Published : 15 Mar 2017 10:07 AM
Last Updated : 15 Mar 2017 10:07 AM

காரணம் ஆயிரம்: ஜில்லென்று ஓர் உண்மை!

குளிர் மறைந்துவிட்டது. வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் ஜில்லென்று ஒரு தகவல் பரிமாறிக் கொண்டால் நன்றாக இருக்கும் இல்லையா ? இந்த ஜில்லென்ற விஷயத்தைச் சூடாகத் தொடங்குவோமா?

தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்? அடுப்பில் தீயைப் பற்ற வைத்துவிட்டுத் தீ ஜுவாலை மீது நீர் நிரம்பிய பாத்திரத்தை வைப்போம்.

நீர் நிரம்பிய பாத்திரத்தைத் தீ ஜுவாலைக்குப் பக்கவாட்டில் வைக்க வேண்டியதுதானே! ஏன் தீ ஜுவாலையின் மேல் வைக்க வேண்டும்? பக்கவாட்டில் வைத்தாலும் பாத்திரத்தின் மீது தீ ஜுவாலை படும். ஆனாலும், பாத்திரமும் பாத்திரத்தில் உள்ள நீரும் சூடாகாது.

தீ ஜுவாலைக்கு மேல் பாத்திரத்தை வைக்கும்போது வெப்பமடைந்த காற்று, எடை குறைந்து ஜுவாலையை மேல்நோக்கிக் கரியச் செய்கிறது. எனவே வெப்பமானது பாத்திரத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து மேல் நோக்கிப் பரவுகிறது. எனவே நாம் சூடுபடுத்த வேண்டிய நீரை அல்லது பொருளைத் தீ ஜுவாலைக்கு மேலே வைக்கும்போது அது சீக்கிரம் சூடாகிறது.

தீ மேல் நோக்கி எரியும் என்பதுதான், தீயின் மேல் உள்ள பாத்திரம் விரைவாகச் சூடாகக் காரணம். தீ பக்கவாட்டில் பரவுவதைவிட மேல் நோக்கியே அதிக விசையுடன் எரிகிறது. எனவே பொருள் விரைவாகச் சூடுபடுத்தப்படுகிறது.

தீ ஏன் பக்கவாட்டில் எரிவதில்லை, ஏன் மேல் நோக்கி மட்டுமே எரிகிறது? அதற்குக் காரணம் சூடாக்கப்படும்போது காற்று எடை குறைவதுதான். எடை குறைந்த காற்று மேலெழும்போது தீ ஜுவாலையையும் மேல்நோக்கி இழுத்துச் செல்கிறது. சரி, இதில் ஜில்லென்ற விஷயம் என்ன?

பாத்திரத்தில் உள்ள நீரைச் சூடுபடுத்த வேண்டுமானால் ஜுவாலையின் மீது வைக்கிறோம். அதே சமயம் பாத்திரத்தில் உள்ள நீரைக் குளிர வைக்க, பாத்திரத்தை ஐஸ்கட்டியின் மேலேதானே வைக்க வேண்டும்! நாம் ஏன் அப்படிச் செய்வதில்லை?

முன்பெல்லாம் பொருளைக் குளிரவைக்க அந்தப் பொருளை ஐஸ்கட்டியின் மேலேதான் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஐஸ்கட்டியின் மேலே வைத்து எந்தவொரு பொருளையும் முழுமையாகக் குளிர வைக்க முடியாது.

பனிக்கட்டியைச் சுற்றியிருக்கும் காற்று, குளிர்ந்து எடை அதிகமாகிக் கீழ் நோக்கி இறங்கும். எனவே பனிக்கட்டியின் மேல் பாத்திரத்தை வைத்தால் அது குளிர் அடைய ரொம்ப தாமதமாகும்.

அதே சமயம் பனிக்கட்டிக்குக் கீழே பாத்திரத்தை வைக்கும்போது பனிக்கட்டியைச் சுற்றி உருவாகும் எடை குறைந்த காற்று கீழ் நோக்கி இறங்கிப் பொருளை உடனடியாகக் குளிரச் செய்து விடுகிறது.

பனிக்கட்டியின் மேலே பாத்திரத்தை வைத்தால் பாத்திரத்தின் அடிப்பகுதி மட்டுமே குளிர்ச்சி அடையும். இந்தக் குளிர்ச்சியானது பாத்திரம் முழுவதும் பரவுவதற்கு ரொம்ப தாமதமாகிவிடும். மேலும் பனிக்கட்டியின் மேல் உள்ள பாத்திரத்தின் அடிப்பகுதி திரவத்திலும், அதன் ஏனைய பகுதிகளிலும் சூடான காற்று சூழ்ந்து நிற்பதால் அது குளிர்ச்சி அடைவதில்லை.

அதே சமயம் நீருள்ள பாத்திரத்தை ஏதேனும் ஒரு மூடியைக் கொண்டு மூடிவிட்டு அதன் மேலே பனிக்கட்டியை வைக்கும்போது, பனிக்கட்டியைச் சூழ்ந்து உருவாகும் எடை குறைந்த காற்று உடனடியாகக் கீழிறங்கி, பாத்திரத்தில் உள்ள நீரை உடனே குளிர்ச்சி அடையச் செய்து விடுகிறது.

இந்த அடிப்படையில்தான் கடைகளில் காய்கறிகள் மீதும், மீன்கள் மீதும் ஐஸ் கட்டியைக் கொட்டி வைத்துப் பாதுகாக்கிறார்கள். எளிமையான தத்துவம்தான். ஆனால், இந்தத் தத்துவம் தெரியாமலேயே இன்னமும்கூட பலரும் இருக்கிறார்கள். இனி யாராவது தண்ணீரை ஜில்லென்று ஆக்க, பனிக்கட்டி மீது பாத்திரத்தை வைத்தால், இந்த எளிய உண்மையைச் சொல்வீர்கள் அல்லவா?

(காரணங்களை அலசுவோம்)

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x