Published : 07 Nov 2014 10:39 AM
Last Updated : 07 Nov 2014 10:39 AM

லிங்காவின் பிரம்மாண்டம்!

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த ‘லிங்கா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தத் தகவலை ‘லிங்கா' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துவிட்டார்.

கடந்த மே மாதம் 1-ம் தேதி மைசூரில் ஆரம்பமான ‘லிங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் நடந்த படப்பிடிப்புடன் நிறைவு பெற்றதாகவும், இந்தப் படத்தின் பின்தயாரிப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் முடிக்கப்பட்டு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறி வருகிறார்கள்.

‘லிங்கா’ படத்தின் 90 சதவிகிதப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட்களில் நடைபெற்றிருக்கிறது. தவிர ஷிமோகா பகுதியில் மிகவும் பிரம்மாண்டமாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இத்தனை விரைவாக முடிவடைய படத்தின் கலை இயக்குநர் அமரன் முக்கிய காரணம் என்கிறார்கள். 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய கோட்டை, சிறைச்சாலை, ஆங்கில வைஸ்ராயின் அரண்மனை என்று பிரம்மாண்ட செட்டுகளை இயக்குநர் கொடுத்த அவகாசத்துக்குள் முடித்துக் கொடுத்தாராம்.

“பத்து வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் சாபுசிரில் சாரிடம் உதவி கலை இயக்குநராகப் பணியாற்றினேன். தற்போது மீண்டும் பத்து வருடங்களுக்குப் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறும் அமரன், இயக்குநர் மிஷ்கினின் ஆஸ்தான கலை இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x