Published : 07 Jul 2017 10:44 AM
Last Updated : 07 Jul 2017 10:44 AM

கோலிவுட் கிச்சடி: ராஜகுமாரன் அடுத்து

‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’ படங்களைத் தொடர்ந்து, இராஜமோகன் இயக்கும் புதிய படத்தில் இயக்குநர் ராஜகுமாரன் நாயகனாக நடிக்கிறார். ‘கடுகு’ படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக கதையின் நாயகனாகத் தொடர விரும்பியவருக்கு நம்பிக்கையைக் கொடுத்துவிட்டதாம் இராஜமோகன் சொன்ன கதை. உடனடியாக படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டார்கள்.

இரண்டு வாரிசுகள்

வாரிசுகள் குவிந்துவரும் கோலிவுட்டில் இரண்டு லேட்டஸ்ட் வரவுகள். ஒருவர் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி. பிரபல சின்னத்திரை இயக்குநர் வேதமணி எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘திரிபுரம்’ என்ற படத்தில் அறிமுகமாகிறார். இரண்டாவது வாரிசு நாகேஷ் வீட்டிலிருந்து... ஏ.எம்.பாஸ்கர் இயக்கி வரும் ‘நான் யாரென்று நீ சொல்’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார் கஜேஷ். இவர் நடிகர் ஆனந்த்பாபுவின் மகன்.

மேடையிலும் ஒரு கை!

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் கவனமாகக் கதைகளைத் தேர்வுசெய்து நடித்துவரும் வரலட்சுமி சரத்குமார், நடனம் வழியே திரைக்கு வந்தவர். சல்சா உள்ளிட்ட பல ஐரோப்பிய நடன வகைகளைக் கற்று இசை -நடன நாடகங்களை நடத்திப் புகழ்பெற்றவர். திரையில் தற்போது பிரபலமான நாயகியாக வலம் வந்தாலும் மேடையை மறந்துவிடக் கூடாது என்பதற்காகத் தனது நண்பர்கள் குழுவுடன் இணைந்து ‘ரோமியோ - ஜூலியட்’ இசை -நடன- நாடகத்தைச் சென்னையில் ஜூலை 8, 9 ஆகிய இரு தேதிகளில் நடத்துகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஒப்புதலுடன் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக் கோவையைப் பயன்படுத்தி ரோமியோ - ஜூலியட் கதையை மேடையில் நிகழ்த்திக் காட்ட இருக்கிறாராம். இந்த இசை நாடகத்தில் சல்சா மனோ, ரோமியோ கதாபாத்திரத்தில் கரம் கோக்க, வரலட்சுமிதான் ஜூலியட்!

அணி திரண்ட நண்பர்கள்!

முன்னாள் கதாநாயகிகள் திரும்பவும் அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க வருவார்கள். ஆனால் பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனிடமிருந்து பிரிந்த பின் தொழில் அதிபராக புதிய முகம் காட்டுகிறார் முன்னாள் நாயகி, ‘விக்ரம்’ படப் புகழ் லிஸ்ஸி. ஏற்கெனவே மாஜிக் லாண்டேர்ன் ப்ரிவியூ தியேட்டர் நடத்திவரும் இவர், தற்போது ஆஸ்கர் விருதுபெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரெசுல் பூக்குட்டி வடிவமைப்பில் சர்வதேசத் தரத்தில் சவுண்ட் ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதன் திறப்பு விழாவில் கமல், பிரபு, மோகன், ரேவதி, ராதிகா, ஸ்ரீபிரியா என லிஸ்ஸியின் நண்பர்கள் அணிதிரண்டு வாழ்த்த வந்திருந்தனர்.

வருத்தத்தில் சந்தானம்!

கதாநாயகன் அவதராம் எடுத்த பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை ருசித்தார் சந்தானம். கடந்த ஆண்டு ஜூனில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படமும் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு சந்தானம் நடித்து முடித்திருக்கும் மூன்று படங்கள் நிதிப்பிரச்சினையில் வெளிவரமுடியாமல் தவிக்கின்றன என்கிறார்கள். இதனால் மிகுந்த வருத்ததில் இருக்கும் சந்தானம், ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கனும்’, ‘சக்கைபோடு போடு ராஜா’ ஆகிய மூன்று படங்களை வெளிக்கொணர தாமே களத்தில் குதித்துவிட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x