Published : 18 Nov 2014 10:53 AM
Last Updated : 18 Nov 2014 10:53 AM

தத்தி நடப்பவர்கள் ஓட முடியுமா?

எனக்குக் கொஞ்ச நாட்களாகக் குதிகால் வலி உள்ளது. அதற்கு ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?
கணேசன், திருமணஞ்சேரி

உப்புகுத்தி வாதம் என்றும், குதிகால் வாதம் என்றும் குமரி மாவட்டத்தில் இதைச் சொல்கிறார்கள். இதை Calcaneal spur, Retrocalcaneal bursitis, Posterior heel spur என்று அழைப்பார்கள். "ஐயா, எழுந்திருந்து நடக்க ஆரம்பிக்கும்போது காலில் வலி ஏற்படுகிறது" என்று நோயாளிகள் சொல்கிறார்கள். தத்தித் தத்தி நடப்பார்கள். காலில் சிறிது வீக்கம் இருக்கும். இதில் நோயாளி அணிந்திருக்கும் செருப்பு முக்கியமானது.

அதிக உயரமுள்ள காலணிகள், இறுக்கமான காலணிகள் போன்றவை இதற்குக் காரணம். சமீபத்தில் காலணியை மாற்றியதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம். குதிகால் வலி ஒரு காலில் மட்டும் வரலாம், இரண்டு கால்களிலும் வரலாம். இது காலின் பின்னால் உள்ள achilles tendonitis-யை அழுத்தலாம்.

என்ன நோய்?

ஒருவருடைய தொழில் என்ன, ஓடியாடி வேலை செய்ய வேண்டுமா என்று பார்க்க வேண்டும். Gout நோயோ, கீல்வாயுவோ, முடக்கு வாதமோ, serum negative arthropathy என்கிற வாத ரக்த நோயோ உள்ளதா என்று பார்க்க வேண்டும். கணுக்காலின் பின்பகுதியில் வீக்கமும், சிவப்புத் தன்மையும் காணப்படும். தொட்டால் சற்றுச் சூடாக இருக்கும், வலி இருப்பதாகச் சொல்வார்கள். அடியில் வலி வருவதற்கு Plantar fasciitis என்று பெயர். தசைநார் கிழிந்துள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

இதற்கு என்று தனியாகப் பரிசோதனை உள்ளது. Achilles ஆடுசதையை நன்றாக அழுத்தும்போது கால் கீழே போக வேண்டும். விளையாடுபவர்கள், ஓடுபவர்களுக்கு இது அதிகம் வரும். ஆயுர்வேதத்தில் இது வாத நோயாகக் கருதப்படுகிறது. இதை வாதக் கண்டகம், குடுகா வாதம் என்று சொல்வார்கள். இவர்கள் வெந்நீரிலோ, காடி பாலிலோ, உப்பு வெந்நீரிலோ காலை முக்கி வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு வேண்டுமானால் ஐஸ் கட்டி வைக்கலாம். ஆயுர்வேதத்தில் இப்படிச் சொல்லப்படவில்லை என்றாலும், இது பலன் அளிக்கிறது.

மருந்து

அதற்குப் பிறகு, கொட்டன் சுக்காதி எண்ணெய், முறிவெண்ணெய், காயத்ரிமேனி எண்ணெய் ஆகியவற்றைத் தடவலாம். நொச்சியிலை, ஆமணக்கு இலை, பூண்டு, கொள்ளு, சதகுப்பை, எலுமிச்சை ஆகியவற்றைச் சட்டியில் வறுத்து, அதை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்பு வலியை நீக்குவதற்காகக் குக்குலு திக்தக கஷாயம், நொச்சி கஷாயம், சிற்றரத்தை கஷாயம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.

முறிவெண்ணெய்யைத் தாரைப் போல் அதில் ஊற்றலாம். செருப்பை மாற்றச் சொல்லலாம். சில நேரங்களில் எந்த இடத்தில் வலி உள்ளதோ, அந்த இடத்தில் கூடுதல் சிகிச்சை செய்வதுண்டு. இதற்கு அக்னி கர்மம் என்று பெயர். மருந்தில் குணமாகாத நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத் தேர்வுபெற்ற மருத்துவர் இந்தச் சிகிச்சையைச் செய்வார். எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் இதைச் செய்வதில்லை.

குதிகால் வலிக்குக் கைமருந்து

# சிற்றரத்தை, அமுக்குரா, சுக்கு ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் போட்டுச் சாப்பிட்டு வர வேண்டும்.

# முடக்கறுத்தான், பிரண்டைத் துவையல் நல்லது

# முடக்கறுத்தான் ரசம் மிகவும் நல்லது.

# உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு, குப்பைக் கீரை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

# தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்து வரலாம்.

# மிதமான வெந்நீரில் உப்பு போட்டுக் காலை முக்கி வைக்கலாம்

# வில்வக் காயைச் சுட்டு நசுக்கி, எருக்கிலை பழுப்பை அதன் மேல் விட்டுக் குதிகாலில் ஒத்தடம் கொடுக்கலாம்.



பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x