Published : 06 Jul 2016 12:03 PM
Last Updated : 06 Jul 2016 12:03 PM

ஒலிம்பிக் சகாப்தம்: கறுப்பு வைரம்

ஒலிம்பிக் என்றதும் நினைவுக்கு வரும் சாதனை முகங்களில் முதன்மையானது ஜெஸ்ஸி ஓவன்ஸ். ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் பெரும்பாலோரது பாராட்டுகளை யாராவது ஒருவர் ஒட்டுமொத்தமாக அள்ளிச் செல்வார். அப்படி உச்சபட்ச சாதனை புரிந்தவர்களில் முதன்மையானவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஓவன்ஸ்.

1936-ம் ஆண்டில் ஹிட்லர் ஆட்சியிலிருந்தபோது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அப்போதுதான் ஓவன்ஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்த ஓவன்ஸ், சிறு வயதில் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டவர். அவரது தாத்தா அமெரிக்கர்களிடம் அடிமையாக இருந்தவர். 10 வயதாவதற்கு முன்பே சின்னஞ்சிறுவனாக வயலில் பருத்தி எடுத்தல், பெட்ரோல் நிரப்புதல், மளிகைப் பொருட்களை கொண்டு போய்க் கொடுக்கும் வேலை என பல்வேறு வேலைகளை ஓவன்ஸ் செய்துவந்தார்.

அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒஹையோ மாகாணப் பல்கலைக்கழத்துக்காகப் பங்கேற்றபோது, வெறும் 45 நிமிடங்களில் நான்கு புதிய உலக சாதனைகளைப் படைத்தார். பொதுவாகவே கறுப்பினத்தவரை இளக்காரமாகப் பார்க்கும் அமெரிக்கர்களால், ஓவன்ஸின் உலக சாதனைகளை உடனடியாக ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

ஹிட்லர் ஆட்சியின் கீழ் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்றுதான் அமெரிக்கா முதலில் நினைத்திருந்தது. ஆனால், ஓவன்ஸின் மேற்கண்ட அதிரடி சாதனைகள், பெர்லின் ஒலிம்பிக்கில் அமெரிக்கா பங்கேற்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

அதில் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய நான்கு போட்டிகளில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கேற்றார். பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை அள்ளினார். இது ஒலிம்பிக் வரலாற்றில் முதன்மைச் சாதனையாகக் கருதப்படுகிறது.

இன்னொரு விஷயத்துக்காகவும் ஓவன்ஸ் நினைவுகூரப்படுகிறார். நீளம்தாண்டுதல் தகுதிச் சுற்றுக்கு முன்னதாக வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஹிட்லர் வந்திருந்தார். அனைவருடனும் கைகுலுக்கிய ஹிட்லர், ஓவன்ஸிடம் மட்டும் கைகுலுக்கவில்லை. ஆப்பிரிக்கர்கள் வெற்றி பெறுவதை அவர் விரும்பாமல் இருந்ததே காரணம். ஆனால், ஆடுகளத்தில் ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தார் ஓவன்ஸ்.

இன்றளவும் உடல்திறனை மட்டுமே நம்பி விளையாடப்படும் தனிநபர் போட்டிகளில், ஆப்பிரிக்கர்களே பெருமளவு வாகை சூடி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x