Published : 12 Dec 2013 06:34 PM
Last Updated : 12 Dec 2013 06:34 PM

வாழ்வு கொடுத்த கற்பூர மரங்கள் அகற்றத்தால் வாழ்வாதாரம் இழக்கும் தொழிலாளர்கள்!

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் திரும்பும் போது தங்கள் நினைவுகளோடு திரும்பக் கொண்டு செல்வது வர்க்கி மற்றும் நீலகிரி தைலம்.

தலைவலியிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தும் நீலகிரி தைலம் என்று அழைக்கப்படும் யூகலிப்டஸ் தைலத்தின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எங்கு நோக்கினும் சதுப்பு நிலங்களும், மலை முகடுகளையொட்டிய பகுதிகளில் சோலைக் காடுகளுமே நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக இருந்தது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் வரை நீலகிரி தனது சிறப்பு அம்சங்களை இழக்காத நிலையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தால் உணவுக்காகவும், கால்நடைகளின் தேவைக்காகவும் சதுப்பு நிலங்களை அழிக்கும் பணி தொடங்கப்பட்டது.

குறிப்பாக, நீலகிரியிலிருந்த சதுப்பு நிலங்களின் பரப்பை குறைக்கும் வகையில் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன. அதில் ஓர் அம்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டு, சதுப்பு நிலங்களையொட்டியுள்ள பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. யூகலிப்டஸ் மரத்தின் வேர்

நிலத்தின் அதிகபட்ச ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சிவிடும் என்பதோடு, சதுப்பு நிலப் பகுதிகள் நாளடைவில் சராசரி வாழ்க்கைக்கேற்ற தரத்திற்கு வரும் என்பதே அவர்களது நம்பிக்கையாக இருந்தது. இது நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்கும் வந்தது.

இந் நிலையில் நீலகிரியில் நிலத்தடி நீரின் அளவு குறைவதற்கு இங்குள்ள யூகலிப்டஸ் மரங்களே காரணம் என சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு யூகலிப்டஸ் தைலம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.அப்துல் ரகுமான் கூறியது:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம், மலைக் காய்கறி விவசாயம் போன்ற தொழில்களுக்கு இணையாக, சுற்றுலா மாவட்டம் என்ற பெயர் கிடைக்க காரணமாக உள்ள பல்வேறு அம்சங்களில் ஒன்றாக நீலகிரி தைலம் காய்ச்சும் தொழில் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந் நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலரின் கருத்துகளுக்கு ஏற்ப மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதில்லை எனவும், இவை மண் சரிவை தடுப்பதற்கே பயன்படுவதாகவும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னரும் யூகலிப்டஸ் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக அகற்றிய பின்னர் பல்வேறு இடங்களில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்தாலும் அவை தோல்வியையே கண்டுள்ளன.

எனவே, நீலகிரியின் இயற்கை வளத்தின் நலன் கருதியும், இங்குள்ள மக்களின் ஜீவாதார நலன் கருதியும் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் யூகலிப்டஸ் மரக்கன்றுகளை மீண்டும் நடவு செய்ய வேண்டும் என்றார்.

கற்பூர மரங்களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

கலப்படத்தால் தொழில் நசிவு

கற்பூர இலைகளை சேகரித்து தைலம் காய்ச்சுவோருக்கு விற்கும் பணியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஈடுப்ட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களது குடும்பத்தை கவனிக்க கணிசமான வருவாய் கிடைக்கிறது.நீலகிரி தைலம் லிட்டர் ரூ.600 வரை விற்கப்படுகிறது. சீனா தைலம் மற்றும் கலப்படம் காரணமாக ஏற்கனவே இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இந் நிலையில் கற்பூர மரங்களை அகற்றினால் பல்லாயிரம் பேர் வேலை இழப்பார்கள் என கற்பூர தைலம் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x