Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM

2,342 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப ஜூன் 14-ல் தேர்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

வி.ஏ.ஓ. என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும்.

வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14-ல் தேர்வு

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு தகுதி உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஜூன் 14-ம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது.

இந்த தேர்வில், பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள், வி.ஏ.ஓ. நடைமுறைகள் தொடர்பாக 25 கேள்விகள், திறனாய்வு பற்றிய 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 80 வினாக்கள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.

நேர்முகத்தேர்வு கிடையாது

எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வு ஏதும் கிடையாது. தேர்வில் வெற்றிபெற்றாலே வி.ஏ.ஓ. வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விவரங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

ஏப்ரல் 15 கடைசி நாள்

ஏப்ரல் 15-ம் தேதிக்குள் (நள்ளிரவு 11.59 மணி வரை) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ஏப்ரல் 17-ம்

தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x