Published : 01 May 2014 01:11 PM
Last Updated : 01 May 2014 01:11 PM

மனதுக்கு இல்லை வயது - என்ன படிக்கலாம்?

ஆங்கில இலக்கியம் படிப்பதால் கிடைக்கக் கூடிய பணி வாய்ப்பு, அதன் மூலம் ஈட்டக் கூடிய வருவாய் குறித்து பார்த்தோம். பலருக்கு ஆங்கில மொழி கற்பது அலர்ஜியான விஷயமாக இருக்கும். ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை எளிதில் கற்கக் கூடிய திறன் அவர்களிடம் இருக்கும். எனவே, வயதை காரணம் காட்டி அலுத்துக் கொண்டு, மூலையில் முடங்கி விடுவது புத்திசாலித்தனம் அல்ல. வயதான பெண்களும், ஓய்வு பெற்றவர்களும் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும், இருக்கின்ற மிச்ச காலத்தை பிறருக்கு பயன்படும் வகையிலும், ஓய்வுக்குப் பின்னும் எளிய முறையில் சம்பாதிக்கக் கூடிய வகையிலும் மாற்றிக்கொள்ள முடியும்.

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் ஹிந்தி மொழி செல்வாக்குடன் விளங்குகிறது. தமிழகத்திலும் ஹிந்தி மொழி கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹிந்தி மொழி கற்பதன் மூலம் வீட்டில் இருந்து மாணவ, மாணவியருக்கு டியூஷன் எடுக்கலாம். ஹிந்தி கற்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலமாகவும், தனியார் டியூஷன் சென்டர் மூலமாகவும் கற்றுக் கொள்ள முடியும். வட மாநிலத்தவர் வைத்துள்ள வியாபார ஸ்தலங்களில் ஹிந்தி கற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்கின்றனர்.

ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் வயதான காலத்தில் கற்றுத் தேர்ந்து, அதன் மூலம் சுயமாக சம்பாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்களது குழந்தைகளுக்கு தாய் மொழியை கற்றுக் கொடுக்கக் கூட நேரமின்றி தவிக்கின்றனர். பணிக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களது குழந்தைகளுக்கு ஆன்-லைன் மூலமாக ஆசிரியரை நியமித்து, தாய் மொழியை கற்றுக் கொடுத்து வருகின்றனர். எனவே ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி என எந்த மொழியை கற்றுக் கொள்ள விருப்பம் கொள்கிறோமோ அந்த மொழி சார்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு, ஆன்-லைன் மூலமாக அவர்களின் தாய் மொழியை கற்றுக் கொடுத்து, மாதந்தோறும் வருவாய் ஈட்ட முடியும். பணத்தேவை இல்லை என்கிற முதியவர்கள் பிற மொழிகளை கற்றுக் கொண்டு, தங்களது பேரக் குழந்தைகளுக்கு புதிய மொழியை கற்றுக் கொடுத்த பெருமை கொள்ளலாம்.

பி.பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகள் படிக்க வயது உச்சவரம்பு கிடையாது. எனவே, இதுபோன்ற படிப்பை படிப்பதன் மூலம் ஓய்வுக்கு பின்னும் பணி வாய்ப்பு பெறலாம். சில தனியார் வங்கிகள் வயது உச்சவரம்பு பார்க்காமல் பி.காம்., எம்.பி.ஏ. முடித்தவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன. எனவே, பிளஸ் 2 முடித்த முதியவர்கள் தொலைதூரக் கல்வி மூலம், இப்படிப்புகளை படித்து தேறலாம். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் நடத்தும் அரசு தேர்வில், பட்டப்படிப்பு படித்தவர்கள் வயது உச்சவரம்பு பார்க்காமல் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.. எனவே, வயதாகிவிட்டது என்ற கவலையை விட்டு பட்டப்படிப்பு படித்து, புதிய வேலையை தேடிக் கொள்ளலாம்.

வீட்டில் உள்ள வயதான அம்மணிகள் கேட்டரிங் கோர்ஸ் படிக்கலாம். 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான கேட்டரிங் கோர்ஸ் படித்து முடிப்பதன் மூலம் சுயமாக உணவு விடுதி வைக்கவும், ஆர்டர் எடுத்து சமையல் செய்து கொடுக்கவும் இயலும். அதேபோல, இன்டீரியர் டெக்கரேஷன் கோர்ஸ் முடிப்பவர்கள், வீடுகளின் முகப்பு முதல் உள் அலங்காரம் வரையிலான ஆலோசனையை வழங்கலாம்; பணியாளரைக் கொண்டு இன்டீரியர் டெக்கரேஷன் பணியையும் மேற்கொள்ளலாம். எனவே, வயது முதிர்வை புறம் தள்ளி வைத்துவிட்டு, சம்பாதிக்க தேவையான ஆயிரம் வழிகளில் ஒன்றைப் பற்றி சிந்திக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x