Published : 31 Jul 2017 12:06 PM
Last Updated : 31 Jul 2017 12:06 PM

அலசல்: ஏன் இந்த தாமதம்!

நா

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் சுபிட்சமாக இல்லை என்பது நிதர்சனம். விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்திய போராட்டம் இதனை வெளிச்சம்போட்டு காட்டியது. ஆனாலும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழான நிவாரணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

2016-17-ம் நிதி ஆண்டில் 55 சதவீத விவசாயிகளுக்கு இன்னமும் பயிர் காப்பீடு நிவாரண உதவி கிடைக்கவேயில்லை. பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பிஎம்எப்பிஒய்) எனும் திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இந்தத் தகவலை மத்திய வேளாண் அமைச்சகமே வெளியிட்டுள்ளது.

இத்தனைக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரீமியம் தொகையாக கிடைத்த தொகை ரூ. 22,338 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 2016-17-ல் வசூலான பிரீமியத் தொகை 4 மடங்கு அதிகமாகும். அதேசமயம் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க வேண்டிய தொகை ரூ. 12,490 கோடி மட்டுமே. இத்தொகையானது குறுவை மற்றும் ராபி பருவத்துக்கானதாகும். இதுவரையில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய தொகை ரூ. 5,875 கோடி மட்டுமே. அதாவது மொத்தத் தொகையில் 45 சதவீதமாகும்.

குறுவை சாகுபடிக்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 10,257 கோடியாகும். இதில் கடந்த ஆண்டு நவம்பர் வரையான காலத்தில்விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட தொகை ரூ. 4,649 கோடி. அதாவது மொத்தத் தொகையில் 45 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி முடிந்து 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் காப்பீடு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதற்கு மாநில அரசுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. பயிர் இழப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் அளிப்பதில்லை.

பயிர் இழப்பு குறித்த விவரத்தை அளிக்க பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் செயற்கைக்கோள் மற்றும் ஆளில்லா விமான வசதி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வாய்ப்பு, வசதிகள் உள்ளன. மாவட்ட அளவில் அதிகாரிகள் பயிர் இழப்பீட்டை மதிப்பீடு செய்ய அந்தந்த பகுதிகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் புகைப்பட உதவியோடு இதை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க முடியும். இதற்கு வசதியாக டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் சேத விவரத்தை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில்கூட மதிப்பீடு செய்ய முடியும்.

கடும் வறட்சிக்குள்ளான கர்நாடக மாநிலத்தில் வழங்க வேண்டிய தொகை ரூ. 1,020 கோடி. ஆனால் இதுவரை ரூ. 617 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ. 2,142 கோடி வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் வழங்கப்பட்டதோ ரூ. 1,213 கோடி மட்டுமே.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்ட்ட மத்திய கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ. 32,606 கோடியை செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் உரிய விவசாயிகளுக்கு சென்றடைந்ததா என்பதில் கவனம் செலுத்தப்படவில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தது. உழவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பாடு அடைய வேண்டும். அப்போதுதான் நமக்கு உணவு உத்திரவாதமாகும். இதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x