Last Updated : 24 Nov, 2014 11:46 AM

 

Published : 24 Nov 2014 11:46 AM
Last Updated : 24 Nov 2014 11:46 AM

நீங்கள் நாத்திகரா, ஆத்திகரா, நிகிலிஸ்டா?

“ஆங்கில இதழ் ஒன்றில் நடிகை ஒருவரைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன். Actress என்ற வார்த்தைக்குப் பதிலாக Actor என்றே பல இடங்களில் அந்த நடிகையைக் குறிப்பிட்டிருந்தார்கள். இது தவறு இல்லையா?’’ வாசகர் ஒருவரின் கேள்வி இது.

பழங்காலத்தில் இதைத் தவறு என்றுதான் சொல்வார்கள். ஆனால் தற்போது பாலினத்தைக் குறிப்பிடாத​ பொது வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அந்த விதத்தில் Actor என்ற வார்த்தை நடிகர், நடிகை ஆகிய எவரையும் குறிக்கலாம் (தமிழில் கூட ‘மாணவர்’ என்ற வார்த்தை மாணவன், மாணவி ஆகிய இருவரையும் குறிக்கும்).

ஆண்மொழி

நிறுவனத்தின் உச்சபதவியை அடைந்த ஒரு பெண்ணை அப்போதும் chairman என்றுதான் குறிப்பிட்டார்கள். பிறகு chairwoman என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்கள். பிறகு யாராக இருந்தாலும் chairperson என்று குறிப்பிடலாம் என்ற நிலை வந்தது. (ஆனால் இது அரைகுறையாகத்தான் பின்பற்றப்படுகிறது. அந்த உயர் பதவியை ஒரு பெண் வகிக்கும்போது மட்டும் chairperson என்கிறார்கள்!).

நம் வழக்கில் பல வார்த்தைகளை ஆண்களோடு இணைத்துத்தான் குறிப்பிடுகிறோம். ஒரு புதிர் நினைவுக்கு வருகிறது. ஒரு டாக்டர் தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் அந்த டாக்டர் அவனுடைய அப்பா அல்ல. இது எப்படிச் சாத்தியம்?

இந்தக் கேள்வியைக் கேட்டால் பதிலளிப்பவர் விழிப்பார் அல்லது சில நொடிகளுக்குப் பிறகே புரிந்துகொள்வார். இதுதான் பெரும்பாலும் நடக்கும். காரணம் டாக்டர் என்றால் அது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று நம் மனதில் ஒரு படிமம். இத்தனைக்கும் எக்கச்சக்கமான பெண் மருத்துவர்களை நாம் சந்தித்து வருகிறோம்.

ஆண்மொழி அகற்றம்

ஆண்களை மட்டுமே மையப்படுத்தும் வார்த்தைகளை மாற்றித்தான் பயன்படுத்த வேண்டுமென்று நாகரிக உலகம் இப்போது எதிர்பார்க்கிறது. Policeman என்ற வார்த்தைக்குப் பதிலாக Police Officer என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

Workman எதற்கு? Worker எனலாமே.

முன்னோர் என்பது தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும் மட்டுமா? பாட்டிக்கும் கொள்ளுப் பாட்டிக்கும்கூட அதில் இடம் உண்டுதானே?. Forefather என்ற வார்த்தைக்குப் பதிலாக Ancestor என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

Manpower? ஊஹூம். Staff? அதுதான் சரி.

இது தொடர்பாகப் பேசியபோது “இதையெல்லாம் ஆணாதிக்கம் என்று சொல்லி மாற்ற வேண்டியது அனாவசியம். எளிமையாகவும், பழகிவந்ததாகவும் இருப்பதை எதற்காக மாற்ற வேண்டும்?” என்ற ஒரு நண்பர் ஒரு எடுத்துக் காட்டையும் வீசினார். “Each student must wear his coat” என்று இருபாலர் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் போட்டால் மாணவிகளும் அதைப் புரிந்துகொண்டு கோட் அணிந்துதான் வருவார்கள். “Each student must wear his or her coat” என்னும் வாக்கியம் நெருடலாக இல்லையா?’’ என்றார்.

கொஞ்சம் நெருடல்தான். ஆனால் அதை வேறு பலவிதங்களில் சரி செய்ய முடியும்.

முதல் வழி, அந்த வாக்கியத்தைப் பன்மையாக்கிவிட முடியும். All students must wear their coats என்று குறிப்பிடலாமே.

வாக்கியத்தில் உள்ள pronounஐ நீக்கி வாக்கியத்தைச் சற்றே மாற்றுவதன் ​மூலமும் இதைச் செய்யலாம். Every student must wear coat.

Second person ஆக வாக்கியத்தை மாற்றுவதும் ஒரு தீர்வுதான். (First person என்றால் I, second person என்றால் you, third person என்றால் he, she, it என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்). Wear your coats without fail.

SIMULATE – STIMULATE – STIPULATE

Simulate என்றால் ஒன்றை வேறொன்று போலவே பாவிப்பது. விண்வெளிப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்பாக விண்வெளியில் இருப்பது போன்ற ​சூழலில் விண்வெளிவீரர்களை விஞ்ஞானிகள் ‘பயணம்’ செய்ய வைப்பார்கள். இது simulation.

Future Population changes were simulated by computer என்பது மற்றொரு உதாரணம். அதாவது ஒன்றை அதன் பிரதி போலக் கற்பனை செய்வது அல்லது கற்பனை ​சூழலை உருவாக்குவது எனலாம்.

Stimulate என்றால் ஊக்கப்படுத்துதல் என்று பொருள். This drug stimulates heart. The reader felt stimulated while reading a book.

Stipulate என்றால் ஒரு தேவையைக் குறிப்பாகத் தெரியப்படுத்துதல் - அதாவது உடன்படிக்கைகளில் இருப்பதுபோல. Specify, state clearly என்று இதற்கான அர்த்தத்தைக் கூறலாம்.

நீங்கள் nihilist-ஆ?

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா? கடவுள் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களை atheist என்று அழைக்கலாம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றால் theist. (theo என்றால் இறை நம்பிக்கை என்று பொருள்).

“நான் கடவுளை மறுக்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. என்னை எப்படி அழைப்பீர்கள்?’’ என்றால் agnostic என்ற வார்த்தை இதற்குத்தான் இருக்கிறது.

இதையும் தாண்டிய ஒரு நிலை உள்ளது. விரக்தி பொங்க “கடவுள், ஒழுக்க நெறிகள் எல்லாமே வேஸ்ட். வாழ்க்கையே அர்த்தமில்லாதது” என்ற மனநிலையில் இருந்தால், உங்களை nihilist எனலாம்.

நம்மில் பலரும் வாழ்க்கையின் வெவ்வேறு சமயங்களில் இப்படி எல்லா நிலைகளிலும்தான் இருக்கிறோம் இல்லையா?

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x