Last Updated : 06 Jun, 2016 12:32 PM

 

Published : 06 Jun 2016 12:32 PM
Last Updated : 06 Jun 2016 12:32 PM

குறள் இனிது: ஒரு காரியத்தைப் பேசி முடிக்கணும்னா..

சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது (குறள் 647)

பேரம் பேசி காய்கறிகள் பழங்கள் வாங்கி மகிழ்ந்த, அல்லது ஏமாந்த அனுபவம் உண்டா உங்களுக்கு?

ஆக்ரா, ஜெய்ப்பூர், காசி போன்ற வட இந்திய ஊர்களுக்கு சுற்றுலா சென்றிருப்பீர்கள். கைவினைப்பொருட்கள், துணிமணிகள் வாங்க வெவ்வேறு சிறு குழுக்களாகப் பிரிந்து செல்வது உண்டு.

இருப்பிடத்திற்குத் திரும்பியதும் பொருட்களைப் பரப்பி வைத்து விலைகளைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது இன்னும் கூட விலை குறைத்துக் கேட்டிருக்கலாமோ எனத் தோன்றுமில்லையா?

எனது நண்பர் ஒருவரின் அணுகுமுறை இதில் அலாதியானது. டெல்லி கரோல்பாக் என்றால் விற்பவர் சொல்லும் விலையில் கால்பங்கில் ஆரம்பிக்கும் பலே கில்லாடி அவர்.

நாங்கள் பயந்து ஒதுங்கி விடுவோம். அவரோ விற்பவருடன் இந்தியில் ஆரம்பித்து ஆங்கிலத்தில் முடியும் அல்லது இரு மொழிகளும் இரண்டறக் கலந்துள்ள வாக்கியங்களில் ஏதேதோ பேசுவார்.

மேலும் தான் வாங்க மாட்டேன் என்பது போல இரண்டு மூன்று முறை இடத்தைவிட்டு நகர்ந்து போய் போக்குக் காட்டுவார். பின்னர் எங்களால் நம்பவே முடியாத விலையில் வாங்கி வந்து விடுவார்.

விலை அதிகம் கொடுத்தவர்கள் இவ்வளவு குறைத்துக் கேட்கலாமா என்று பயந்திருப்பார்கள். அல்லது எவ்வளவு நேரம்தான் போராடுவது என்று பொறுமை இழந்திருப்பார்கள். பலருக்கோ என்ன சொல்லிக் கேட்பது என்று தெரியாது.

சென்னையிலேயே கிடைக்கிறது என்றோ அல்லது அங்கேயே பத்து கடை தள்ளி குறைந்த விலையில் இருக்கின்றது என்றோ அல்லது இதன் தரம் குறைவு தானே எனப் பேசும் திறன் வேண்டும்.

பேரம் போலவே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வெற்றிகொள்வது என்பது ஓர் தனிக்கலை. ஊதிய உயர்வு கேட்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதைப் பார்த்திருப்பீர்கள்.

உண்மை நிலை என்ன? இருவரும் சேர்ந்து தான் வாழ வேண்டும். முறுக்கிக் கொள்ளலாம். ஆனால் விலகி ஓடிவிட முடியாதே!

எதிராளியிடமிருந்து அதிகபட்சப் பலன்களைக் கறப்பதற்குத் தான் பேச்சுவார்த்தை என்று மார்வின் சொன்னது உண்மை தானே!

விமானக் கடத்தல், எல்லைப் பிரச்சினை போன்றவற்றில் பேச்சுவார்த்தை நடத்துவது இன்னும் சவாலானது.

இதற்குத்தான் அச்சத்தினால் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது; ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அச்சப்படக் கூடாது என்றார் கென்னடி.

பெரிய நிறுவனங்களில் பொருட்களை சேவைகளை கொள்முதல் செய்யும் பணியில் இருப்பவர்களுக்கும் இத்திறன்கள் தேவைப் படுகின்றன.

உதாரணத்திற்குத் தற்பொழுது டெல் நிறுவனம் Emc2 ஐ வாங்கப் போவதாக வந்த செய்திகளையும் பார்த்து இருப்பீர்கள்.

விலையை முடிவு செய்வதற்குப் பேச்சு வார்த்தை நடத்துபவர்களிடம் அந்நிறுவனம் குறித்த எல்லாப் புள்ளி விபரங்களுடன் எதிராளியின் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என ஊகிக்கும் சாமர்த்தியமும் இருக்கும்!

அப்பா, இந்த ஆளுக்கிட்ட நம்மால இனிப் பேசி மல்லுகட்ட முடியாது என்று எதிராளியைத் திணற வைக்கக் கூடியவர்கள் அவர்கள்!

அஞ்சாமல் அசராமல் பேசும் நாவன்மை உடையவனை பேசி வெல்ல முடியாது என்கிறது குறள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x