Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

கிராமப்புற மாணவர்களுக்கான வரப்பிரசாதம்

மருத்துவத்துக்கு இணையான படிப்புகளை கடந்த இரு நாட்களாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் பி.பார்ம், பிசியோதெரபிஸ்ட், பி.ஏ.எஸ்.எல்.பி. ஆகிய பட்டப் படிப்புகளும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு கட்டணமும் மிகக் குறைவு. கற்றல் வசதி, பொருளாதாரம், குடும்பச் சூழல் காரணமாக மருத்துவப் படிப்புக்கான மதிப்பெண்கள் எடுக்க இயலாமல், அதேநேரத்தில் ஓரளவு நல்ல மதிப்பெண் எடுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கான வரப்பிரசாதம்தான் மேற்கண்ட படிப்புகள்.

பேச்சுலர் ஆஃப் பார்மசிஸ்ட் என்பது நான்கு ஆண்டு பட்டப்படிப்பு. இது மருந்து தயாரிப்பு, விநியோகம், ஆராய்ச்சி வரையிலான பாடப் பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் மேற்படிப்புகளாக மெடிசன்ஸ் கெமிஸ்ட்ரி, பார்மா டெக்னாலஜி, இன்டஸ்ட்ரியல் பார்மசி, பார்மாசூட்டிக்கல் ஆகியவற்றை படிக்கலாம். இதன்மூலம் ஆராய்ச்சி நிலையம், ஆய்வுக் கூடம், மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை, மருந்து உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, எம்.பி.ஏ. இன் பார்மா மேனேஜ்மென்ட் படிக்கலாம். இப்படிப்புகள் சென்னை, மற்றும் மதுரை அரசு கல்லூரிகளிலும், 32 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. அரசு கல்லூரியில் ரூ.1200-ம், தனியார் கல்லூரியில் 28 ஆயிரமும் செலவாகும்.

பிசியோதெரபி பட்டப் படிப்பு, நான்கரை ஆண்டுகள் கொண்டது. 6 மாதம் இன்டன்ஷிப் கட்டாயம். இதில் பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் பெண்கள், பெண் பிசியோதெரபிஸ்ட் மூலமே சிகிச்சை பெற விரும்புவர். இதிலும் மாஸ்டர் ஆஃப் பிசியோதெரபி இன் ஆர்த்தோ, ஸ்போர்ட்ஸ் நியூரோ சயின்ஸ், கார்டியோரிஸ்ட், ரெஸ்பெரடரிஸ் சயின்ஸ், பீடியாட்ரிக்ஸ் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகத்தில் இரு அரசுக் கல்லூரிகளிலும், 22 தனியார் கல்லூரிகளிலும் இந்தப் பாடப் பிரிவு உள்ளது. பிசியோதெரபி படிக்க விரும்புபவர்கள், கவுன்சலிங் செல்லும்போது, மருத்துவமனை சார்ந்த கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பது நலம்.

பேச்சுலர் ஆஃப் ஆடியாலஜி ஸ்பீச் லேங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏ.எஸ்.எல்.பி.) என்பது ஐந்தாண்டு பட்டப் படிப்பு. இதில் ஒரு ஆண்டு இன்டன்ஷிப் கட்டாயம். சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இது இருப்பதால் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

திக்குவாய், குரல் சீரமைப்பு மற்றும் பேச்சுத் திறன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்த படிப்பு இது. இதற்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அமோக வேலைவாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x