக்மணி ஆயா கழுவி எடுப்பார். நல்ல நாள், கெட்ட நாள் விடுமுறை இல்லாமல் வருடத்துக்கு 365 நாட்களும் மலத்தை வாரிக்கொட்டுவதுதான் பாரதமாதா தன்னுடைய இந்த மகளுக்கு இட்ட பணி. முக்கியத் தலைவர் இறப்போ பந்தோ நடந்தால், அன்றைய இழிவிலிருந்து ஒருநாள் விடுதலை கிடைக்கும்.

இவரும் இவருடைய பிள்ளைகள், உறவினர், அவர்களின் பிள்ளைகள் யாரும் பள்ளிக்குச் சென்றதில்லை. மீனவக் குழந்தைகளையே கவிச்சயடிக்கிறது என வகுப்புகளிலிருந்து விரட்டியடித்த சாதிய வாத்தியார்கள், மலம் அள்ளும் தோட்டியின் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தின் வாசலைக்கூட, அப்போது மிதிக்கவிட்டதில்லை. அந்தக் கிராமத்தில் சலவையாளர், மீனவர், நாவிதர் அப்போது ஒரு 50 குடும்பங்கள் இருந்தோம். குடும்பத்துக்குத் தலா ஐந்தாறு பிள்ளைகள். எண்பதுகளில் தட்டுத் தடுமாறி பள்ளி இறுதிவரை முடித்தவர்கள் இரண்டு ஆண்கள், ஐந்து பெண்கள். அதில் ஒருத்தி நான்.

மாற்றம் காணாத வாழ்க்கை


இருபது வருடம் கழித்து மீண்டும் சொந்தத் தெருவுக்குத் திரும்பி, வீடு கட்டி வசிக்கத் தொடங்கினேன். 90 சதவீதக் குடும்பத்தினர் குலத்தொழிலிலிருந்து வெளியேறியிருந்தனர். ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தவர்களைத் துரத்திவிட்டுப் பாதி வீதியை ஆக்கிரமித்திருந்தார்கள். குடிசைகள் ஒழிந்து, தெருவின் அடையாளம் மாறியிருந்தது. இடம்பெயர்ந்து போனவர்கள் வறுமையிலிருந்தாலும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்.

இந்த முட்டுச் சந்தில் பிறந்த ஒருவன் அமெரிக்காவில் பொறியாளராக வேலை செய்கிறான். ஒருத்தி பாரீஸில் படிக்கிறாள், ஐந்தாறு பேர் அரசு வேலையில் இருக்கிறார்கள். இது அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின் உருவான மாற்றம். தலித் மக்களிடம் பற்றிக்கொண்ட சமூக அரசியல் எழுச்சி, பின்தங்கிய விளிம்பு நிலைச் சமூகத்திடமும் சமூகநீதி நெருப்பைத் தூவிச் சென்றதன் விளைவு இது.

எதிர் வீட்டில் செப்டிக் டாங்க் அடைத்துக்கொண்டது. சின்டெக்ஸ் டாங்க் பொருத்திய மீன்பாடி வண்டியில் மூவர் வந்தனர். அதில் ஒருவர் இளைஞர். செப்டிக் டேங்கைத் திறந்து விசை பைப்பைச் சொருகி மலக் கழிவுகளை உறிஞ்சி சின்டெக்ஸ் தொட்டிக்குள் நிரப்பினார்கள். வாசலிலிருந்த குழாயில் கை கால் கழுவும்போது, “ஏன் தம்பி நீங்களும் இந்த வேலைக்கு வந்தீங்க? கொஞ்சமாவது படிச்சிருந்தா, வேற வேலைக்குப் போயிருக்கலாமில்ல” என்று கேட்டேன்.

“பி.ஏ. வரலாறு முடிச்சிருக்கேன்கா. கவர்மென்ட்ல எங்க வேலை கொடுக்குறான்? தந்தாலும் இதே வேலைதான். அதுவும் நிரந்தரமில்லை, கான்ட்ராக்ட்தான். தள்ளுவண்டி சோத்துக் கடையிலகூட வேலை கொடுக்க மாட்டறாங்க. தெரிஞ்ச தொழிலுதான் சோறுபோடுதுக்கா”

“பேர் என்னப்பா? யார் வீடு தம்பி?”

“இந்த தியேட்டர்ல வேலை செஞ்சாங்களே ருக்மணி அவுங்க பேரன், பேரு ராமன்கா”

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பவர்களைச் சமூகநீதியும் சமத்துவமும் பேண மலம் அள்ள அழைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக ஒரு நூற்றாண்டுக்கு அரசுப் பணி அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டும். ஒரு சமூகத்தையே தலைமுறை தலைமுறையாகத் தீண்டத்தகாதவர்களாக்கி, மலக்குழிக்குள் தள்ளி, கொன்றுவிட்டு மற்றவர்கள் அனுபவித்தது போதும். சுதந்திர இந்தியாவின் அரசு கணக்கின்படி 2011-ல் 7,94,000, சமூக ஆய்வாளர்கள் கணக்குப்படி 10,50,000 குழந்தைகள் மலம் அள்ளும் இழிதொழிலுக்குள் இருக்கிறார்கள். அரசு கொடுக்கும் பணத்தில் ஆண்ட சாதிகள் உடல் வளர்ப்பது, அவரவர் குல கவுரவத்துக்கு இழுக்கல்லவா?

கட்டுரையாளர், கவிஞர்
தொடர்புக்கு: m.maithri2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x