Published : 29 May 2017 11:55 AM
Last Updated : 29 May 2017 11:55 AM

கடலோர பொருளாதாரம்: மாற்றம் வந்தால் ஏற்றம் பெறும்!

இந்தியாவின் மிகப் பரந்த கடற்கரை பகுதிகள் நாம் எந்த வகையில் பயன்படுத்திக் கொண் டிருக்கிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்துக்கு நாம் பயன்படுத்துவது சீனாவுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவு என்பதற்கு புள்ளிவிவரங்கள் தேவையில்லை. 9 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களை நமது கடல்பரப்பு இணைக்கிறது. இந்த மாநிலங்களில் அமைந்துள்ள 70 கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 17 கோடி மக்களுக்கு இந்தியா, கடல் சார்ந்த பொருளாதார நலன்களை உருவாக்கி இருக்கிறதா என்றால் அதற்கு இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும். இந்த மாவட்டங்களில் வசிக்கும் மீனவ மக்களைத் தவிர கடலோர மாவட்ட மக்களுக்கு கடலோரம் சார்ந்த எந்த வளர்ச்சியும் திட்டங்களும் இல்லை. அதாவது மிகப் பெரிய கடலோர வளத்தை கொண்டுள்ள இந்தியா அதை சரியாகப் பயன்படுத்தவில்லை.

இந்தியாவைவிட இரண்டு மடங்கு அளவில் கடற்கரை பகுதியை கொண்டுள்ள சீனாவுடன் ஒப்பிடுகையில் கடலோர பகுதிகளின் வளர்ச்சியில் இந்தியா சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2010-ம் ஆண்டு வாக்கில் சீனாவின் கடலோர மாவட்டங்களின் மக்கள்தொகை 59 கோடி. அதாவது கிட்டத்தட்ட சரிபாதி மக்கள் தொகையினர் அங்கு கடலோர மாவட்டங்களில் உள்ளனர். ஏனென்றால் கடலோர மாவட்டங்களில் உள்ள தொழில் வாய்ப்புகளால். இதனால் அங்கு மக்கள் நெருக்கமாக வசிக்கின்றனர் என்கிறது ஆய்வு. இதை ஒப்பிடும்போது நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பது புரியும்.

இதற்குக் காரணம் கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்டம். 1991-ல் கொண்டு வரப்பட்டு, பின்னர் முழுமையாக 2011ம் ஆண்டு அமல்படுத் தப்பட்ட இந்த சட்டத்தின் விதிமுறைகள் கடலோர பகுதிகளின்மீது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குறிப்பாக கடற்கரை பகுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்கிறது. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது, துறைமுகம் அமைப்பது, நிலம் வாங்குவது, விற்பது, மீன் பதப்படுத்தும் தொழில் உள்ளிட்ட பல தொழில்களுக்கும் தடை விதித்தது. கடற்பகுதிகளில் மீனவ சமுதாய மக்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்குக்கூட இந்த சட்டம் தடை செய்தது. இந்தியாவின் மிக முக்கியமான கடற்கரை பகுதிகளில் துறைமுகம், சுற்றுலா மேம்பாடு, கட்டுமானங்கள் கட்டுவதற்கு தடை செய்தது. இதனால் கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் மேலதிகமான தொழில்களை செய்ய முடியாத நிலை உருவானது.

ஆனால் இந்த ஒழுங்குமுறை மண்டல சட்டத்திலும் பல விதிவிலக்குகள் உருவாகின. விதிவிலக்குகள், அனுமதிகள், அனுமதி மறுப்பு போன்ற நடைமுறைகளால் கடற்பகுதிகளை பொது பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் சாதகமான நிலைமை இல்லை. இந்த நிலையில்தான் கடலோர ஒழுங்குமுறை மண்டல சட்டத்தை சீரமைப்பதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 2014ம் ஆண்டில் சைலேஷ் நாயக் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி இதன் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான 110 பக்க அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் 2015ம் ஆண்டு அளித்தது.

இந்தியாவின் கடலோரங்களில் அமைக்கப் பட்டுள்ள சுரங்கம் மற்றும் அகழ்வு பணிகள், முகத்துவாரங்களில் கழிவு நீர் கடலோடு கலப்பதை தடுப்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை வழங்கியது இந்த கமிட்டி. இதனால் இந்தியாவின் கடலோரங்கள் பாதிக்கப்படுவதாக கூறியது. பல கடற்கரை பகுதிகளில் தொழிற்சாலைகளின் கழிவுகளால் நச்சுத் தன்மை உள்ளதாகவும் கூறியது. மேலும் கமிட்டி தனது அறிக்கையில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் பல விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

குறிப்பாக கடற்கரை பகுதிகளை எந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என்றும் கேள்விகளை எழுப்பி இருந்தது. கடலோர பகுதிகளின் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும் என இதில் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக சூழலியல் சுற்றுலா, பொதுமக்கள் பயன்பாடு சார்ந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், துறைமுகங்ளுக்கு அனுமதிப்பது, பாது காப்பு சார்ந்த கட்டுமானங்களுக்கு அனுமதிக்கவும் கூறியது. ஆனால் இந்த பரிந்துரைகளுக்கு மீனவ மக்கள் மத்தியிலும், சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

சில கேள்விகள்

சர்வதேச அளவில் ஒப்பிடுகிறபோது இந்தியாவின் கடலோர ஒழுங்குமுறை மண்டல வழிகாட்டுதல்கள் சில கேள்விகளை எழுப்புவது உண்மைதான். பல கட்டுமான நிறுவனங்களும், தொழில் முனைவு நிறுவனங்களும் கடலோர பகுதிகளில் நிலங்களை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அளிக்க கோருகின்றனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. சில வழக்குகளில் குறிப்பிட்ட இடங்களில் உயர்நீதிமன்றம் அனுமதித்தும் உள்ளது. பாரம்பரிய மீனவ மக்கள் பயன்படுத்த முடியாத இடங்களில் தொழில்சார்ந்து அனுமதிக்கப்படுவதும் நடக்கிறது. கடலோரங்களில் தொழிற்சாலைகளை தடை செய்யும் சட்டம், அணுசக்தி திட்டங்களுக்கும், பெட்ரோலிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவும் அனுமதிக்கிறது.

இந்த நிலையில்தான் கடலோர மக்களின் மேம்பாட்டுக்காக சாகர்மாலா திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா தமிழ்நாடு குஜராத் உள்ளிட்ட மீனவ மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பது, மீன் பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளது. பல்வேறு துறைமுகங்களை உருவாக்கவும் பல் திறமை மையங்களை உருவாக்கவும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் முன்வந்துள்ளது.

இதனால் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. 2011ம் ஆண்டுதான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதால் புதிய விதிமுறைகளை சேர்ப்பதும் எளிதாகவே இருக்கும். கட்டுப்பாடு களை தளர்த்துவதும் சாத்தியமாகக் கூடியது தான்.

சமூக பொருளாதாரக் கட்டமைப்பை மேம் படுத்துவதற்கு ஏற்ப கடலோர பகுதிகளில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கடற்பகுதி சார்ந்த புதிய வேலவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதும் அவசியம். இவற்றை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தலாம். ஏனென்றால் மாநில அரசுகள் ஏற்கெனவே கடலோர மேலாண்மை வாரியம் போன்ற அமைப்புகளை வைத்துள்ள நிலையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது எளிதாக இருக்கும். பாரம்பரிய கடல் சார்ந்த தொழில் வாய்ப்புகள் தவிர கடற்கரை பகுதிகளை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கு ஏற்ப நவீன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x