Published : 27 Mar 2014 11:21 AM
Last Updated : 27 Mar 2014 11:21 AM

ஜெயமுண்டு பயமில்லை - 27 மார்ச் 2014

இரண்டு நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்தனர். அப்போது ஒருவன் கேட்டான் “உனக்கு நினைவிருக்கிறதா? இருபது வருடங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் ஆளுக்கு நாலு சப்பாத்தியும் ஒரு டீயும் சாப்பிட்டோமே?” மற்றவன் ஆச்சரியத்துடன் “எப்படி இவ்வளவு தெளிவாக நினைவில் வைத்திருக்கிறாய்” என்று கேட்டான். உடனே முதலாமவன் சொன்னான் “அன்னிக்கு பில் கொடுக்கும்போது நீ காணாமல் போய்விட்டாய். அதான்” என்று.

நம்முடைய மூளை சில விஷயங்களை நினைவில் வைக்கிறது. பல விஷயங்களை மறந்து விடுகிறது. எந்த ஒரு விஷயம் நம்முடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறதோ அந்த விஷயம் மூளையில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வகுப்பில் திடீரென்று பாம்பு வந்து பதறி வெளியே ஓடினோம் என்றால் அன்று என்ன உணவு சாப்பிட்டோம் என்பது பல நாட்களுக்கு மறக்காது. இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் எங்கிருந்தோம் என்பதெல்லாம் வெகு நாட்களுக்கு மறப்பதில்லை.

நம்முடைய நினைவுத் திறனில் இரு வகை உண்டு. ஒன்று குறுகிய கால நினைவு (Short term memory) இன்று காலை என்ன உண்டோம், நேற்று எங்கு சென்றோம் போன்ற விபரங்கள் அடங்கியது. இந்த நினைவிலிருந்து பெரும்பான்மையான தேவையற்ற விஷயங்கள் மறைந்து மறந்து விடுகிறது.

சில விஷயங்களை முக்கியமானதென்று நம்முடைய மூளை கருதினால் அவற்றை நீண்ட கால நினைவாக (Long term memory) மாற்றுகிறது. நேற்று என்ன உடையணிந்தோம், என்ன உண்டோம் போன்ற தேவையற்ற விஷயங்களை நினைவில் வைப்பதில்லை. அதே நேரம் போன வாரம் ஆசிரியர் கடுமையாகத் திட்டியது நீண்டகால நினைவாக மாறுகிறது.

நீண்டகால நினைவு நம்முடைய மூளையில் பல இடங்களில் மிக ஆழமாகப் பதிவு செய்யப் படுகிறது. ஆகவே மூளையில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் பழைய நினைவுகள் எளிதில் அழிவதில்லை. வயதானவர்கள் சிலருக்கு அன்று காலை சாப்பிட்டது மறந்து போய்விடும். ஆனால் 50 ஆண்டுகளுக்குமுன் நடந்த கோயில் திருவிழாவைப் பற்றி விலாவாரியாகச் சொல்வார்கள்.

மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை நினைவுபடுத்துவதன் மூலமும் ஒரு விஷயம் நீண்ட கால நினைவாக மாறுகிறது. மாணவர்கள் பொதுவாகச் செய்யும் தவறு என்னவென்றால் ஒருமுறை படித்ததும் அதைத் திருப்பிப் படிப்பதில்லை. நம்முடைய நினைவில் அது இருக்கும் என்ற அலட்சியம்தான்.

ஆனால் ஒரு மாதம் முன்பு நீங்கள் பாடம் படித்த அன்று என்ன உணவு உண்டீர்கள் என்பது எப்படி நினைவில் இல்லையோ அதுபோல் அப்பாடமும் மறந்துவிடும். மீண்டும் மீண்டும் கேட்கவில்லை எனில் நம் பெயர்கூட மறந்துவிடும்.

-மீண்டும் நாளை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x